About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Tuesday, June 30, 2015

19. தானமும் கெட்டது, தவமும் கெட்டது

சுந்தரலிங்கம் தன் பெற்றோர்களிடம் மிகுந்த ஈடுபாடு உடையவர். ஒவ்வொரு வருடமும் அவர்கள் நினைவு நாளன்று ஊர் முழுவதற்கும் அன்னதானம் செய்வது என்பதைக் கடந்த பல வருடங்களாகச் செய்து வந்தார்.

அந்த ஊரில் இருந்த வசதி படைத்தவர்கள் கூட அவர் செய்யும் அன்னதானத்தில் கலந்து கொள்வார்கள். ஏனெனில், தான் அன்னதானம் செய்யும் அன்று ஊரில் யார் வீட்டிலும் சமையல் செய்யக் கூடாது என்பது அவரது அன்புக் கட்டளை.

பிறர் வீட்டில் உண்ணுவதில்லை என்ற விரதத்தைக் கடைப் பிடித்து வந்த வீரராகவன் மட்டும் அதில் கலந்து கொள்ள மாட்டார். ஆனால் அவரது குடும்பத்தினர் கலந்து கொள்வார்கள். அதை வீரராகவன் தடுத்ததில்லை.

வீரராகவன் ஒரு தவ வாழ்க்கை வாழ்பவர். வருடத்தில் பாதி நாட்கள் ஏதோ ஒரு விரதம் என்று சொல்லிச் சாப்பிட மாட்டார். அவர் உடல் இளைத்து எலும்புகள் தெரியும். ஆனால் முகத்தில் ஒரு தெய்வீகக் களை இருக்கும். 

விரதம் இருக்கும் நாட்களில் அவர் முகத்தில் பசிக் களைப்பைப் பார்க்க முடியாது. ஒரு பரவச நிலைதான் அவர் முகத்தில் குடி கொண்டிருக்கும்.

"உங்களுக்கு விஷயம் தெரியுமா? இந்த வருஷம் சுந்தரலிங்கம் ஐயா அன்னதானம் செய்யப் போவதில்லையாம். அந்த வழக்கத்தையே நிறுத்தி விடப் போகிறாராம்" என்றாள்  வீரராகவனின் மனைவி பங்கஜம்,

"என்ன காரணம்?" என்றார் வீரராகவன்.

"இறந்து போனவர்களுக்கு இருபத்தைந்து வருடங்கள் சடங்குகள் செய்தால் போதும் என்று யாரோ சொன்னார்களாம். 'நான்தான் முப்பது வருடங்களாக அன்னதானம் செய்து வருகிறேனே! அதனால் இதோடு போதும் என்று முடிவு செய்து விட்டேன்' என்று சுந்தரலிங்கம் சொன்னாராம்!"

"அவர் அப்படிச் சொன்னதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. ஆனால் இது அவர் வெளியில் சொல்லிக் கொள்கிற காரணமே தவிர, உண்மையான காரணம் இல்லை."

"என்ன சொல்கிறீர்கள்?'

"நம் ஊரில் தொடர்ந்து மூன்று வருடங்களாக மழை இல்லை. விவசாயம் இல்லை. வியாபாரம் இல்லை. எல்லோரும் எப்படியோ வயிற்றையும் வாயையும் கட்டி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்."

"இது போன்ற சமயங்களில்தானே அன்னதானம் அவசியம்?"

"சரிதான். ஆனால் சுந்தரலிங்கம் ஒன்றும் குபேரர் இல்லை. நம்மைப்போல் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்தான். ஒரு சிறிய விவசாயி. அவருக்கும் குடும்பம் இருக்கிறது. 

"அவர் எப்போதும் செய்யும் அன்னதானமே அவர் வசதிக்கு மீறியதுதான். ஆனால் தன் பெற்றோர் மீது இருக்கும் மரியாதைக்காக அவர் இதை ஒரளவு கஷ்டப்பட்டுச் செய்து வந்திருக்கிறார். 

மமழை பொய்த்து வாழ்க்கையே சுமையாகிப் போன நிலையில், கடந்த இரண்டு வருடங்களாக அவர் இந்த அன்னதானத்தை நடத்தியதே பெரிய விஷயம். இந்த வருடம் நிச்சயமாக நடத்த முடியாது என்ற நிலையில்தான் ஏதோ ஒரு காரணத்தைத் தேடி இருக்கிறார்."

"அதற்கு ஏன் ஒரேயடியாக நிறுத்த வேண்டும்? இந்த வருடம் நிறுத்தி விட்டு அடுத்த வருடம் மழை பெய்ததும் மறுபடியும் தொடர்ந்திருக்கலாமே?" என்றாள் பங்கஜம்.

"இது போன்ற விஷயங்கள் ஒருமுறை தடைப்பட்டால் மீண்டும் அவற்றைத் தொடர்வது கஷ்டம். ஒருமுறை தடைப்பட்ட  உறுத்தல் ஆயுள் முழுவதும் இருந்து கொண்டே இருக்கும். அதை விட ஏதோ ஒரு காரணத்தைக் கற்பித்து ஒரேயடியாக நிறுத்தி விட்டால் நிம்மதியாக இருக்கும்" என்றார் வீரராகவன்.

"இதையெல்லாம் நீங்கள் ஒரு அனுமானத்தில்தானே சொல்கிறீர்கள்? அவர் மனதில் என்ன இருக்கிறது என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?"

"அனுமானத்தில் இல்லை பங்கஜம், அனுபவத்தில் சொல்கிறேன்" என்றார் வீரராகவன். "அவருக்காவது அன்னதானம் செய்யப் பொருள் தேவைப்பட்டது. ஒரு காசு செலவில்லாமல் நான் செய்து கொண்டு வந்த சில அனுஷ்டானங்களையே நிறுத்தி விட்டேனே நான்!"

"நிறுத்தி விட்டீர்களா? நான் கவனிக்கவே இல்லையே?" என்றாள் பங்கஜம் வியப்புடன்.

"நான் நிறுத்தியது அதிகாலையில் செய்யும் அனுஷ்டானங்களை. நான் செய்ததையும் நீ பார்த்திருக்க மாட்டாய், நிறுத்தியதையும் பார்த்திருக்க மாட்டாய்!"

"ஏன் நிறுத்தினீர்கள்?"

"முன்பெல்லாம் அதிகாலையில் எழுந்து ஆற்றுக்குப் போய்க் குளித்து விட்டு அங்கேயே என் அனுஷ்டானங்களைச் செய்து விட்டு வருவேன். மழை பெய்யாததால் ஆற்றில் நீர் இல்லாமல் போனதும், நம் வீட்டுக் கிணற்றிலிருந்து தண்ணீர் இழுத்துக் குளித்து வீட்டு வீட்டிலேயே அனுஷ்டானங்களைச் செய்ய ஆரம்பித்தேன். பிறகு கிணற்று நீர் மிகவும் கீழே போனதும், தண்ணீர் இழுப்பதே கஷ்டமாக இருந்தது. சில சமயம் 'இன்று ஒருநாள் செய்யாவிட்டால் என்ன?' என்று தோன்றும். ஒரு நாள் ஒரு எண்ணம் தோன்றியது. 'இவ்வளவு வருடங்களாக இதையெல்லாம் தவறாமல் முறையாகச் செய்து வருகிறோமே, நமக்கும் வயதாகி விட்டது, இனிமேல் இதையெல்லாம் விட்டு விட்டால் என்ன?' என்று யோசித்தேன். இப்போது சில அனுஷ்டானங்களை விட்டு விட்டு நிம்மதியாக இருக்கிறேன். சுந்தரலிங்கமும் என் மனநிலையில்தான் இருந்திருப்பார் என்று நினைக்கிறேன்."

"உங்களால் தண்ணீர் இழுக்க முடியவில்லை என்றால் என்னை எழுப்பி இருந்தால் நான் தண்ணீர் இழுத்துக் கொடுத்திருப்பேனே!" என்றாள் பங்கஜம் ஆதங்கத்துடன்.

"நீ ஏற்கெனவே வீட்டு உபயோகத்துக்காக நாள் முழுவதும் தண்ணீர் இழுத்தும் வெளியிலிருந்து நீர் சுமந்து வந்தும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாய். நான் வேறு உனக்குக் கஷ்டம் கொடுக்க வேண்டுமா?"

"உங்கள் அனுஷ்டானங்களுக்கு உதவி செய்வது எனக்கு ஒரு கஷ்டமா?"

"அனுஷ்டானம் என்பது தன் உடலை வருத்திக் கொண்டு ஒருவர் செய்ய வேண்டிய செயல். மற்றவர்களைக் கஷ்டப்படுத்திச் செய்வதற்குப் பெயர் அனுஷ்டானம் இல்லை, அக்கிரமம்" என்ற வீரராகவன் தொடர்ந்து, "மழை பெய்யாதது எப்படிப்பட்ட பாதிப்புகளையெல்லாம் ஏற்படுத்துகிறது பார்த்தாயா? ஒரு புறம் மற்றவர் நலனுக்காகச்  செய்யப்படும் தானங்கள் நின்று போகின்றன. மறுபுறம் ஒரு மனிதன் தன்னுடைய உயர்வுக்காகச் செய்யும் தவம் போன்ற செயல்களும் நின்று போகின்றன. மழை பொய்ப்பது என்பது பெரிய கொடுமைதான்!" என்றார்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:



அறத்துப்பால்
பாயிரவியல்
அதிகாரம் 2
வான் சிறப்பு
குறள் 19
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்

பொருள்:
மழை பெய்யாவிட்டால் இந்தப் பரந்த உலகத்தில் தானம், தவம் என்ற இரண்டுமே இல்லாமல் போய் விடும்.




No comments:

Post a Comment