About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Sunday, July 5, 2015

24. மனதில் உறுதி வேண்டும்!

"சீடை வாங்கி வைத்திருந்தேனே தீர்ந்து விட்டதா?" என்றான் முகுந்தன்.

"போக வர இரண்டு இரண்டாக எடுத்து வாயில் போட்டுக் கொண்டே இருந்தால் எப்படித் தீராமல்  இருக்கும்? இந்த லட்சணத்தில் உங்களுக்கு கொலஸ்ட்ரால் வேறு! நாக்கை அடக்க முடியாவிட்டால் கொலஸ்ட்ரால் எப்படிக் கட்டுப்பாட்டுக்குள் வரும்?" என்றாள் சுனிதா.

"என்னுடைய அப்பா அம்மா உன்னுடைய அப்பா அம்மா இவர்கள் எல்லாம் கூட நொறுக்குத் தீனிக்கு அடிமைகள்தான். ஒரு புறம் சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் என்று மாத்திரை சாப்பிட்டுக் கொண்டு மறுபுறம் சமோஸா, ஸ்வீட் என்று கொரித்துக் கொண்டே இருப்பார்கள். நம் குடும்பத்தில்  கட்டுப்பாட்டோடு இருப்பவர் தாத்தா மட்டும்தான் . எப்படித் தாத்தா நீங்கள் மட்டும் இவ்வளவு கட்டுப்பாடோடு இருக்கிறீர்கள்?" என்றான் முகுந்தன்.

"சாப்பாட்டு விஷயம் என்று இல்லை, எல்லா விஷயத்திலுமே நான் கட்டுப்பாட்டோடுதான் இருக்கிறேன். இதற்குக் காரணம் நான் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற நோக்கம் மட்டும் இல்லை. இந்தப் பிறவி முடிந்ததும் இன்னொரு பிறவி வராமல் மோட்சத்துக்குப் போக வேண்டும் என்ற ஆசையும்தான் காரணம்" என்றார் தாத்தா.

"அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?" என்றாள் சுனிதா.

"இருக்கிறது. யானையைப் பார்த்திருக்கிறீர்களா? அது பார்ப்பதற்கு சாதுவாகத்தான் இருக்கும். ஆனால் திடீரென்று அதற்கு வெறி பிடித்து விடும். அப்போது அங்குசத்தை வைத்து அதை அடக்குவான் பாகன். நம் ஐம்புலன்களும் யானை போல்தான். திடீர் திடீர் என்று  அந்தப் புலன்களில் ஆசை பெருக்கெடுக்கும்.  ஆசை தலையெடுக்கும்போது அதை அடக்க  மன உறுதி வேண்டும். மன உறுதிதான் ஐம்புலன்களை அடக்க மனிதனிடம் இருக்கும் அங்குசம். இந்த அங்குசத்தைப் பயன்படுத்தி ஆசைகளை அடக்கி வாழ்வதுதான் மோட்சத்துக்குப் போவதற்கு நாம் போடும் விதை. இதை எல்லாம் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களோ என்னவோ! ஆனால் மன உறுதி இல்லாததால்தானே வாயைக் கட்டுப்படுத்த முடியாமல் சாப்பிடக் கூடாதவற்றைச் சாப்பிட்டு நீங்கள் எல்லாம் உங்கள் உடல்நலத்தைக் கெடுத்துக் கொள்வதாக நீங்களே சொல்கிறீர்கள்? மன உறுதியை வளர்த்துக் கொண்டால், முதலில் அது உங்கள் ஆரோக்கியத்துக்கு நல்லது. மோட்சத்துக்குப் போவது பற்றி அப்புறம் யோசிக்கலாம்!" என்றார் தாத்தா.

அறத்துப்பால்
பாயிரவியல்
அதிகாரம் 3
நீத்தார் பெருமை
(நீத்தார் - புலன்களை அடக்கி, ஆசைகளைக் கட்டுப்படுத்தி
நெறியோடு வாழ்பவர்)
குறள் 24
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.

பொருள்:
மன உறுதி என்னும் அங்குசம் நம் ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தி அவை தவறான வழியில் போகாமல் காக்கிறது. இந்த மன உறுதிதான் மோட்சம் அடைவதற்கு நாம் போட வேண்டிய விதையாகும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்


No comments:

Post a Comment