About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Sunday, January 17, 2016

50. மனிதனும் தெய்வமாகலாம்

"அப்பா! அமரர் என்றால் யார்?"

"அமரர் என்றால் தேவர்."

"தேவர் என்றால்?"

"தேவர் என்றால் தேவலோகத்தில் அல்லது சொர்க்கத்தில் இருப்பவர். ஒருவர் இந்த உலகத்தில் இருக்கும்போது நல்ல காரியங்களைச் செய்தால், இறந்த பின் அவர் சொர்க்கத்துக்குச் செல்வார். அங்கே தேவர் போல் வாழ்வார். அதனால்தான் இறந்து போனவர்களை 'அமரர்' என்று சொல்கிறோம். இறந்த பின் அவர் சொர்க்கத்துக்குச் சென்றிருப்பார் என்ற விருப்பத்திலும் நம்பிக்கையிலும் சொல்லப்படுவது இந்த வார்த்தை."

"அப்படியானால் இந்த உலகத்தில் இருப்பவர்கள் யாரும் அமரர் இல்லையா?"

"உயிரோடு இருப்பவர்களைக் குறிக்க அந்த வார்த்தையைப் பயன்படுத்துவதில்லை" என்றார் குணசீலன் எச்சரிக்கை உணர்வுடன்.

பள்ளியில் படிக்கும் பத்து வயது மகனின் கேள்வி குணசீலனின் மனதில் திரும்பத் திரும்ப மேலெழும்பிக்கொண்டே இருந்தது. தனக்குத் தெரிந்த மனிதர்கள் பலரை நினைத்துப் பார்த்தார். அவர்களில் யாரையாவது கடவுளுக்கு நிகரானவர்களாகச் சொல்ல முடியுமா? தெரியவில்லை.

அவருக்கு மிகவும் விருப்பமான பழைய பாடல் ஒன்று நினைவுக்கு வந்தது.

'மனிதன் என்பவன் தெய்வமாகலாம்.'

எப்படி?

அந்தப் பாடலிலேயே சில குறிப்புகள் இருந்தன. ஆனால் நடைமுறை வாழ்க்கையில் தெய்வம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு எவராலாவது வாழ முடியுமா?

அன்று மாலை ஒரு ஆன்மீகச் சொற்பொழிவுக்குச் சென்றார் குணசீலன். சொற்பொழிவாற்றிய அறிஞர் சொன்ன ஒரு விஷயம் குணசீலனின் சிந்தனையைத் தூண்டியது. "விண்ணுலகம் சென்றால் அங்கே அமிர்தம் குடிக்கலாம். அமிர்தம் என்பது என்ன? அளவற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கும் ஒரு பானம். இந்த மண்ணுலகத்திலேயே நமக்கு அமிர்தம் கிடைத்தால் இங்கேயே நாம் தேவ வாழ்க்கை வாழலாமே! மரணத்துக்குப் பின் கிடைக்கப் போகும் அமர வாழ்க்கையை எதிர்பார்த்து இருக்க வேண்டாமே! சரி. அந்த அமிர்தம் எங்கே கிடைக்கும்? குளிர்பானங்கள் விற்கும் கடைகளிலோ, மதுபானம் விற்கும் இடங்களிலோ கிடைக்குமா? கிடைக்காது. வாழ்க்கையை ஒரு இனிமையான அனுபவமாகக் கருதி, வாழ்க்கை தரும் சவால்களை எதிர்கொண்டு தன்னால் இயன்ற வரை வாழ்ந்து மற்றவர்களுக்கும் உதவியாக இருப்பவன் குடிக்கும் தண்ணீர் கூட அமிர்தம்தான். அத்தகைய மனிதர்கள்தான் தேவர்கள் அல்லது அமரர்கள்."

இந்தப் பேச்சு குணசீலனின் சிந்தனையைக் கிளறியது.

சொற்பொழிவாற்றிய பெரியவர் அவர் சொன்னது போன்ற தேவ வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பாரா? தெரியவில்லை. ஆனால் அவர் மனைவியை அவர் ஒதுக்கி வைத்திருப்பதாகச் சொல்கிறார்களே, அது உண்மையாக இருந்தால் அவர் வாழும் வாழ்க்கையை தெய்வீகமான வாழ்க்கை என்று சொல்ல முடியுமா? தனது ஆன்மீகப் பணிக்கு இடையூறு வரக்கூடாது என்பதற்காக அப்படிச் செய்ததாக அவர் காரணம் சொல்லலாம், ஆனாலும் அது ஒரு களங்கம்தானே?

இதைப் பற்றி யாரிடமாவது பேச வேண்டும் என்று அவருக்குத்தோன்றியது.

தன் நண்பர் பூபதியின் வீட்டிற்குச் சென்றார் குணசீலன். பூபதி ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடு உள்ளவர். அதனால் அவரிடம் அந்த ஆன்மீகச் சொற்பொழிவைப் பற்றிப் பேசி விட்டு மண்ணுலகிலேயே தேவ வாழ்க்கை வாழ்பவர்கள் யாராவது இருக்கிறார்களா என்ற தன் ஐயத்தையும் வெளிப்படுத்தினார்.

பூபதிக்கும் இந்தக் கேள்விக்கு விடை தெரியவில்லை. குணசீலன் தன் கேள்விக்கு விடை கிடைக்காத நிலையில்,யோசனையுடன் விடை பெற்றார்.

குணசீலன் சென்றதும், பூபதியிடம் அவர் மனைவி கேட்டாள். "என்ன உங்க நண்பர் இந்த மாதிரி சந்தேகம் எல்லாம் கேட்கறாரு? சந்நியாசி ஆயிடுவார் போல இருக்கே!"

"அப்படி இல்லை. சிறப்பான இல்லற வாழ்க்கை நடத்தறதனாலதான் அவருக்கு இப்படிப்பட்ட சிந்தனையே வந்திருக்கு" என்றார் பூபதி.

"எப்படிச் சொல்றீங்க?"

"இப்ப நான் என்னோட கம்பெனியிலே மானேஜரா இருக்கேன். அதனால இதற்கு அடுத்தபடியான ஜெனரல் மானேஜர் பதவிக்கு உயர முடியுமான்னு யோசிக்கிறேன். நான் ஒரு கிளர்க்கா இருந்தா இப்படிப்பட்ட சிந்தனை எனக்கு வருமா? மனுஷ  வாழ்க்கையைச் சிறப்பா வாழறதாலதான் தேவ வாழ்க்கையைப் பற்றி அவரால யோசிக்க முடியுது!"

"அவர் நல்ல மனுஷர்னு தெரியும். ஆனா இல்லற வாழ்க்கையைச் சிறப்பா வாழறாருன்னு எப்படிச் சொல்றீங்க?"

"அரசாங்க வேலையில இருந்தாலும் நேர்மையா இருக்கறதினால மத்த சிலர் மாதிரி அவரால ரொம்ப வசதியான வாழ்க்கை வாழ முடியல. இதனால அவர் மனைவிக்கு அவர் மேல கோபம். தன்னோட கோபத்தை அவங்க தினசரி வாழ்க்கையில பல விதத்திலும் வெளிப்படுத்தறாங்க. ஆனா குணசீலன் அதைப்பத்திக் கொஞ்சம் கூடக் கவலைப்படாம, தன் மனைவிக்கும் மகனுக்கும் தான் செய்ய வேண்டிய கடமைகளைச் சரியாச் செஞ்சுக்கிட்டிருக்காரு. அதோட இல்லாம மத்தவங்களுக்குத் தன்னால முடிஞ்ச உதவிகளையும் செஞ்சுக்கிட்டிருக்காரு. அவர் மனைவியோட சொந்தக்காரங்க பலருக்கே அவரு நிறைய உதவி செஞ்சிருக்காரு. அது அவர் மனைவிக்கும் தெரியும். ஆனாலும்  அவங்க தன் மனசை மாத்திக்கல! மத்தவங்க மாதிரி தன்னால வசதியா, ஆடம்பரமா வாழ முடியலியேங்கற கோபம் அவங்களுக்கு நிறைய இருக்கு. ஆனா குணசீலன் அதைப் பத்தி எல்லாம் கவலைப்படாம, மனுஷனா இருந்துக்கிட்டே தேவ வாழ்க்கை வாழ முடியுமான்னு சிந்திச்சுக்கிட்டிருக்காருன்னா எப்படிப்பட்ட மனசு அவரோடதுன்னு பாரு!"

அவர் மனைவி மௌனமாக இருந்தாள்.

"அவர் கேட்ட கேள்விக்கு பதில் ரொம்ப சுலபம். மனுஷனா இருந்துக்கிட்டே தெய்வ வாழ்க்கை வாழ்ந்துக்கிட்டிருக்கிறது அவரேதான்! ஆனா நான் இதைச் சொன்னா அவரு ஒத்துக்க மாட்டாரு. அதனாலதான் நான் இந்தக் கேள்விக்கு எனக்கு பதில் தெரியாதுன்னு சொன்னேன்!" என்றார் பூபதி.

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 5
இல்வாழ்க்கை
குறள் 50
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் 
தெய்வத்துள் வைக்கப் படும்.

பொருள்:
இந்த உலகத்தில் வாழும் (இல்)வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்பவன் வானில் இருக்கும் தெய்வத்துக்குச் சமமாகக் கருதப்படுவான்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்

















No comments:

Post a Comment