About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Tuesday, January 26, 2016

52. வெற்றி மீது வெற்றி வந்தும்...

பரத் அலுவலகத்துக்கு வந்து தன் அறைக்குள் சென்று அமர்ந்தபோது தொலைபேசி அடித்தது. அவரது உதவியாளர் வந்தனாதான் பேசினாள்.

"சார், டில்லியிலிருந்து தொழில்துறைச் செயலர் மூன்று முறை ஃபோன் செய்து விட்டார். மறுபடியும் அவரிடமிருந்து அழைப்பு வரக் கூடும்...இதோ வந்தே விட்டது!" என்றாள் அவசரமாக.

"கொடுங்கள்" என்றார் பரத்.

தொழில்துறைச் செயலர் பேசினார். பிரதமருக்குத் தொழில்துறைப்  பிரச்னைகள் பற்றி ஆலோசனை கூற ஒரு குழு அமைக்கப் பட்டிருக்கிறதாம். அதில் உறுப்பினர் ஆக பரத்துக்கு விருப்பமா என்று கேட்டார். மாதம் ஒரு நாள் டில்லி சென்று வர வேண்டி இருக்குமாம் - அரசு செலவில்!

"சார், இது ஒரு பெரிய கௌரவம். நான் ஒரு சாதாரணத் தொழில் அதிபர். என்னை மதித்து..."

"இந்தக் குழுவில் புகழ் பெற்ற தொழில் அதிபர்களைச் சேர்ப்பதை விட சத்தமில்லாமல் சாதித்துக் கொண்டிருக்கும் உங்களைப் போன்றவர்களே இடம் பெற வேண்டும் என்பது பிரதமரின் விருப்பம்!"

தொழில்துறைச் செயலர் சத்தம் இல்லாமல் ஒரு புகழ் மாலையைச் சூட்டி விட்டார்!

"இது பெரிய கௌரவம், அதிர்ஷ்டம், வாய்ப்பு எல்லாம்!"

"நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் இன்னும் நேரடியாக பதில் சொல்லவில்லை. குழுவின் உறுப்பினராக உங்களுக்கு சம்மதம்தானே?" என்றார்  செயலர், அரசாங்க தோரணையில்.

"சம்மதம்தான்" என்று பரத் சொன்னதும் இதற்காகவே காத்திருந்தது போல்  தொலைபேசியை வைத்து விட்டார் அரசுச் செயலர்.

"என் சம்மத்தத்தைக் கேட்டவர் அவர் முடிவைச் சொல்லவில்லையே?" என்ற பரத்தின் கேள்விக்கு சில நிமிடங்களிலேயே ஈ-மெயில் மூலம் பதில் வந்தது - அவரது உறுப்பினர் பதவியை உறுதி செய்து.

அவர் ஈ-மெயிலைப் படித்து முடித்தபோது அவரது கைபேசியில் அழைப்பு வந்தது. மனைவி!

இந்த மகிழ்ச்சியான செய்தியை மனைவியிடம் பகிர்ந்து கொள்ளும் உற்சாகம் அவரிடம் இல்லை. மாறாக, 'என்ன தலைவலியோ?' என்று நினைத்துக்கொண்டேதான் "ஹலோ, சொல்லு" என்றார்.

"என்னத்தைச் சொல்ல? உங்க அம்மாவை முதியோர் இல்லத்தில் சேர்க்க ஏற்பாடு செய்யுங்கள் என்று சொன்னேனே, செய்தீர்களா?"

"இதோ பார், காலையில் ஆஃபீஸ் கிளம்பும்போது ஏதோ சொன்னாய். பேசினால் தகராறு வரும் என்றுதான் பேசாமல் வந்து விட்டேன். இப்போது ஏன் ஆஃபீசுக்கு ஃபோன் செய்கிறாய்?"

"நம்மகிட்டதான் பணம் இருக்கே! நல்ல வசதியான இல்லத்தில உங்கம்மாவைச் சேர்க்க வேண்டியதுதானே?"

"நம்மகிட்டதான் பணம் இருக்கே! நர்ஸ் வச்சு அம்மாவைப் பாத்துக்க நம்மால முடியும். அதைத்தானே செஞ்சுக்கிட்டிருக்கோம்?"

"இங்க பாருங்க, வீட்டில எப்பவும் நர்ஸ் நடமாடிக்கிட்டு! இது ஆஸ்பத்திரி மாதிரி இருக்கு. என்னால இதைச் சகிச்சுக்க முடியல."

"முடியலேன்னா நீ போயிடு முதியோர் விடுதிக்கு. உனக்கும் நாப்பது வயசுக்கு மேலே ஆயிடுச்சு இல்லே!"

பரத் கோபமாக ஃபோனை வைத்து விட்டார்.

கைபேசியில் நிறைய அழைப்புகள் வந்திருந்தன. யார், யார் என்று பார்ப்பதற்குள் மேசை மீதிருந்த தொலைபேசி சிணுங்கியது. அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் வாழ்த்துச் சொன்னார். இதற்குள் எப்படியோ விஷயம் பரவி விட்டது. கைபேசிக்கு வந்திருந்த அழைப்புகளும் இது பற்றியதாகத்தான் இருக்கும்.

அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு அவரை அழைத்து வாழ்த்திய பலர்!

1 மணிக்கு உள்ளே வந்த அவரது செயலர் வந்தனா, "சார். நீங்கள் நேரத்துக்குச் சாப்பிட வேண்டும். அதனால் இன்னும் அரை மணி நேரத்துக்கு நான் எந்த அழைப்பையும் உங்களுக்கு அனுப்பப் போவதில்லை. உங்கள் கைபேசியையும் என்னிடம் கொடுங்கள்" என்று அவர் மேசை மீதிருந்த கைபேசியை உரிமையுடன் எடுத்துக்கொண்டு வெளியே செல்ல முற்பட்டவள் திரும்பி, "வாழ்த்துக்கள் சார், நீங்கள் பிஸியாக இருந்தததால் இத்தனை நேரம் உங்களுக்கு வாழ்த்துச் சொல்ல முடியவில்லை" என்றாள்.

"உங்களுக்கு எப்படித் தெரியும்? ஓ, உங்களைத்தான் என் ஈ-மெயிலைப்  பார்க்கச் சொல்லியிருக்கிறேனே! அலுவலகத்தில் எல்லோருக்கும் தெரியுமா?" என்றார் பரத்.

"இன்னும் சொல்லவில்லை சார். நீங்கள் அனுமதித்தால் சொல்கிறேன்."

"சொல்லி விடுங்கள்" என்றார் பரத்.

அப்போதுதான் அவருக்கு விஷயத்தை மனைவியிடம் சொல்லவில்லை என்று நினைவு வந்தது.

சொல்லி என்ன ஆகப் போகிறது? "அப்படியா?" என்று ஒரு வார்த்தையில் உற்சாகம் இல்லாமல் பதில் சொல்லி விட்டுத் தனக்கு வேண்டிய விஷயங்களைப் பேசத் தொடங்கி விடுவாள் மனைவி என்று நினைத்துக் கொண்டார்.

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 6
வாழ்க்கைத் துணைநலம்
குறள் 52
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.

பொருள்:
மனைவியிடம் குடும்பத்துக்குத் தேவையான பண்புகள் இல்லாவிட்டால், வாழ்க்கையில் வேறு எத்தனை சிறப்புகள் இருந்தும் பயனில்லை.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்













No comments:

Post a Comment