About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Tuesday, March 29, 2016

61. நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...

"பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க!"

இவ்வாறு தன்னையும் தான் கைப்பிடித்த நங்கை மீனாட்சியையும் வாழ்த்தியவர்களில் எவ்வளவு பேருக்கு இந்த வாழ்த்தின் பொருள் தெரியும் என்று நினைத்துப் பார்த்தான் சங்கர்.

திருமணத்துக்கு வந்திருந்த அவன் தந்தையின் நண்பர் தமிழ் அறிஞர் சுந்தரமுர்த்திக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் என்று தோன்றியது.

திருமணச் சடங்குகள் முடிந்து சற்று ஒய்வு கிடைத்தபோது சுந்தரமுர்த்தியிடம் சென்று தன் ஐயத்தைக் கேட்டான் சங்கர்.

"'பதினாறும் பெற்று' என்று வாழ்த்துகிறார்களே, அந்தப் பதினாறு பேறுகள் என்ன என்று தெரிந்து கொள்ள விருப்பம்" என்றான்.

"பலருக்கு இவை என்னவென்று தெரியாது. பலர் இவற்றைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவதும் இல்லை. உன்னுடைய ஆர்வத்தைப் பாராட்டுகிறேன். இந்தப் பதினாறு பேறுகள் என்னென்ன என்பது பற்றிச் சில மாறுபட்ட கருத்துக்கள் உண்டு.

"காளமேகப் புலவரின் ஒரு கவிதையின் அடிப்படையில் சொல்கிறேன். 1.புகழ் 2.கல்வி 3.வீரம் 4.வெற்றி 5.நன்மக்கட்பேறு 6.துணிவு 7.செல்வம் 8.குறைவற்ற (அபரிமிதமான) உணவு  9.எல்லாவிதமான நலன்கள் (சௌபாக்கியம்) 10.சுகங்கள் 11.நல்லறிவு (விவேகம்) 12.அழகு 13.பெருமை (கௌரவம்) 14.அறம்  15.குலம் 16.நீண்ட ஆயுள்.

"இவற்றில் வீரம்-துணிவு, புகழ்-பெருமை போன்றவை ஒரே பொருளைக் குறிப்பதாகத் தோன்றலாம். அதற்குள் நாம் இப்போது போக வேண்டாம். 'குலம்' என்பதற்கு 'குடும்பத்தின் நற்பெயர்' என்று பொருள் கொள்ள வேண்டும். என்ன, பதினாறு பேறுகளைப் பெற்றுக் கொள்ளத் தயாராயிருக்கிறாயா?"

"உங்களைப் போன்ற பெரியவர்களின் ஆசீர்வாதத்தால் இந்தப் பேறுகள் எனக்குக் கிடைத்தால் அது என் அதிர்ஷ்டம்" என்றான் சங்கர்.

"நன்றாகப் பேசக் கற்றுக்கொண்டிருக்கிறாய். உனக்கு ஒரு விஷயம் சொல்கிறேன். என் சிறு வயதில், பதினாறு பேறுகள் என்பதற்குப் பதினாறு பிள்ளைகள் என்று விளையாட்டாகப் பொருள் சொல்வார்கள். புதிதாகக் கல்யாணம் ஆனவர்களை 'பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க' என்று யாராவது வாழ்த்தினால், உடனே கல்யாண மாப்பிள்ளை, 'சார்  அவ்வளவெல்லாம் தாங்காது. ஒன்றிரண்டு பிள்ளைகள் பிறந்தால் போதும்!' என்பார்.

"ஓரிரு தலைமுறைகளுக்கு முன்பு பல குடும்பங்களில் 10,12 குழந்தைகள்  பிறப்பது சகஜம் என்பதால் இப்படி. இப்போது கூட நான் என்ன சொல்வேன் என்றால், வரமளிக்கும் கடவுள் உன்னிடம் 'உனக்கு 16 பேறுகள் வேண்டுமா, அல்லது ஒன்றிரண்டு நல்ல பிள்ளைகள் வேண்டுமா?' என்று கேட்டால், ஒன்றிரண்டு நல்ல பிள்ளைகள் வேண்டும் என்று சொல்வதுதான் புத்திசாலித்தனம்.

"நல்ல பிள்ளைகளைப் பெறுவதை விடச் சிறந்த பேறு வேறு ஏதும் இல்லை. சிந்தித்துப் பார்த்தால், நல்ல பிள்ளைகளைப் பெற்றால், அவர்கள் மூலம் மற்ற பேறுகள் தாமே நம்மைத் தேடி வந்தடையும் என்பதைப் புரிந்து கொள்ளலாம். எனவே, நீ கடவுளிடம் எதாவது வேண்டிக் கொள்வதாக இருந்தால், 'நல்ல பிள்ளைகளைக் கொடு' என்றே  வேண்டிக்கொள்." என்று முடித்தார் சுந்தரமூர்த்தி.

ஒரு ஆர்வத்தில் துவங்கிய பேச்சு நல்ல அறிவுரையில் முடிந்தது சங்கருக்கு மிகவும் திருப்தி அளித்தது,
அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 7
மக்கட்பேறு 
குறள் 61
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.

பொருள்:
எனக்குத் தெரிந்த வரையில், எதை அறிய வேண்டுமோ அதை அறிந்து கொள்ளும் இயல்புள்ள நல்ல மக்களைப் பெறுவதை விடச் சிறப்பான பேறு வேறு எதுவும் இல்லை.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்












No comments:

Post a Comment