About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Thursday, May 12, 2016

62. பாவமூட்டையின் சுமை குறைய வழி

"போன ஜன்மத்தில என்ன பாவம் பண்ணினேனோ தெரியலே, புடிச்சு ஆட்டுது" என்று அலுத்துக்கொண்டார் புண்ணியகோடி.

"புண்ணியகோடின்னு பேரு வச்சுக்கிட்டு நீங்களே இப்படிப் பேசினா, நாங்கள்ளாம் என்ன செய்யறது?" என்றார் நண்பர்களால் செல்லமாகப் பாவி என்று அழைக்கப்பட்ட பா.விஸ்வநாதன்!

"பேரில என்ன இருக்கு? விடாத இருமலோடு ஒத்தன் ஆஸ்பத்திரிக்குப் போனான். டாக்டர் மருந்துச் சீட்டு எழுதறதுக்கு 'உன் பேரு என்ன?'ன்னு கேட்டாரு. 'ஆரோக்கியராஜ்'னு சொன்னான் அவன். ஆரோக்கியத்தில ராஜாவாம்! அது மாதிரிதான். என் பேரு வெற்றிவேல். எனக்கு எல்லாத்திலயும் வெற்றியா கெடச்சுக்கிட்டிருக்கு? இப்ப கூட மூணு சீட்டில முன்னூறு ரூபா தோத்துட்டுத்தான் வரேன்!" என்றார் வெற்றிவேல்!

"அது இருக்கட்டும். இந்தப் பூர்வ ஜன்ம பலன் என்கிறதெல்லாம் உண்மையா? போன ஜன்மத்தில பண்ணின பாவத்துக்கான பலனை இந்த ஜன்மத்தில அனுபவிக்கணுமா?" என்று கேட்டார் புண்ணியகோடி.

"இந்த ஜன்மத்தில மட்டும் இல்ல. அடுத்த பல ஜன்மங்கள்ளேயும் அனுபவிக்க வேண்டி இருக்கும்" என்றார் விஸ்வநாதன்.

"அது ஏன் அப்படி?" என்றார் வெற்றிவேல்.

"ஏன்னா நம்ம பண்ற பாவம் அவ்வளவு! அதற்கான பலன் அத்தனையையும் ஒரே ஜன்மத்தில அனுபவிக்கணும்னா நம்மால தாங்க முடியாதுன்னுதான் கடவுள் அதைப் பிரிச்சு ரெண்டு மூணு ஜன்மங்கள்ள அனுபவிக்கற மாதிரி பண்ணியிருக்காரு" என்று விளக்கினார் விஸ்வநாதன்.

"அப்ப இந்த ஜன்மத்தில பண்ற பாவமெல்லாம் என்ன ஆகும்?" என்று வினவினார் புண்ணியகோடி.

"அதான் பிரச்னையே! பழைய பாவ மூட்டை கொஞ்சம் குறையறதுக்குள்ள, நாம புதுசா பண்ற பாவங்கள்ளாம் சேர்ந்து இன்னும் மூட்டை பெரிசாகிக்கிட்டே போகும்!"

"அப்போ பாவமூட்டை குறையவே குறையாதா? மறுபடி மறுபடி ஜன்மம் எடுத்துக் கஷ்டப்பட்டுக்கிட்டேதான் இருக்கணுமா?"

"ஒரு வழி இருக்கு!" என்ற குரல் கேட்டது. மூவரும் திரும்பிப் பார்த்தனர். பக்கத்தில் இருந்த மரத்தடியில் ஒருவர் அழுக்கு வேட்டியுடன் மண் தரையில் படுத்திருந்தார்.

'யார் இவர்? சாமியாரா? யோகியா இல்லை சித்தரா?' என்று மூவரும் யோசித்துக் கொண்டிருந்தபோதே, அவர் இவர்களைத் திரும்பிப் பார்க்காமலே பேசினார்: "உங்கள் பிள்ளைகள் எந்தப் பழிக்கும் ஆளாகாமல் பண்புள்ளவர்களாக இருந்தால் ஏழு பிறவிக்கும் உங்களை எந்தத் தீமையும் அண்டாது."

"எப்படிச் சொல்றீங்க சாமி?" என்றார் வெற்றிவேல்.

"நான் சொல்லலே. திருவள்ளுவர் சொல்கிறார்" என்று சொல்லி விட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டு தன் தூக்கத்தைத் தொடர்ந்தார் 'சாமியார்.'

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 7
மக்கட்பேறு
குறள் 62
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் 
பண்புடை மக்கட் பெறின்.

பொருள்: 
பழிச்சொல் எதற்கும் ஆளாகாமல் பண்புடன் வாழும் புதல்வர்களைப் பெற்றவர்களை முன்வினைப் பயனால் அவர்களுக்கு ஏற்படும் ஏழு பிறவிகளிலும் எந்தத் தீமையும் அண்டாது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ"

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்














No comments:

Post a Comment