About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Saturday, August 26, 2017

96. சுப்பையா கொடுத்த புகார்

"வாங்க, என்ன விஷயம்?"

"ஒரு புகார் கொடுக்கணும்."

"யார் மேல?"

"என் தம்பி மேல!"

"என்ன பண்ணினாரு அவரு?"

"என்னைக் கொல்லப் போறேன்னு மிரட்டினான்."

"என்ன தகராறு உங்களுக்குள்ள?"

"வரப்புத் தகராறுதான். என் வயலுக்குள்ள ஒரு அடி தள்ளி அவன் வரப்பைப் போட்டிருக்கான். கேட்டதுக்கு அரிவாளை எடுத்து ஒரே சீவா சீவிடுவேன்னு மிரட்டறான்."

இன்ஸ்பெக்டர் ஒரு நிமிடம் மௌனமாக இருந்தார். "சரி. உங்க பேரு, உங்க தம்பி பேரு, ரெண்டு பேரோட விலாசம் இதெல்லாம் ஒரு பேப்பர்ல எழுதிக் கொடுங்க. நான் விசாரிக்கிறேன்."

"சார்! நீங்க உடனே அவனைக் கைது பண்ணணும்."

"சாயந்திரம் உங்க தம்பி வீட்டில இருப்பாரா?"

"இருப்பான். சாயந்திரம் எதுக்கு? இப்பவே என்னோட வாங்க. அவன் வீட்டைக் காட்டறேன். நாங்க ரெண்டு பேரும் பக்கத்துப் பக்கத்து வீடுதான்."

"சாயந்திரம் வரேன். நீங்களும் வீட்டிலதானே இருப்பீங்க?"

வெளியில் போய் விட்டு மாலை வீட்டுக்கு வந்ததும், சுப்பையா தன் மனைவியிடம் "பக்கத்து வீட்டுக்குப் போலீஸ்காரங்க யாராவது வந்தாங்களா?" என்றார்.

"போலீஸ்காரங்க யாரும் வரலை. பேண்ட் சட்டை போட்டுக்கிட்டு ஒருத்தர் வந்தாரு. ரொம்ப நேரமா உங்க தம்பி வீட்டில உட்கார்ந்து பேசிக்கிட்டிருக்காரு."

ஒருவேளை, தான் புகார் கொடுத்திருப்பது தெரிந்து தம்பி முன்ஜாமீன் வாங்குவதற்காக வக்கீல் யாரையாவது வரவழைத்திருப்பானோ?'

சற்று நேரம் கழித்து வாசலில் ஏதோ அரவம் கேட்டது. வாசலில் யாரோ ஒருவர் நின்று கொண்டிருந்தார். 'இவர்தான் தம்பி வீட்டுக்கு வந்தவரோ? இங்கே எதற்கு வந்திருக்கிறார்?'

அருகில் போனதும்தான் அவர் போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று தெரிந்தது.

"சார், நீங்களா? காலையில உங்களை போலீஸ் டிரஸ்ல பார்த்ததால இப்ப சட்டுனு அடையாளம் புரியல."

"உள்ளே வரலாமா?"

"வாங்க சார்!"

இன்ஸ்பெக்டர் உள்ளே வந்து அமர்ந்ததும், "என் தம்பி வீட்டுக்குப் போயிருந்தீங்களா?" என்றார் சுப்பையா.

"அவருகிட்ட பேசிட்டுத்தான் வரேன்."

"அப்ப அவனை அரெஸ்ட் பண்ணலியா நீங்க?" என்றார் சுப்பையா சற்றுக் கோபத்துடன்.

"கொஞ்சம் பொறுமையா இருங்க. ஒத்தர் மீது யாராவது புகார் கொடுத்தா அவங்களை உடனே அரெஸ்ட் பண்ண முடியாது. இப்ப உங்க மேல  உங்க தம்பி புகார் கொடுத்தார்னா நான் உங்களைக் கைது பண்ண முடியுமா?"

"என் மேல புகார் கொடுத்தானா அவன்?" என்றார் சுப்பையா கோபத்துடன்.

"இல்லை. உங்க மேல அவரு ரொம்ப மரியாதை வச்சிருக்காரு. பேச்சுக்குப் பேச்சு எங்க அண்ணன்னுதான் சொல்றாரு."

"ஆனா என்னைக் கொலை பண்ணிடுவேன்னு சொன்னதும் அவன்தான். சாட்சி வேணுமா உங்களுக்கு?"

"சாட்சியெல்லாம் எதுக்கு? அவரே ஒத்துக்கறாரே!"

"அப்ப அவனைக் கைது பண்ணிட வேண்டியதுதானே!"

"கைது பண்ணிடலாம். அதுக்கு முன்னாடி உங்ககிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கிட்டுச் செய்யலாம்னுதான் உங்க வீட்டுக்கு வந்திருக்கேன். அம்மா! குடிக்கக் கொஞ்சம் தண்ணி கிடைக்குமா?"

"பாத்தீங்களா? வீட்டுக்கு வந்தவருக்குத் தண்ணி கூடக் கொடுக்கல. காப்பி சாப்பிடுறீங்களா? இல்லை இளநீர், மோர் ஏதாவது?"

"எதுவும் வேணாம் சார். உங்க தம்பி வீட்டில ஒரு தம்ளர் தண்ணி குடிச்சேன். அதனால உங்க வீட்டிலேயும் ஒரு தம்ளர் தண்ணி குடிக்கிறதுதானே முறை?"

சுப்பையாவின் முகத்தில் முதல்முறையாக இலேசான புன்னகை அரும்பியது. "அது சரி. கைது பண்றதுக்கு முன்னால எங்கிட்ட ஏதோ கேக்கணும்னீங்களே, அது எதுக்கு? நான்தான் புகார் கொடுத்திருக்கேனே!"

"அதனாலதான் உங்ககிட்ட கேக்க வேண்டி இருக்கு! ரெண்டு விஷயம். ஒண்ணு உங்க தம்பி கோபத்தில் அப்படிப் பேசிட்டேன்னு சொல்லி அதுக்காக வருத்தப்பட்டாரு. உங்ககிட்ட மன்னிப்புக் கேக்கப்  போறதாகவும் சொன்னாரு. நீங்க அவரை மன்னிச்சுட்டீங்கன்னா உங்க புகார் மேல நான் நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்காது!..."

"ரெண்டு விஷயம்னு சொன்னீங்களே! ரெண்டாவது என்ன?"

"இப்ப உங்க தம்பியை நான் கைது செய்யறேன்னு வச்சுக்கங்க. அதனால உங்க வரப்புப் பிரச்னை தீர்ந்துடுமா?"

சுப்பையா மௌனமாக இருந்தார்.

"உங்களுக்கு எது முக்கியம் - வரப்புப் பிரச்னை தீர்றதா, அல்லது உங்க தம்பியைக் கைது பண்றதாங்கிறதை நீங்கதான் தீர்மானிக்கணும்!"

சுப்பையா மீண்டும் மௌனமாக இருந்தார்.

"உங்க அப்பா ஒரு வித்தியாசமான மனுஷர்னு நினைக்கிறேன்" என்றார் இன்ஸ்பெக்டர்.

"ஏன் அப்படிச் சொல்றீங்க?" என்றார் சுப்பையா.

"இல்லை நீங்க மூத்தவர். உங்களுக்கு சுப்பையான்னு தம்பி முருகன் பேரை வச்சிருக்காரு. உங்க தம்பிக்கு கணேசன்னு அண்ணன் விநாயகர் பேரை வச்சிருக்காரே, அதுதான் கேட்டேன்."

சுப்பையா வாய் விட்டுச் சிரித்தார். "ஆமாம் இதைப் பத்தி முன்னமே சில பேரு எங்கிட்ட சொல்லி இருக்காங்க."

"உங்க அப்பா நீங்க ரெண்டு பேரும் ஒத்துமையா இருக்கணும்னுதான் எதிர்பார்த்திருப்பார்னு நினைக்கிறேன்."

"நான் மட்டும் அவன்கிட்ட சண்டை போடணும்னா திரியறேன்? ஏண்டா வரப்பைத் தள்ளிப் போட்டேன்னு கேட்டதுக்கு அவன்தான் என்னை வெட்டிடுவேன்னு சொன்னான்."

"அவருதான் அதுக்கு உங்ககிட்ட மன்னிப்புக் கேக்கறேங்கறாரே!"

"மன்னிப்புக் கேட்டா சரியாப் போச்சா? என் வயல்ல ஒரு அடி அகலத்தைப் பூரா  எடுத்துக்கிட்டானே!"

"அதையும் உங்க தம்பிகிட்ட கேட்டேன். மழையில வரப்பு கரைஞ்சு போயிட்டதனால புதுசா வரப்பு போடும்போது தப்பு நடந்திருக்கலாம்னு உங்க தம்பி சொன்னாரு. இது மாதிரி நிறைய பேருக்கு நடந்திருக்காமே! சர்வேயரை வச்சு அளந்து பாத்துக்கலாம்னு சொல்றாரு."

"அப்படிப் பண்ணினா எனக்கு ஒண்ணும் பிரச்னை இல்லை" என்றார் சுப்பையா.

"அப்ப பிரச்னையே இல்லே!  உங்க தம்பி உங்ககிட்ட மன்னிப்புக் கேக்கத் தயாரா இருக்காரு. நீங்க சரின்னு சொன்னா அவரு உங்க வீட்டுக்கு வந்து உங்ககிட்ட மன்னிப்புக்  கேட்டுக்கிட்டு, வரப்பைச் சரி பண்றதைப் பத்தியும் பேசுவாரு."

சுப்பையா மௌனமாக இருந்தார்.

"என்னய்யா யோசிக்கிறீங்க? இன்னும் ஏதாவது சந்தேகம் இருக்கா உங்களுக்கு?"

"ஒரே ஒரு சந்தேகம்தான். பொதுவா போலீஸ்காரங்கன்னா ரொம்பக் கடுமையாப் பேசுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். உங்ககிட்ட புகார் கொடுக்க வரும்போதே தயக்கத்தோடதான் வந்தேன். ஆனா நீங்க இவ்வளவு பொறுமையா, சாந்தமாப் பேசி  எங்க பிரச்னையை முடிச்சு வச்சுட்டீங்களே அது எப்படின்னுதான் யோசிச்சுக்கிட்டிருக்கேன்!"

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 10             
இனியவை கூறல்   
குறள் 96
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை 
நாடி இனிய சொலின்.

பொருள்:  
நன்மை நடக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இனிமையாகப் பேசப்படும் வார்த்தைகளால் விரும்பத்தகாத விளைவுகள் தவிர்க்கப்பட்டு நற்செயல்கள் பெருகும். 

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                    காமத்துப்பால்
























2 comments: