About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Sunday, October 29, 2017

102. கல்லூரிக் கட்டணம்

"என்னடா இப்ப வந்து சொல்றே?" என்றார் ராமமூர்த்தி.

"காலேஜ் நோட்டீஸ் போர்டில போட்டிருக்காங்களாம். இன்னிக்குத்தான் ரவி பாத்துட்டு வந்து சொன்னான்" என்றான் மணி.

"நம்மகிட்ட அட்மிஷன் லெட்டர் கூடக் கிடையாது. அப்ளிகேஷன் ஃபார்ம்ல கரெஸ்பாண்டண்ட் கையெழுத்துப் போட்டதோட சரி. அதையும் ஆஃபீஸ்ல வாங்கி வச்சுக்கிட்டு, நாங்க சொல்ற அன்னிக்கு ஃபீஸ் கட்டிடுங்கன்னு சொன்னாங்க. அதுக்கப்பறம் அவங்ககிட்டேருந்து லெட்டர் கூட வரலை."

"அதெல்லாம் போட மாட்டாங்கப்பா. அப்ளிகேஷன் நம்பரைச் சொல்லி ஃபீஸ் கட்ட வேண்டியதுதான்."

"இப்ப என்ன செய்யறது? இன்னும் நாலு நாள் கழிச்சுத்தான் ரிஜிஸ்ட்ரேஷன். அன்னிக்குத்தான் மீதிப்பணம் கொடுக்கறதாச் சொல்லி இருக்கார் மாணிக்கம். இப்ப அவர்கிட்ட போய்ப் பணம் கேட்க முடியாதே!" என்று கவலைப்பட்டார் ராமமூர்த்தி.

"அப்பா! நீ கஷ்டப்பட்டு யார் யார் கிட்டயோ சிபாரிசு புடிச்சு, இந்த சீட்டை வாங்கி இருக்க. என் ஃபிரண்ட்ஸ் எல்லாம் உன்னோட மார்க்குக்கு இந்தக் காலேஜில எப்படிடா சீட் கிடைச்சதுன்னு கேக்கறாங்க. நாளைக்குப் பணம் கட்டலேன்னா என்னோட சீட்டை வேற யாருக்காவது கொடுத்தாலும் கொடுத்துடுவாங்க."

"காலம் கெட்டுப் போச்சு. இது 1970 ஆச்சே! இதுவே எங்க காலமா இருந்தா..."

"உங்க காலத்தில காலேஜில் படிக்கிற வாய்ப்பே உனக்குக் கிடைக்கலியே அப்பா!" என்றான் மணி.

"இப்ப மட்டும் என்ன? உன்னைக் காலேஜில் படிக்கிற அளவுக்கு நமக்கு வசதியா இருக்கு? பி.யூ.சி வரையிலும் எப்படியோ படிக்க வச்சுட்டேன். பி.எஸ்.சி படிக்க வைக்க, கொஞ்சம் நிலத்தை வித்துத்தானே உன் ஃபீஸுக்கே ஏற்பாடு பண்ணி இருக்கேன்? வர பணத்தை செலவழிக்காம வச்சுக்கிட்டு, மூணு வருஷத்துக்கு ஃபீஸ்  கட்டணும்" என்றார் ராமமூர்த்தி.

"அது சரி. இப்ப ஃபீஸ் கட்ட, பணத்துக்கு என்ன பண்ணப் போறீங்க? மாணிக்கத்தையே கேக்கறீங்களா?" என்றாள் அவர் மனைவி பார்வதி.

"அவரை நமக்குப்  பழக்கம் கிடையாது. நம்ம நிலத்தை வாங்கறவரு அவரு. அவர் கொடுத்த அட்வான்ஸை வாங்கிக் கடனை அடைக்கப் பயன்படுத்தியாச்சு. மீதிப்பணம் ரிஜிஸ்ட்ரேஷன்போதுதான்னு அக்ரிமென்ட்டிலே இருக்கு. இப்ப போய் அவர்கிட்ட எப்படிக் கேக்க முடியும்?"

"பையனை அழைச்சுக்கிட்டுப் போய், கேட்டுத்தான் பாருங்களேன்! நமக்கு வேற வழி என்ன இருக்கு?' என்றாள் பார்வதி.

"சரி. இப்பவே கிளம்பறேன். அவர் இல்லேன்னு சொன்னா அப்புறம் வேற வழி என்னன்னு பாக்கணும்."

ராமமூர்த்தியும், மணியும் மாணிக்கத்தின் வீட்டுக்குப் போனபோது, நல்லவேளையாக அவர் வீட்டில் இருந்தார்.

"வாங்க, வாங்க!" என்று வரவேற்றார் மாணிக்கம்.

"உங்ககிட்ட ஒரு உதவி கேக்கணும்,. நீங்க தப்பா நினைக்கக்கூடாது. இவன் என் பையன். திடீர்னு இவன் காலேஜ் அட்மிஷனுக்கு நாளைக்குள்ள பணம் 
கட்டணும்னு சொல்றாங்க..." என்று ஆரம்பித்தார் ராமமூர்த்தி.

"ஓ! ரிஜிஸ்ட்ரேஷன் அன்னிக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை முன்னாடியே கொடுக்க முடியுமான்னு கேக்க வந்தீங்களா?" என்றார் மாணிக்கம்.

"மொத்தப் பணமும் வேண்டாம். ஒரு ஐநூறு ரூபா இருந்தா போதும், இப்போதைக்கு..."

"எங்கிட்ட கையில பணம் இல்லியே. எனக்கு வர வேண்டிய பணம் வர ரெண்டு நாள் ஆகும். யார்கிட்டயாவது கேட்டுப் பாக்கறேன். சாயந்திரம் வர முடியுமா?"

"வரோம் சார். எப்ப வரணும்னு சொல்லுங்க."

"ஆறு மணிக்கு மேல வாங்களேன். நீங்க வர வேண்டியதில்லை. உங்க பையனை அனுப்பிச்சாப் போதும்."

மாலை 7 மணிக்கு ராமமூர்த்தி மாணிக்கத்தின் வீட்டுக்குச் சென்றார்.

"வாங்க. நீங்களே வந்துட்டீங்களா? பையனை அனுப்பிச்சாப் போதும்னு சொன்னேனே. நீங்க ஏன் சிரமப்படறீங்க?"

"நான் எதுலயாவது கையெழுத்துப் போட வேண்டியிருக்குமோன்னு நெனைச்சுத்தான்..."

"கையெழுத்தா? அதுதான் சப் ரிஜிஸ்திரார் ஆஃபீஸ்ல கையெழுத்துப் போடப் போறீங்களே! இந்தாங்க பணம். சப் ரிஜிஸ்திரார் ஆஃபீஸ்ல மீதிப் பணத்தைக் கொடுக்கும்போது இந்த ஐநூறு ரூபாயைக் கழிச்சுக்கறேன்."

"நீங்க செஞ்சது பெரிய உதவி. யார்கிட்ட கேக்கறதுன்னே தெரியாமத் தவிச்சுக்கிட்டிருந்தேன்."

"இதுல என்னங்க இருக்கு? நான் பெரிசா ஒண்ணும் பண்ணிடல! ரிஜிஸ்ட்ரேஷன் போது கொடுக்க வேண்டிய பணத்தில் ஒரு சின்னப் பங்கை நாலு நாள் முன்னாடியே கொடுத்திருக்கேன், அவ்வளவுதானே?"

"உங்களுக்கு வேணும்னா இது சின்ன உதவியா இருக்கலாம். எங்களைப்  பொருத்த வரையிலே நீங்க சரியான நேரத்தில உதவி பண்ணி என் பையனோட படிப்பு  தடைபடாம பண்ணியிருக்கீங்க.  நானும் சரி, என் பையனும் சரி, இந்த உதவியை எப்பவுமே மறக்க மாட்டோம்" என்றார் ராமமூர்த்தி.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 11             
செய்ந்நன்றி அறிதல்    
குறள் 102
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

பொருள்:  
உரிய காலத்தில் செய்யப்படும் உதவி சிறியதாக இருந்தாலும், அது இவ்வுலகை விடப்  பெரியதாகக் கருதப்படும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                   காமத்துப்பால்














No comments:

Post a Comment