About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Monday, December 11, 2017

113. பிரேக்கிங் நியூஸ்!

"சொல்லுங்க. எங்கிட்ட தனியாப் பேசணும்னு சொன்னீங்களே!" என்றான் 'தினப்பதிவு' பத்திரிகையின் முதன்மை ஆசிரியர் அருண்.

"சார்! தப்பா நெனச்சுக்கலைன்னா ஒண்ணு கேக்கலாமா?" என்றான் ரமணன். சமீபத்தில்தான் பத்திரிகையில் சேர்ந்திருந்த துடிப்பு மிக்க இளைஞன் அவன்.

"தயங்காம கேளுங்க."

"இல்லை, நாம நடுநிலைமை வகிக்கிற பத்திரிகை. ஆனா வரப்போற தேர்தல்ல ஆளுங்கட்சியைத் தோக்கடிக்கணும்னு தலையங்கம் எழுதி இருக்கீங்களே! இது முரண்பாடா இல்லியா?"

"நல்ல கேள்விதான். நீங்க புதுசா வேலைக்குச் சேர்ந்திருக்கிறதனால உங்களுக்குச் சில விஷயங்களைத் தெளிவு படுத்தணும். நாம நடு நிலை வகிக்கிறோம்னா நாம எந்தக் கட்சிக்கும் ஆதரவான பத்திரிகை இல்லை என்று பொருள். ஒரு செய்தி ஒரு கட்சிக்கு சாதகமா இருக்கலாம், இன்னொரு கட்சிக்கு பாதகமா இருக்கலாம். அதைப் பத்தியெல்லாம் கவலைப்படாம, நாம செய்தியை அப்படியே கொடுக்கிறோம்.

"ஆனா எடிட்டோரியல் பாலிசி வேற. ஒரு கட்சி அல்லது ஆட்சியோட செயல்கள் நல்லா இருந்தா பாராட்டுவோம், இல்லேன்னா, குறை சொல்லுவோம். அது போல தேர்தல் சமயத்தில இப்ப இருக்கிற ஆட்சி எப்படி இருந்தது, அதை மறுபடியும் தேர்ந்தெடுக்கலாமான்னு நம்ம கருத்தைச் சொல்றோம். இப்ப இருக்கற ஆட்சி ரொம்ப மோசமா இருக்கறதுனால, இதைத் தோக்கடிக்கணும்னு சொல்றோம். இப்படிச் சொல்றதனால மறைமுகமா எதிர்க்கட்சியை நாம ஆதரிக்கிற மாதிரி தெரியலாம். ஆனா அது உண்மை இல்லை.

"போன தேர்தலின் போது, இப்ப எதிர்க்கட்சியா இருக்கறவங்கதான் ஆட்சியில இருந்தாங்க. அப்ப அந்த ஆட்சியைத் தூக்கி எறியணும்னுதான் எழுதினோம். மக்களும் அதே மாதிரி நெனச்சு அவங்களை வீட்டுக்கு அனுப்பிட்டு இவங்களைக் கொண்டு வந்தாங்க.

"இப்ப இவங்க தோத்தா மறுபடி அவங்கதான் வருவாங்க. ஜனநாயகத்தில் வேற வழி இல்லை. சில சமயம் புதுசா சில சக்திகள் பதவிக்கு வரலாம், ஆனா அவங்களும் ஒழுங்கா ஆட்சி நடத்துவாங்கன்னு சொல்ல முடியாது. அதனால ஒரு ஆட்சி மோசமா இருக்கும்போது அதைத் தூக்கி எறியணும்னு சொல்றதுதான் நியாயம். கடமை கூட. அதுதான் நடுநிலைமை."

"நீங்க சொல்றது எனக்குப் புரியுது சார். ஆனாலும் இப்ப ஆட்சியில இருக்கிற 'தமிழ் மண்' கட்சியை நாம கடுமையா எதிர்க்கிறதாகவும், எதிர்க்கட்சியா இருக்கிற 'சமூக முன்னேற்றக் கட்சி'யை பலமா ஆதரிக்கிறதாகவும் நிறைய வாசகர்கள் நினைக்கிறாங்களே!"

"இது மாதிரி கருத்துக்கள் இருக்கிறது சகஜம்தான். புதுசா வர ஆட்சியும் மோசமாத்தான் இருக்கப் போகுது. அதை நாம கடுமையா விமர்சிக்கும்போது ஜனங்க நம்மளைப் புரிஞ்சுப்பாங்க.... சொல்ல முடியாது. அடுத்த தேர்தல்ல அவங்களுக்கு ஓட்டுப் போடாதீங்கன்னு எழுதினா, நம்மளை 'தமிழ் மண்'ணுக்கு ஆதரவான பத்திரிகைன்னு சொன்னாலும் சொல்லுவாங்க! நாம அதைப் பத்திக் கவலைப்படக் கூடாது. செய்திகளை உண்மையா வெளியிட்டு, நம்ம கருத்துக்களை நேர்மையா சொல்லிக்கிட்டிருந்தா, நாம வேற எதைப் பத்தியும் கவலைப்பட வேண்டாம்."

"சார்! மறுபடியும் இந்தக் கருத்தைச் சொல்றேங்கறதுக்காக நீங்க என்னைத் தப்பா நினைக்கக் கூடாது. சமீபத்தில நடந்த பத்திரிகையாளர் ரகுவோட கொலையில ஆளுங்கட்சிக்குத் தொடர்பு இருக்குன்னு நாம எழுதிக்கிட்டிருக்கோம்."

"ஆமாம். அப்படி நினைக்கறதுக்கு நிறையக் காரணங்கள் இருக்கே. ஆளுங்கட்சிக்காரங்க அவரை மிரட்டி இருக்காங்க. அவர் போலீஸ் பாதுகாப்பு கேட்டும் அவருக்குப் பாதுகாப்புக் கொடுக்கல. இதையெல்லாம் வச்சுதான் ஆளுங்கட்சி மேல சந்தேகம் இருக்குன்னு நாம சொன்னோம். நாம மட்டும் இல்ல, வேற பல பத்திரிகைகளும் அப்படித்தானே எழுதிக்கிட்டிருக்காங்க?"

"ஆனா நம்ம பத்திரிகைக்கு நம்பகத்தன்மை அதிகமாச்சே சார்! நாம அப்படி சந்தேகப்பட்டு எழுதினா அது உண்மையா இருக்கும்னு ஜனங்களும் நம்புவாங்களே சார்!"

"உண்மைதான். ஆனா நாம ஆதாரம் இல்லாம அவதூறா எழுதலியே? நாம சில கேள்விகளை எழுப்பி இருக்கோம். அந்தக் கேள்விகளுக்கு அரசாங்கத்திலிருந்து சரியான பதில் இல்லியே!"

"இது தேர்தல்ல ஆளுங்கட்சிக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம் இல்லியா?"

"நிச்சயமா.. ஏற்கெனவே போட்டி கடுமையா இருக்கும்னுதான் கருத்துக் கணிப்புகள் எல்லாம் சொல்லுது. இந்த விவகாரத்தினால ஆளுங்கட்சிக்கு பெரிய சரிவு ஏற்படலாம்."

"ஒருவேளை இந்தக் கொலையில ஆளும் கட்சிக்கு சம்பந்தம் இல்ல, வேற யாரோ செஞ்சிருக்காங்கன்னு ஒரு ஆதாரம் கிடைச்சா, அதை நம்ம பத்திரிகையிலே வெளியிடுவீங்களா சார்?"

"ஏன், உங்ககிட்ட அப்படி ஏதாவது ஆதாரம் இருக்கா?" என்றான் அருண் சிரித்தபடி.

"இருக்கு சார்!" என்றான் ரமணன்.

"சொல்லுங்க" என்றான் அருண் சற்று வியப்புடன்.

"சார்! இது ஒரு பெரிய ஸ்கூப். ரகுவைக் கொலை பண்ணின ஆளை போலீஸ்ல புடிச்சுட்டாங்க. ஒரு தொழிலதிபர் சொல்லித்தான் இந்தக் கொலையைச் செஞ்சதா அவன் ஒப்புத்துக்கிட்டிருக்கான். ஆனா இந்த அரசாங்கத்துக்கு எதிரா இருக்கற சில போலீஸ் உயர் அதிகாரிங்க இந்தக் கைதை ரகசியமா வச்சுருக்காங்க. இந்த விஷயம் வெளியானா, அது தேர்தல்ல ஆளும் கட்சிக்குச் சாதகமான நிலையை ஏற்படுத்தும். அதை அவங்க விரும்பல. அதனால அவனை இன்னும் விசாரிக்கிற மாதிரி விசாரிச்சுக்கிட்டிருக்காங்க. இன்னும் ரெண்டு நாள்ள தேர்தல் முடிஞ்சுடும். அதுக்கப்பறம் இந்த விஷயத்தை வெளியில சொல்லலாம்னு இருக்காங்க."

"மை காட்! இது மட்டும் உண்மையா இருந்தா தேர்தல் முடிவையே பாதிக்குமே! ஆளுங்கட்சிக்கு எதிரா சதி பண்ணி, எதிர்க்கட்சிங்கதான் இப்படி ஒரு பொய்ப் பிரசாரத்தைப் பண்ணி இருக்காங்கன்னு ஜனங்க நினச்சு ஆளும் கட்சிக்கு ஒட்டுப் போட்டுடுவாங்களே! ஆனா இந்த நியூஸ் உங்களுக்கு எப்படித் தெரியும்?"

"சார்! போலீஸ் இலாகாவிலேயே நாலஞ்சு பேருக்குத்தான் இது தெரியும். அவனைக் கைது பண்ணின சப் இன்ஸ்பெக்டருக்கு இதை மறைச்சு வைக்கறது பிடிக்கல. அவர்தான் எங்கிட்ட சொன்னாரு."

"அவ்வளவுதானா? அதை வச்சு நாம நியூஸ் போட முடியாது, ரமணன், உங்களுக்குத்தான் நம்ம பாலிசி தெரியுமே! ஒண்ணு யாராவது வெளிப்படையா பேட்டி கொடுத்திருக்கணும். அல்லது வேற ஏதாவது ஆதாரம் இருக்கணும். 'பெயர் சொல்ல விரும்பாத ஒரு போலீஸ் அதிகாரி சொன்னார்'னு நாம நியூஸ் போட முடியாது."

"ஆதாரம் இருக்கு சார்."

"என்ன ஆதாரம்?"

"அந்த சப் இன்ஸ்பெக்டர் ரிஸ்க் எடுத்து அந்தக் கைதியைப் பேட்டி எடுக்க என்னை அனுமதிச்சாரு. பேட்டியில அவன் உண்மையை எங்கிட்ட சொல்லியிருக்கான். பேட்டியை ரிக்கார்ட் பண்ணி இருக்கேன். ஃபோட்டோ எடுக்க மட்டும் அந்த சப் இன்ஸ்பெக்டர் என்னை அனுமதிக்கல."

"ரிக்கார்ட் பண்ணினதைப் போட்டுக் காட்டுங்க"

ஒலிப்பதிவு செய்யப்பட்ட பேட்டியைப் பத்து நிமிடம் அமைதியாகக் கேட்ட பிறகு, "வெரி குட். பெரிய ஸ்கூப்தான் இது. யூ ஹேவ் டன் எ கிரேட் ஜாப்!" என்று பாராட்டினான் அருண்.

"இந்தச் செய்தியை வெளியிடப் போறீங்களா சார்?" என்றான் ரமணன்.

"நிச்சயமா! ஆனா உங்களோட பாதுகாப்பைக் கருதி, நீங்கதான் பேட்டி எடுத்தீங்கங்கறதை இப்ப சொல்லப் போறதில்ல. போலீஸ் மேல குத்தம் சொல்லாம, அதிக விவரங்கள் கொடுக்காம பேட்டியை மட்டும் அப்படியே வெளியிடுவோம். போலீஸ் தரப்புலேருந்து இது உண்மைதான்னு கன்ஃபர்மேஷன் வந்தப்பறம் உங்க பேரை வெளியிடுவோம். அப்ப நீங்க ஒரு பெரிய ஹீரோவாயிடுவீங்க! கங்கிராசுலேஷன்ஸ்."

"ஆனா இந்தப் பேட்டி வெளியானா அது ஆளும் கட்சிக்கு சாதகமாயிடுமே சார்!"

"உண்மைதான். அதுக்காக நமக்குக் கிடைச்சிருக்கிற செய்தியை நாம வெளியிடாம இருக்க முடியாது."

"ரெண்டு நாள்ள தேர்தல் முடிஞ்சுடும். அதுக்கப்பறம் வெளியிடலாம் சார். ஓட்டுப்பதிவு முடிஞ்ச அடுத்த நிமிஷமே நம்ம வெப்சைட்டில் போட்டுடலாம்."

"நோ! இந்த ஆட்சி போக வேண்டியதுதான். நாம பேட்டியை வெளியிடறதனால இந்த நல்லது நடக்காம போகலாம். ஆனா இதை வெளியிடாம இருந்தா நாம இத்தனை நாளாக கடைப்பிடிச்சுக்கிட்டு வந்த நியாயம், நடுநிலைமை இதையெல்லாம் காத்தில விட்டுட்ட மாதிரி ஆகும். ஐ வில் நெவர் டூ தட். பேட்டியை வெளியிட்டுட்டு, 'ஆளும்கட்சி மீது சுமத்தப்பட்ட கொலைப்பழி உண்மை இல்லைங்கறதனால இந்த ஆட்சி போக வேண்டியதுதாங்கறதுக்கான மத்த காரணங்கள் மாறல, இந்த ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டியதுதான்'னு ஒரு தலையங்கம் எழுதிடலாம். அதற்குப் பிறகு மக்களோட முடிவு!" என்றான் அருண்.

தன் முதன்மை ஆசிரியரைக் கூடுதல் மரியாதையுடன் பார்த்தான் ரமணன்.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 12             
நடுவு நிலைமை     
குறள் 113
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்.

பொருள்:  
நடுநிலைமை தவறி நடந்து கொள்வதால் நன்மை ஏற்படும் என்ற நிலையிலும், நடுநிலை தவறாமல் செயல்பட வேண்டும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

குறள் 112
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்






















No comments:

Post a Comment