About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Monday, January 1, 2018

116, மாற்றி எழுதிய தீர்ப்பு

நாளை தீர்ப்பளிப்பதாக அவர் கூறி நீதிமன்ற நோட்டிஸ் போர்டிலும் போட்டு விட்டார்கள்.

பத்து கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து யாருடையது என்று அவர்தான் முடிவு செய்ய வேண்டும்.

தீர்ப்பின் பெரும்பகுதியை அவர் எழுதி விட்டார். இரு தரப்பினரின் வாதங்களைத் தொகுத்து எழுதியாகி விட்டது. அந்த வாதங்கள் பற்றித் தன்னுடைய கருத்தை எழுதி, எந்தத் தரப்பு வாதத்தைத் தான் ஏற்றுக் கொள்கிறேன் என்று எழுதி, அதற்கான காரணங்களைக் குறிப்பிட வேண்டும்.

இன்னும் இருபது பக்கங்கள் எழுத வேண்டி இருக்கலாம்.

இருபது!

அந்த எண் அவர் நினைவை வேறு பக்கம் செலுத்தியது.

ருபது லட்சம்!

அதுதான் அவர்கள் அவருக்குக்  கொடுப்பதாகச் சொன்ன தொகை - அவர்களுக்குச் சாதகமாக அவர் தீர்ப்பு எழுதினால்!

ஒருநாள் காலையில் அவர் நடைப் பயிற்சி செய்து கொண்டிருந்தபோது, அவர் பக்கத்தில் நடந்து வந்த முதியவர்தான் முதலில் இதைப் பற்றிப் பேசினார். அவர் உடனே கோபப்பட்டு மறுத்துப் பேச, அமைதியாக இருப்பதுதான் அவருக்கு நல்லது என்று அந்த முதியவர் அறிவுறுத்தினார்.

அதற்குப் பிறகு, பல சமயங்களில் வேறு சிலர் மூலமாக அவருக்கு ஒரு செய்தி சொல்லப்பட்டது. அவர்களுக்குச் சாதகமாக அவர் தீர்ப்பு எழுதினால், அவருக்கு 20 லட்சம் ரூபாய் கொடுக்கப்படும். யாரும் கண்டு பிடிக்க முடியாத விதத்தில், பணம் எப்படி, எவ்வாறு கொடுக்கப்படும் என்பதெல்லாம் அவருக்கு விவரமாக விளக்கப்பட்டது. தான் அப்படித் தீர்ப்பளித்தாலும் இன்னொரு தரப்பு மேல்முறையீடு செய்யுமே என்று அவர் சொல்லிப் பார்த்தார்.

அதைப் பற்றி அவர் கவலைப்பட வேண்டாம் அன்று அவர்கள் சொல்லி விட்டார்கள். 'கீழே பார்த்துக் கொண்ட எங்களால் மேலே பார்த்துக் கொள்ள முடியாதா?' என்றார்கள்.

இத்தனை வருடங்களில் அவர் நடுநிலை தவறியதில்லை. அவரது நேர்மைக்காக அவர் மிகவும் மதிக்கப்பட்டார். நேர்மையாக இல்லாத அவருடைய மேலதிகாரிகள் கூட அவரை மரியாதையுடன்தான் பார்த்தனர்.

'ஏன் எனக்கு இந்தச் சபலம்? இத்தனை நாள் இல்லாமல் இப்போது ஏன் என் மனம் ஊசலாடுகிறது? ஒய்வு பெறும் சமயம் ஒரு பெரிய தொகை கிடைத்தால் பிற்காலத்தில் வசதியாக இருக்கலாமே என்றா?'

அவருக்குப் புரியவில்லை. ஆனால் முதல் முறையாக அவருக்கு ஒரு தடுமாற்றம் ஏற்பட்டது. அதனால்தான் எப்போதும் இரண்டு நாட்கள் முன்பே தீர்ப்பை எழுதி முடித்து விடும் வழக்கமுடைய அவர் இப்போது கடைசி நாள் வரை எழுதி முடிக்காமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்.

வர் ஒரு முடிவுக்கு வந்தார்.

இத்தனை ஆண்டுகள் நேர்மையாக இருந்தாகி விட்டது. ஒருமுறை பணத்துக்காக சற்று மாறுபட்டு நடந்து கொண்டால் என்ன?

கிடுகிடுவென்று தீர்ப்பை எழுதி முடித்தார். அவர் எப்போதுமே தீர்ப்பைக் கையால் எழுதி, நீதிமன்றத்தில் படித்த பிறகுதான், டைப் செய்யக் கொடுப்பது வழக்கம். தன் டைப்பிஸ்டுக்குக் கூடத்  தீர்ப்பின் விவரம் தெரியக் கூடாது என்று  கவனமாகச் செயல்பட்டவர் அவர்.

இரவில் திடீரென்று விழிப்பு வந்தது. தலைவலி! எழுந்து மாத்திரையை விழுங்கி விட்டுப் படுத்துக் கொண்டார். வலி போகவில்லை. நேரமாக ஆக வலி அதிகம் ஆகிக்கொண்டே இருப்பது போல் இருந்தது.

அவருக்குப் பழைய நினைவு வந்தது.

சுமார் 20 வருடங்களுக்கு முன்பு அவருக்கு திடீரென்று ஒற்றைத் தலைவலி வர ஆரம்பித்தது. திடீர் திடீரென்று வரும். வந்தால் பலமணி நேரம்  நீடிக்கும். துளை போடும் இயந்திரத்தினால் யாரோ தலையைக் குடைவது போல் துடிதுடிக்கச் செய்யும் வலி.

பல ஆண்டுகள் இந்தத் தலைவலியால் அவதிப்பட்டார் அவர். பலவகை மருந்துகள் சாப்பிட்டும் வலி குறையவில்லை.

ஒருமுறை தன் குலதெய்வம் கோவிலுக்குப் போயிருந்தார். 'நான் ஒரு சிறிய தவறு கூடச் செய்யாமல் நேர்மையாக வாழ்ந்து வருகிறேன். என்னை ஏன் இப்படி வாட்டி வதைக்கிறாய்?' என்று குலதெய்வத்திடம் முறையிட்டார்.

இதற்குப் பிறகு சில மாதங்களில் அவர் தலைவலி படிப்படியாகக் குறைந்து பிறகு முழுவதுமாக நின்று விட்டது. அவர் சாப்பிட்ட சித்த மருந்துதான் அவரை குணப்படுத்தியது என்று அவர் மனைவி சொன்னாள். ஆனால், தான் குலதெய்வத்திடம் முறையிட்டதால் குலதெய்வம் தன் மீது கருணை காட்டியதாக அவர் நம்பினார்.

அந்த நினைவு இப்போது வந்ததும், அந்தப் பழைய ஒற்றைத் தலைவலிதான் திரும்ப வந்து விட்டதோ என்று தோன்றியது.

தூங்க முடியாமல், வலி பொறுக்க முடியாமல் நீண்ட நேரம் துடித்தார்.

'கடவுளே! என்னை ஏன் இப்படி வாட்டி வதைக்கிறாய்?' என்று அலறத் தோன்றியது. முன்பு தான் குலதெய்வத்திடம் முறையிட்டது நினைவுக்கு வந்தது.

இப்போது அப்படி முறையிட முடியுமா?

வலியையும் மீறி அவர் ஒரு தெளிவைத் தனக்குள் உணர்ந்தார்.

படுக்கையிலிருந்து துள்ளி எழுந்து தான் எழுதி வைத்திருந்த தீர்ப்புக் காகிதங்களை எடுத்தார். கடைசி இருபது பக்கங்களை மாற்றி எழுதினார். ஒருவித வெறி வந்தது போல் கை வேகமாக இயங்கித் தீர்ப்பை எழுதி முடித்தது.

மாற்றி எழுதப்பட்ட தீர்ப்பை எடுத்து உள்ளே வைத்து விட்டு மீண்டும் படுக்கையில் விழுந்தார். வலி இன்னும் குறையவில்லை. ஓருவேளை அவர் தீர்ப்பை நீதிமன்றத்தில் படித்து முடித்த பிறகு குறையலாம்!


அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 12             
நடுவு நிலைமை     
குறள் 116
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம் 
நடுவொரீஇ அல்ல செயின்.

பொருள்:  
தான் நடுநிலைமை தவறிச் செயல்பட்டால் தனக்கு கெடுதல் வரும் என்பதை ஒருவன் உணர வேண்டும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

குறள் 115
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்






















No comments:

Post a Comment