About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Wednesday, January 3, 2018

117. விளையாட்டுத் திடல்

அறைக்கதவைத் தயக்கத்துடன் திறந்து உள்ளே வந்த மணவாளனை உட்காரும்படி சைகை காட்டினார் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த வேலாயுதம்.

பேசி முடித்ததும் மணவாளனைப் பார்த்துப் புன்னகை செய்தபடியே "வாங்க. எப்படி இருக்கீங்க?" என்றார். 

"நல்லா இருக்கேன். நீங்க வரச் சொன்னதா ரவி சார் சொன்னாரு."

"ஆமாம். எதுக்குன்னு உங்களுக்குத் தெரிஞ்சிருக்குமே!"

மணவாளன் மௌனமாக இருந்தார்.

"அந்த விளையாட்டுத் திடல் சம்பந்தமாத்தான். அது சும்மா பாழடைஞ்சுதானே  கிடக்கு? அதை யாராவது பயன்படுத்திக்கறதுக்குக் கொடுக்கறதில என்ன தப்பு?"

"சார்! உங்களுக்குத் தெரியாதது இல்ல. அது கார்ப்பரேஷனுக்குச் சொந்தமான இடம். அது பொதுமக்களுக்கான விளையாட்டுத் திடல். ஆனா அதை சரியாப் பராமரிக்காததால புதர்  மண்டிக் கிடக்கு. மக்கள் அதை பப்ளிக் டாய்லட்டாவும் பயன்படுத்தறாங்க. அந்த இடத்தை கிளீன் பண்ணி, பொதுமக்களுக்குப் பயன்படற மாதிரி செய்யணும்னு நாம கார்ப்பரேஷனுக்குப் பல தடவை லெட்டர் போட்டிருக்கோம்."

"அது சரி. அவங்கதான் ஒண்ணும் செய்யலியே. இதுக்கெல்லாம் செலவழிக்கப் பணம் இல்லைம்பாங்க. மழைக்காலம் வரப் போகுது. மழைத்தண்ணி போற குழாய்களை சுத்தம் பண்ற வேலையையே அவங்க இன்னும் ஆரம்பிக்கல. இதையா செய்யப் போறாங்க?"

"அதுக்காக?"

"அந்த இடம் இன்னும் மோசமாத்தான் போகும். அதனாலதான் அந்த இடத்தில ஒரு ஜிம் கட்டறதுக்காக ஒரு பார்ட்டிக்குக் கொடுக்கலாம்னு அமைச்சர் சொல்றாரு. நாம அதுக்கும் தடை போட்டா எப்படி?"

"சார்!  பக்கத்தில இருக்கற ஒரு தனியார் பள்ளி அந்த இடத்தை சுத்தம் பண்ணி பள்ளிக்கூடத்துக்கு விளையாட்டுத் திடலா மாத்திக்கறோம்னு சொன்னாங்க. சனி ஞாயிறுல அந்த இடத்தைப் பொதுமக்கள் பயன்படுத்திக்கறதுக்கும் அனுமதிக்கறேன்னாங்க. அதுக்கே நாம ஒத்துக்கலியே!"

"அரசாங்க இடத்தை இவங்க எடுத்துக்கிட்டு, போனாப் போகுதுன்னு வாரத்தில ரெண்டு நாள் பொதுமக்களுக்கும் அனுமதி கொடுப்பாங்களாம்! அதை எப்படி நாம ஏத்துக்க முடியும்?"

"சரி சார்! அது மாணவர்களுக்குப் பயன்பட்டிருக்கும். அதுக்கே நாம ஒத்துக்கல. அப்படி இருக்கறச்சே தனியாருக்கு அந்த இடத்தை சும்மா கொடுக்கறதுக்கு நாம எப்படி ஒத்துக்க முடியும்?"

"சும்மா கொடுக்கலியே! வாடகைக்குத் தானே கொடுக்கறோம்?"

:சார்! பத்து கோடி ரூபா மதிப்புள்ள இடத்தை 99 வருஷத்துக்கு மாசம் 1000 ரூபா வாடகைக்குக் கொடுக்கறது எப்படி சார் நியாயமாகும்?"

"நியாய அநியாயத்தைப் பத்திப் பேசறதுக்கு நீங்களும் நானும் யாரு? அமைச்சர் தனக்கு வேண்டியவருக்கு அந்த இடத்தைக் கொடுக்க விரும்பறாரு! இது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்தான். 'அந்த இடம் பயன்படுத்த முடியாத அளவுக்கு மோசமா இருக்கு' ன்னு நம்ம இலாக்காவிலிருந்து ஒரு ரிப்போர்ட் வேணும். நீங்கதான் முதல் நிலை அதிகாரி. நீங்கதான் இந்த மாதிரி ரிப்போர்ட் எழுதணும். நாங்க எல்லோரும் அதை அப்படியே ஆமோதிச்சு எழுதிட்டா அதோட அடிப்படையில நிலத்தை அமைச்சரோட நண்பருக்கு 99 வருஷ லீசுக்குக் கொடுக்க செகரெட்டரி உத்தரவு போட்டுடுவாரு. உங்களுக்கு வேணும்னா அந்த ஏரியாவில் இருக்கறவங்க சில பேர் கிட்டேயிருந்து அந்த இடம் சுகாதாரக் குறைவா இருக்கறதுனால அங்கே இருக்கற குழந்தைகளுக்கெல்லாம் அடிக்கடி வியாதி வருதுன்னு ரிப்போர்ட் வாங்கிக் கொடுக்கறேன்."

"அந்த மாதிரி ரிப்போர்ட் எல்லாம் ஏற்கெனவே நிறைய நமக்கு வந்திருக்கு சார்!"

"அப்புறம் என்ன?"

"அதுக்கு நாம செய்ய வேண்டியது அந்த இடத்தை சுத்தம் பண்றதுதான் . இதைப் பத்தி நாம ஏற்கெனவே கார்ப்பரேஷனுக்கு நிறைய தடவை எழுதிட்டோம்."

"மணவாளன்! நீங்க போகாத ஊருக்கு வழி சொல்றீங்க! நீங்க நேர்மையானவர்னு எனக்குத் தெரியும். நான் உங்களை லஞ்சம் வாங்கச் சொல்லல. அமைச்சரோட விருப்பத்தை நிறைவேத்தற மாதிரி ஒரு ரிப்போர்ட் கொடுக்கச் சொல்றேன். அவ்வளவுதான். அதுவும் பொய்யான ரிப்போர்ட் இல்ல. அந்த விளையாட்டுத் திடல் பயன்படுத்தப்படாம பாழடைஞ்சு கெடக்குங்கறது உண்மைதானே? அந்த இடத்தில ஜிம் வைக்கறதில தப்பு இல்லேன்னு கூட நீங்க சொல்ல வேண்டாம். அந்த இடத்தை வேற விதமாப் பயன்படுத்தறதை பத்திப் பரிசீலிக்கலாம்னு எழுதினா கூடப் போதும். அதை வச்சு நாங்க மேல எழுதிக்கறோம்" என்றார் வேலாயுதம்,

"ஐ ஆம் சாரி சார்" என்றார் மணவாளன் சுருக்கமாக.

"உங்களுக்குத் தெரியும்னு நினைக்கறேன். பிரமோஷன் லிஸ்ட்ல ஒங்க பேரு இருக்கு. இன்னும் ரெண்டு மூணு மாசத்துல பிரமோஷன் வந்துடும். அதை நீங்க மிஸ் பண்ணப் போறீங்களா?"

"நான் வரேன் சார்" என்று எழுந்தார் மணவாளன்.

"மணவாளன்! நீங்க ஒத்துழைக்காததால் அமைச்சர் இதைக் கைவிட்டுட மாட்டாரு. உங்களை மாத்திட்டு ஒங்க இடத்தில வேற ஆளைப் போட்டு வேலையை முடிச்சுடுவாங்க. நான் எதுவும் செஞ்சுட்டதா நினைக்காதீங்க" என்றார் வேலாயுதம்.

மணவாளன் சிரித்துக்கொண்டே வெளியேறினார்.

அநேகமாக அவரை வேறு ஊருக்கு மாற்றி விடுவார்கள். இது அக்டோபர் மாதம் என்பதால் பிள்ளைகளை வேறு ஊரில் போய்ப் பள்ளியில் சேர்க்க முடியாது. அவர் மட்டும்தான் போக வேண்டும். மனைவியும் குழந்தைகளும் தனியே இங்கே இருக்க வேண்டும். அதிகச் செலவு. அது தவிர இன்னும் பல அசௌகரியங்கள்.

இதுபோல் ஏற்கெனவே சிலமுறைகள் நடந்திருக்கின்றன. இதனால் அவர் பொருளாதாரம் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறது.

இத்தனை வருடம் அரசாங்க வேலையில் இருந்தும் நாலு காசு சேர்க்கவில்லை. சொந்தமாக வீடு வாங்கவில்லை.

'நாலு பேர் என்னைக் கேலி பேசுவார்களோ?'

அவருக்குத் தெரியவில்லை.
அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 12             
நடுவு நிலைமை     
குறள் 117
கெடுவாக வையாது உலகம் நடுவாக 
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு

பொருள்:  
நடுநிலைமை தவறாமல் செயல்பட்டதால் ஒருவனுக்குக் கேடு  விளைந்தாலும், அதற்காக உலகம் அவனைப் பழிக்காது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

குறள் 116
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்
















No comments:

Post a Comment