About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Tuesday, January 9, 2018

122. "திமிர் பிடித்தவன்"

"இவ்வளவு பெரிய விஞ்ஞானியா இருந்து என்ன பிரயோஜனம்? மத்தவங்களை மதிக்கத் தெரிய வேண்டாம்? திமிர் பிடிச்சவன்" என்று பொரிந்து தள்ளினான் சம்பந்தம்.

"யாரைப் பத்திடா சொல்றே?" என்றான் குணா.

"எல்லாம் நம்ப நண்பன் புகழ் பெற்ற விஞ்ஞானி டாக்டர் சேகர் என்கிற மாமேதையைப் பத்தித்தான்!"

"ஏன் அவனுக்கென்ன?"

"நம்ப காலேஜில அவனுக்கு ஒரு பாராட்டு விழா நடத்தணும்னு விரும்பறாங்க. பிரின்சிபாலுக்கு என்னைத் தெரியும் இல்லியா? அவர் எனக்கு ஃபோன் பண்ணி 'சேகர் உங்க கிளாஸ்மேட்தானே? நீங்க அவர்கிட்ட பேசிப் பாராட்டு விழாவில கலந்துக்கறதுக்கு சம்மதம் வாங்குங்க'ன்னு சொன்னாரு. 

"நான் ரொம்ப உற்சாகத்தோட அவன் கிட்ட கேட்டா, அவன் பெரிசா பிகு பண்ணிக்கறான்."

"வர மாட்டேன்னுட்டானா?"

"ஆமாம். அவன் பெரிய விஞ்ஞானி ஆகி இப்ப தேச அளவில அவன் பேரு பரவியிருக்கு. நாம ஏதோ படிச்சுட்டு என்னவோ ஒரு வேலையைப் பாத்துக்கிட்டு காலத்தை ஓட்டிக்கிட்டிருக்கோம். நம்மளைப் பாத்தா அவனுக்கு இளப்பமாத்தான் இருக்கும்!"

"முதல்ல, நாம ஒண்ணும் மோசமான நிலைமையில இல்ல. நீயும் நானும் நல்ல வேலையிலதான் இருக்கோம். ரெண்டாவது, சேகர் இப்படியெல்லாம் நினைக்கிற ஆளு இல்ல" என்றான் குணா.

"நீ சேகரைப் பாத்து எத்தனையோ வருஷம் ஆச்சு. காலேஜில படிச்சப்ப உன் காலையே சுத்திக்கிட்டு வந்த அந்த சேகர்னு நினைச்சியா? அவன் மாறிட்டாண்டா! இத்தனை வருஷமா அவன் ஏன் நம்மளோட தொடர்பு வச்சுக்கல, சொல்லு?"

"நாம யாருமே ஒருத்தருக்கொருத்தர் அதிகமா தொடர்பு வச்சுக்கலியே! நீயும் நானும் ஒரே கம்பெனியில வேலை பாக்கறோம். அதனால நெருக்கமா இருக்கோம். 

"காலேஜில, நானும் சேகரும் நெருக்கமாத்தான் இருந்தோம். ஆனா அதுக்கப்புறம் நானும் அவனைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்யலியே! 

"அவன் பெரிய விஞ்ஞானி ஆகிப் பிரபலமானதால அவனைப் பத்தின நியூஸ் நமக்குத் தெரிஞ்சுக்கிட்டிருக்கு. ஆனா அவனைச் சந்திக்கவோ, பேசவோ நான் முயற்சி பண்ணலியே! நீ எப்படிப் பேசின அவன்கிட்ட, ஃபோன்லியா?"

"ஆமாம். அவன் ஹைதராபாத்ல இல்ல இருக்கான்?"

"பல வருஷம் கழிச்சு அவன்கிட்ட ஃபோன்ல பேசியிருக்க. அதை வச்சு அவனை எடை போடக் கூடாது. நான் அடுத்த வாரம் ஹைதராபாத் போறேன். அப்ப அவனைப் பாத்துப் பேசறேன்."

"நீ சொன்னாலாவது ஒத்துக்கறானான்னு பாக்கலாம்!"

ஹைதராபாதில், சேகருக்கு குணா ஃபோன் செய்தபோது, சேகர் மிகவும் உற்சாகமாகப் பேசினான். குணாவைத் தன் வீட்டுக்குச் சாப்பிட அழைத்தான்.

சேகரின் வீட்டுக்கு குணா சென்றதும், பல வருடங்கள் கழித்துச் சந்தித்த மகிழ்ச்சியில் இருவருமே மனம் விட்டு நீண்ட நேரம் பேசினர். 'இவனையா திமிர் பிடித்தவன் என்று சொன்னான் சம்பந்தம்?'

"ஆமாம், நம்ப காலேஜில் உனக்குப் பாராட்டு விழா நடத்தறதுக்கு சம்பந்தம் கூப்பிட்டப்ப நீ வர மாட்டேன்னு சொல்லிட்டியாமே?" என்றான் குணா.

சேகரின் முகம் சட்டென்று மாறியது. "அதைப் பத்திப் பேச வேண்டாமே!" என்றான்.

"ஏன், சம்பந்தம் மேல உனக்கு ஏதாவது கோபமா?"

"சேச்சே! அவனைப் பாத்தே பல வருஷம் ஆச்சு. அவன் மேல எனக்கென்ன கோபம் இருக்க முடியும்?"

"பின்னே? அவனை நீ மதிக்காத மாதிரி பேசினதா அவன் நினைக்கிறானே!"

"ஒருவேளை அவன்கிட்ட நான் கொஞ்சம் கடுமையாப் பேசியிருக்கலாம்."

"ஏன் அப்படிப் பேசின?"

"குணா! நீ என்னைப் புரிஞ்சுப்பேன்னு நினைக்கிறேன். நான் ரொம்ப ஜாக்கிரதையா இருக்க வேண்டி இருக்கு."

"என்ன ஜாக்கிரதை?"

"இப்ப, நான் பாராட்டு விழா வேண்டாம்னு சொன்னா, என்ன ஆகும்? பொதுவா எல்லோரும் சொல்ற மாதிரி, முதல்ல வேண்டாம்னுதான் சொல்லுவான், அப்புறம் வற்புறுத்தினா சரின்னு ஒத்துப்பான்னு நினச்சு, அவன் என்னை வற்புறுத்தி இருப்பான். 

"அப்புறம் அவனை மறுத்துப் பேசறது எனக்குக் கஷ்டமா இருந்திருக்கும். அதனாலதான் முதலிலேயே கொஞ்சம் கடுமையாப் பேசிட்டா அப்புறம் வற்புறுத்த மாட்டான்னு நெனைச்சுத்தான் அப்படிப் பேசினேன். 

"அவன்கிட்ட மட்டும் இல்ல, இது மாதிரி பாராட்டு விழா நடத்தறேன்னு வரவங்க, என்னைப் புகழ்ச்சியாப் பேசறவங்க எல்லார்கிட்டயும் இப்படிக் கடுமையாத்தான் நடந்துக்கறேன். அப்பத்தானே இது மாதிரிப் பாராட்டுக்கள், புகழ்ச்சிகளையெல்லாம் தடுக்க முடியும்?"

"பாராட்டுக்கள், புகழ்ச்சிகளையெல்லாம் தடுக்கணும்னு நீ ஏன் இவ்வளவு பிடிவாதமா இருக்கே? பாராட்டினா, அதைக் கேட்டுத் தலையாட்டிட்டு நன்றி சொல்லிட்டு வர வேண்டியதுதானே?"

"உனக்குப் புரியல குணா! பணம் இருக்கறவங்க பாங்க்கில பணத்தைப் போட்டு வைக்கறாங்க, நகைகளை லாக்கர்ல கொண்டு வைக்கறாங்க. ஏன்?"

"ஏன்னா? அதெல்லாம் பாதுகாப்பா இருக்கட்டும்னுட்டுத்தான். தங்களோட பொருள், பணம் எதையும்  இழந்துடக் கூடாதுங்கறதுக்காகத்தான்."

"அது மாதிரிதான் எங்கிட்ட இருக்கிற சொத்தையும் நான் பாதுகாக்க விரும்பறேன்."

"உங்கிட்ட இருக்கிற சொத்துன்னா, உன் விஞ்ஞான மூளையா? பாராட்டு விழாவில கலந்துக்கறதுனால உன் மூளைக்கு என்ன ஆபத்து வந்துடும்?"

"எங்கிட்ட இருக்கிற சொத்து என் மூளை இல்லை குணா. விலை மதிக்க முடியாத சொத்தா நான் நினைக்கிறது என்னோட அடக்கத்தைத்தான். 'எனக்குத் தெரிஞ்சது ரொம்பக் கொஞ்சம்' என்கிற எண்ணம்தான் என்னை இன்னும் நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுக்கணும்னு ஊக்குவிக்குது. 

"இது மாதிரி பாராட்டுக்கள், புகழுரைகளையெல்லாம் கேட்டா, என்னை அறியாமலே  நான் ரொம்ப உயர்ந்தவன் என்கிற எண்ணம் ஏற்பட்டு என்னோட அடக்கம் போயிடும். அதுக்கப்பறம் என்னால எதையும் கத்துக்கவும் முடியாது, சிந்திக்கவும் முடியாது. 

"அதனாலதான் அடக்கம் என்கிற என்னோட சொத்தைப் பாதுகாக்கணும் என்பதில நான் ரொம்ப கவனமா இருக்கேன். சம்பந்தத்துக்கு இதைப் புரிய வச்சு, என்னை மன்னிக்கச் சொல்லு!"

சேகரின்அடக்கமே, சம்பந்தத்துக்கு ஆணவமாகத் தோற்றமளித்த விந்தையை நினைத்து வியந்தான் குணா.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 13             
அடக்கமுடைமை      
குறள் 122
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு

பொருள்:  
அடக்கம் என்ற பண்பை ஒரு விலையுயர்ந்த பொருளைப் பாதுகாப்பது போல் காக்க வேண்டும். ஒருவருக்கு அடக்கத்தை விட நன்மை பயக்கக் கூடியது வேறு எதுவும் இல்லை. 

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

 குறள் 121 
பொருட்பால்                                                                                                     காமத்துப்பால்



















"


No comments:

Post a Comment