About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Wednesday, January 17, 2018

124. அரசியல் பிரவேசம்!

"இன்னிக்கு நடிகர் சௌம்யன் தன்னோட அரசியல் பிரவேசத்தைப் பத்தி அறிவிக்கிறதா சொல்லியிருக்காரே! என்ன முடிவு எடுத்திருப்பார்னு நினைக்கிறீங்க?" என்றான் சங்கர்.

"இதில என்ன சந்தேகம்? அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போறேன்னுதான் அறிவிப்பார். அரசியல்ல இறங்கப் போறதில்லன்னு சொல்றதா இருந்தா சாதாரணமா சொல்லி இருப்பாரே! இது மாதிரி தேதி எல்லாம் கொடுத்து அறிவிக்கிறதுன்னா அரசியல்ல குதிக்கப் போறதாத்தான் அர்த்தம்" என்றான் நடராஜ்.

இருவருமே பத்திரிகை நிருபர்கள். வெவ்வேறு பத்திரிகைகளில் பணியாற்றினாலும் அடிக்கடி சந்தித்துத் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வார்கள்.

"அவரு அப்படிப் பண்ணினாருன்னா எனக்கு அவர் மேல இருக்கிற மதிப்பு கொஞ்சம் குறைஞ்சுடும்!" என்றான் சங்கர்.

"ஏன் அவர் அரசியலுக்கு வரது உங்களுக்குப் பிடிக்கலியா?" என்றான் நடராஜ்.

"எனக்குப் பிடிக்கிறது, பிடிக்கலைங்கறது விஷயம் இல்ல. இத்தனை வருஷமா அவரு சினிமாவைத் தவிர மத்த விஷயங்கள்ள மூக்கை நுழைக்காம ரொம்ப கண்ணியமா நடந்துக்கிட்டிருக்காரு. 

"சினிமாவில கூட தனக்கு நடிப்பைத் தவிர வேற எதுவும் தெரியாது, நடிப்பில் கூட தான் கத்துக்க வேண்டியது நிறைய இருக்குன்னு அடிக்கடி சொல்லிக்கிட்டு வந்திருக்காரு. 

"இப்ப சில பேரு அவர் அரசியலுக்கு வரணும்னு சொல்றதுனால அவர் அப்படி ஒரு முடிவை எடுத்தா, அது தன்னோட திறமைகள் என்ன, எல்லைகள் என்னன்னு கவனமா சிந்திச்சு இத்தனை வருஷமா அவர் நடந்துக்கிட்டதுக்கு முரணாக இருக்கும்கறது என்னோட கருத்து."

"பாக்கலாம் என்ன செய்யப் போறார்னு! இன்னும் ஒரு மணி நேரத்தில தெரிஞ்சுடப் போகுது!"

டிகர் சௌம்யனின் ஊடக சந்திப்பு ஒரு கல்யாண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தப் பெரிய மண்டபம் பத்திரிகை, தொலைக்காட்சி நிருபர்களால் நிரம்பி வழிந்தது.

சரியாகக் காலை 11 மணிக்கு சௌம்யன் பேச ஆரம்பித்தான்.

"உங்களை எல்லாம் இந்த மண்டபத்துக்கு வரவழைச்சதுக்கு நீங்க என்னை மன்னிக்கணும். நான் இந்த அறிவிப்பை என் வீட்டில இருந்துக்கிட்டே ஒரு அறிக்கையா வெளியிட்டிருக்கலாம். ஆனா சில விஷயங்களைத் தெளிவா, விளக்கமா சொல்லணும்னுதான் இந்த ஊடக சந்திப்புக்கு ஏற்பாடு பண்ணினேன்.

"நான் அதிகம் படிக்கல. நான் வேலைக்குப் போயிருந்தா, எனக்கு ஏதாவது சின்ன வேலைதான் கிடைச்சிருக்கும். ஏதோ, என்னோட அதிர்ஷ்டம், நண்பர்களோட விளையாட்டா நாடகங்கள்ள நடிச்சுக்கிட்டிருந்தேன். 

"மரியாதைக்குரிய டைரக்டர் நாராயணன், நான் நடிச்ச ஒரு நாடகத்தைப் பாத்துட்டு, எனக்கு சினிமாவில வாய்ப்புக் கொடுத்தார். என்னோட நடிப்பு மக்களுக்குப் பிடிச்சதனால நான் ஒரு பெரிய நடிகனாயிட்டேன்! 

"ஆனா இப்பவும், என்னை விட நல்லா நடிக்கக் கூடிய பல நடிகர்களோட நடிப்பைப் பாத்து மனசுக்குள்ள 'இவங்களோட நடிப்புக்கெல்லாம் முன்னே என் நடிப்பு எம்மாத்திரம்!'னு அடிக்கடி நெனச்சுக்கிட்டுத்தான் இருப்பேன். இதை நான் பல தடவை வெளியிலேயும் சொல்லி இருக்கேன்.

"நான் ஒரு கார் தயாரிக்கிற தொழில்ல ஈடுபடப் போறேன்னு சொன்னா, எல்லாரும் என்ன சொல்லுவாங்க? வங்கியில் போயி கடன் கேட்டா, அவங்க என்ன சொல்லுவாங்க? 'உங்களுக்கு இந்தத் தொழில்ல என்ன அனுபவம் இருக்கு?'ன்னு கேக்க மாட்டாங்களா?

"ஆனா நான் ஏதாவது ஒரு காரோட விளம்பரப் படத்தில் நடிச்சு 'இதுதான் மிகச் சிறந்த கார்'னு சொன்னா, என் பேச்சை நம்பி சில பேர் அந்தக் காரை வாங்கலாம்! 'காரைப்பத்தி உனக்கு என்ன தெரியும்?'னு அப்ப யாரும் கேக்க மாட்டாங்க! அதுதான் நடிகனா இருக்கிறதில ஒரு அட்வான்ட்டேஜ்! 

"ஆட்டோமொபைல் எஞ்சினீரிங் படிச்ச ஒருத்தர், காரைப் பத்தி நல்லா ஆராய்ந்து, இந்தக் காரோட அமைப்பு ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்றதை விட, காரைப் பத்தி எதுவுமே தெரியாத நான் சொல்ற கருத்துக்கு அதிக மதிப்பு இருக்கும்! இது தப்பு இல்லியா? அதனாலதான் நான் விளம்பரப் படங்கள்ள நடிக்க ஒத்துக்கறதுல்ல.

"எல்லார் மாதிரியும் நானும் அரசியல் நடப்புகளை கவனிச்சுக்கிட்டிருக்கேன். தேர்தல்கள்ள ஓட்டுப் போட்டுக்கிட்டிருக்கேன். ஆனா இதுவரையிலும் எந்த ஒரு நிகழ்வையும் பத்தி நான் கருத்துச்  சொன்னதில்லை. எந்த ஒரு கட்சியையோ, தலைவரையோ ஆதரிச்சோ, எதிர்த்தோ பேசினதில்ல.

"அரசியல்ல, பல தலைவர்கள் தொண்டர்களா இருந்துதான் தலைவர்களா ஆகியிருக்காங்க. நான் என்னோட சினிமா பாப்புலாரிட்டியைப் பயன்படுத்தி ஒரு அரசியல் கட்சியை ஆரம்பிச்சு ஆட்சியைப் பிடிக்கணும்னு நெனைக்கறது ஹெலிகாப்டர்ல வந்து ஒரு வீட்டோட மொட்டை மாடியில இறங்கற மாதிரி!

"ஒரு வீட்டுக்குள்ள நுழையணும்னா வாசப்படி வழியாத்தான் நுழையணும்னு நான் நினைக்கறேன்.

"ஒரு அரசியல் கட்சித் தலைவரோ, ஒரு பிரபல தொழில் அதிபரோ சினிமாவில சேர்ந்து ஹீரோ ஆகணும்னு யாராவது சொல்லுவீங்களா? ஆனா ஒரு நடிகன் அரசியல் தலைவனாகணும்னு மட்டும் ஏன் சொல்றீங்க? நடிகன்னா அவனுக்கு எல்லாத் தகுதியும் இருக்குன்னு அர்த்தமா?

"எனக்கு எப்பவாவது அரசியல்ல இறங்கணும்னு தோணினா, எந்தக் கட்சியோட செயல்பாடுகள்ள எனக்கு அதிக நம்பிக்கை இருக்கோ, அந்தக் கட்சியில ஒரு தொண்டனா சேருவேன். அப்படி எந்தக் கட்சியும் புடிக்காட்டா, அரசியலுக்கு வராமயே இருப்பேன். 

"இப்ப நான் எந்தக் கட்சியிலேயும் இல்லைங்கறதினால எனக்கு எந்தக் கட்சியையும் பிடிக்காதுன்னு அர்த்தம் இல்லை. அரசியல்ல ஈடுபடறதில இப்ப எனக்கு விருப்பம் இல்லைன்னு அர்த்தம். அவ்வளவுதான்!

"நான் என்னோட வாழ்க்கையில இத்தனை வருஷமா கடைப்பிடிச்சுக்கிட்டிருக்கிற ஒரு விஷயம் என்னோட தகுதி, என்னோட நிலைமை இதெல்லாம் என்னன்னு தெரிஞ்சுக்கிட்டு அதுக்குத் தகுந்தாப்பல நடந்துக்கறதுதான். 

"ஒரு நடிகனா நான் எந்த ஒரு வேஷமும் போடலாம். ராஜாவா நடிக்கலாம், பிரதமரா நடிக்கலாம், அமெரிக்க ஜனாதிபதியா நடிக்கலாம், மகாத்மா காந்தியா கூட நடிக்கலாம். 

"ஆனா நான் ஒரு நடிகன் என்பதை எப்பவுமே நினைவில் வச்சுக்கிட்டிருப்பேன். நடிப்புத் தொழில்ல எனக்குக் கிடைச்சிருக்கிற அங்கீகாரத்திற்குக் கூட என்னோட இந்த மனப்பான்மைதான் காரணம் என்பது என்னோட கருத்து.

"எனவே, நான் அரசியல் கட்சி எதுவும் தொடங்கப் போவதில்லை. உங்கள் எல்லோரையும் போல அரசியலை கவனித்து தேர்தல்ல என் விருப்பப்படி ஓட்டுப் போட்டுக்கிட்டிருப்பேன். 

"என் மேல நீங்க எல்லோரும் வச்சிருக்கிற நம்பிக்கைக்கு என்னோட நன்றி. இந்த நம்பிக்கையை நான் பெற்றது ஒரு நடிகனாகவும், ஒரு மனிதனாகவும் நான் செயல்பட்ட விதம்தான். 

"அதேபோல் தொடர்ந்து செயல்படுவதுதான் நீங்கள் என் மேல் வைத்திருக்கும் அன்புக்கும், நம்பிக்கைக்கும், நல்லெண்ணத்துக்கும் நான் செய்யக்கூடிய கைம்மாறு."

தன் பேச்சை முடித்து விட்டு, அனைவருக்கும் கைகூப்பி வணக்கம் தெரிவித்து விட்டு சௌம்யன் வெளியேறினான். செய்தியாளர்களின் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லவில்லை.

"சௌம்யன் என்னை ஏமாத்தல. அவர் மேல எனக்கு இருக்கிற மதிப்பு இன்னும் அதிகமாயிடுச்சு" என்று நடராஜிடம் சொல்லிக் கொண்டிருந்தான் சங்கர்.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 13             
அடக்கமுடைமை      
குறள் 124
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் 
மலையினும் மாணப் பெரிது.

பொருள்:  
தன் நிலையிலிருந்து பிறழாமல் அடக்கமாகச் செயல்படுபவனுடைய தோற்றம் மலையை விட உயர்ந்து காணப்படும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

 குறள் 123 
பொருட்பால்                                                                                                     காமத்துப்பால்



2 comments:

  1. அருமையா எழுதியிருக்கீங்க. ரசிக்கமுடிந்தது. உங்களுக்காக நான் சமர்ப்பிக்கும் பாடல் இது.

    நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதும் இல்லை
    நடப்பதையே நினைத்துவிட்டால் அமைதி என்றும் இல்லை.
    (நடந்ததையே என்று போடவில்லை)


    நடிகைன்னா அவனுக்கு - 'நடிகன்னா என்று வந்திருக்கவேண்டும்.

    ReplyDelete
  2. உங்கள் கருத்துக்கு நன்றி. நீங்கள் சுட்டிக்காட்டிய தவறு திருத்தப்பட்டு விட்டது.

    ReplyDelete