About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Wednesday, April 18, 2018

154. காலை முதல் மாலை வரை

டாக்டர் பரந்தாமனுடன் ஒரு நாள் முழுவதும் இருந்து அவரை அருகிலிருந்து கவனிக்கும் ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

பரந்தாமன் ஒரு பொருளாதார நிபுணர். கல்லூரிப் பேராசிரியராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கியவர், கல்லூரி மாணவர்களுக்காகப் பொருளாதாரப் புத்தகங்கள் எழுதிக் கல்வித் துறையில் பிரபலமானார்.

அதைத் தொடர்ந்து, இந்தியப் பொருளாதாரம் மற்றும் உலகப் பொருளாதாரம் ஆகியவை குறித்த ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், நூல்களையும் எழுதி முதலில் தேச அளவிலும், பிறகு உலகளவிலும் பலரின் கவனத்தையும் ஈர்த்தார். 

அதன் பிறகு பொருளாதாரம் குறித்த கருத்தரங்குகளில் அவரது பங்கேற்பு இன்றியமையாததாகக் கருதப்பட்டது.

விரைவிலேயே நாட்டின் மிகச் சிறந்த பொருளாதார வல்லுனர்களில் ஒருவராகக் கருதப்பட்டு, திட்டக் குழு உள்ளிட்ட அரசாங்கத்தின் பல்வேறு நிபுணர் குழுக்களிலும் பங்கு வகித்தார். வெளிநாடுகள் பலவற்றிலிருந்தும் அவருக்கு அழைப்புகள் வந்தன.

பொருளாதாரத்தைப் பற்றிப் பேசும் எவரும் பரந்தாமனைக் குறிப்பிடாமல் பேச முடியாது என்ற அளவுக்கு அவரது செல்வாக்கும், பங்களிப்பும் மிகுந்திருந்தன.

அறுபது வயதைக் கடந்த பின் தனது துறை சார்ந்த செயல்பாடுகளைக் குறைத்துக் கொண்டு ஆன்மீகப் பணிகளில் ஈடுபடத் துவங்கினார். 

ஒரு பிரபல தொண்டு நிறுவனத்துடன் தன்னை இணைத்துக் கொண்டு, நிர்வாக ரீதியாக அவர்களின் செயல்பாடுகளில் பங்கேற்று வந்தார்,

'ஒரு முழுமையான மனிதர்' என்ற தலைப்பில் அவரைப் பற்றி ஒரு கட்டுரை எழுதுவதற்காக என் பத்திரிகையின் சார்பில் ஒருநாள் முழுவதும் நான் அவர் அருகில் இருந்து கவனித்து அவரைப் பற்றி ஒரு விரிவான கட்டுரை எழுதுவது என்று முடிவானது.

காலை 7 மணிக்கு நான் பரந்தாமனின் வீட்டுக்குச் சென்று அழைப்பு மணியை அழுத்தியபோது, அவரே வந்து கதவைத் திறந்தார்.

என்னை அறிமுகப்படுத்திக் கொண்டதும், என்னை வரவேற்று உட்கார வைத்து, காப்பி கொடுத்து உபசரித்தார்.

பிறகு என்னிடம், "மிஸ்டர் மணி! நான் என் வேலைகளை செஞ்சுக்கிட்டே இருப்பேன். நீங்க என் கூடவே இருந்து பாருங்க. எங்கிட்ட ஏதாவது கேக்கணும்னா கேளுங்க. முடிஞ்சா அப்பவே பதில் சொல்லுவேன். பிஸியா இருந்தா அப்புறம் சொல்லுவேன்" என்றார்.

"சார்! நீங்க அதுக்குள்ளே குளிச்சு ரெடியாயிட்டீங்களே! எத்தனை மணிக்கு எழுந்திருப்பீங்க?" என்றேன்.

"நாலரை மணிக்கு."

"எப்ப தூங்கப் போவீங்க?"

"பத்தரை மணிக்குத் தூங்கப் போகணும்கறது என்னோட டைம் டேபிள். ஆனா பல நாள் பதினொண்ணுக்கு மேல ஆயிடும்" என்றார்.

அதன் பிறகு அவர் செய்தவற்றை கவனித்துக் குறிப்பெழுதிக் கொண்டே வந்தேன்.

அவருடைய அறிவுக்கூர்மை, சுறுசுறுப்பு, பல விஷயங்களில் அவருக்கிருந்த ஆர்வம் மற்றும் ஞானம், சோர்வோ, சலிப்போ இல்லாமல் அவர் தொடர்ந்து ஏதாவது ஒரு வேலையில் ஈடுபட்டு வந்தது ஆகியவை என்னை பிரமிக்க வைத்தன.

நான் அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தபோதும், அவர் இயல்பாக என்னென்ன செய்வாரோ அவற்றையெல்லாம் செய்து கொண்டு வந்தார். செய்தித்தாள்கள், பத்திரிகைகள், புத்தகங்கள் படிப்பது, குறிப்புகள் எழுதுவது, தொலைபேசி உரையாடல்கள் போன்றவற்றில் அவர் ஈடுபடும்போது நான் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அவர் தொலைபேசியில் பேசும்போதெல்லாம் நான் எழுந்து அறைக்கு வெளியே சென்று விடுவேன். 

ஆனால் சில சமயம், அவர் என்னை இருக்கச் சொல்லிக் கை காட்டுவார். பொருளாதாரம் மற்றும் பல விஷயங்கள் பற்றி அவர் தொலைபேசியில் பேசும்போது, நான் குறிப்புகள் எடுத்துக் கொள்ளலாம் என்று சைகை செய்வார்.

காலை உணவுக்குப் பிறகு அவர் சென்ற இடங்களுக்கெல்லாம் நானும் அவருடன் காரில் சென்றேன். அவர் சேவையாற்றி வந்த தொண்டு நிறுவனம், வேறு சில அலுவலகங்கள் ஆகிய இடங்களுக்கு அவருடன் சென்றேன். 

அவர் யாரிடமாவது தனிப்பட்ட முறையில் உரையாடும் சமயங்கள் தவிர, மற்ற சமயங்களில் நான் அவருடனேயே இருந்தேன்.

மாலையில் அவர் ஒரு கூட்டத்தில் உரையாற்றினார். அங்கு பார்வையாளர் வரிசையில் அமர்ந்து அவர் பேச்சைக் கேட்டேன். 

மாலை வீட்டுக்கு வந்து, மீண்டும் படித்தல், எழுதுதல், தொலைபேசியில் பேசுதல் ஆகிய செயல்களில் ஈடுபட்டார். 

இரவு உணவு முடிந்ததும் 9 மணிக்கு மேல்தான் அவரிடமிருந்து விடைபெற்றேன்.

"ரொம்ப போர் அடிச்சுதா?" என்றார், நான் கிளம்பும்போது.

"இல்ல சார்! உங்க பக்கத்தில இருந்து பாத்ததில, உங்களைப் பத்தி நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்கிட்டேன்" என்றேன்.

"ரொம்ப அபாயமானதாச்சே அது!" என்று சிரித்துக்கொண்டே சொன்னவர், "என்ன எழுதறீங்கன்னு பாக்கறேன்!" என்றார்.

ரந்தாமனைப் பற்றிய என்னுடைய கட்டுரை வெளியான அன்று மாலை அவர் என்னைத் தொலைபேசியில் அழைத்தார். 

"என்னப்பா இப்படில்லாம் எழுதியிருக்கே!" என்றார் கோபத்துடன். (நான் அவருடன் இருந்தபோது என்னை மரியாதையாக விளித்து வந்தவர், இப்போது என்னை ஒருமையில் விளிப்பதை கவனித்தேன்!)

"எதை சார் சொல்றீங்க?" என்றேன்.

"என்ன ஒண்ணும் தெரியாதவன் மாதிரி கேக்கறே? நான் ரொம்ப முன்கோபி, சிடுமூஞ்சி அப்படிங்கற மாதிரி எழுதி இருக்கே?"

"சார்! அப்படிப்பட்ட வார்த்தைகளை நான் பயன்படுத்தல. உங்களோட அறிவுக்கூர்மை, பல விஷயங்களைப் பற்றிய உங்க பரந்த அறிவு, ஒரு நிமிஷத்தைக் கூட வீணடிக்காம, நேரத்தை நீங்க பயன்படுத்தற அற்புதம், உங்களோட சேவைகள் இதையெல்லாம் பத்தி எழுதி இருக்கேனே சார்!"

"அதை மட்டும் எழுதியிருந்தா பரவாயில்லயே! நான் ஏதோ பொறுமையில்லாதவன் மாதிரியும், எல்லார்கிட்டயும் எரிஞ்சு விழறவன் என்கிற மாதிரியும் எழுதி இருக்கியே?"

"சார்! நடந்த சம்பவங்களை அப்படியே எழுதியிருக்கேன். நீங்க பொறுமை இல்லாம நடந்துக்கிட்டீங்கன்னு விமர்சனம் பண்ணல. நீங்க எல்லார்கிட்டயும், எல்லா விஷயத்திலேயும் பர்ஃபெக்ஷனை எதிர்பாக்கறவரு. 

"அது இல்லாதபோது, நீங்க கோபப்பட்டுப் பேசறீங்க. காலையில பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடறப்ப, தண்ணி வெக்கலேன்னு சமையல்காரரைக் கோவிச்சுக்கிட்டீங்க. அது மாதிரி டின்னர் சாப்பிடறப்ப, தோசை முறுகலா இல்லேன்னு கோவிச்சுக்கிட்டீங்க. 

"கார்ல வரும்போது, கார்ல ஏசி அதிகமா இருந்ததுங்கறதுக்காக டிரைவரைக் கோவிச்சுக்கிட்டீங்க. சாயந்தரம் நீங்க மீட்டிங்கில பேசறப்ப, மைக் சரியா வேலை செய்யலைங்கறதுக்காக 'ஒரு மைக் கூட ஒழுங்கா அரேஞ்ஜ் பண்ண முடியாதவங்க என்னைப் பேசறதுக்குக் கூப்பிடாதீங்க'ன்னு கூட்டத்தை ஏற்பாடு பண்ணினவர் கிட்ட சத்தமா சொன்னீங்க. மைக் இல்லாமலேயே அது எல்லார் காதிலேயும் விழுந்தது! 

"இது மாதிரியான சம்பவங்களை அப்படியே நடந்தது நடந்தபடி எழுதியிருக்கேன். நடக்காதது எதையாவது நான் எழுதியிருந்தா சொல்லுங்க!" என்றேன்.

அவரிடமிருந்து பேச்சு வரவில்லை, கோபமான பெருமூச்சு மட்டும் தொலைபேசியில் கேட்டது.
இல்லறவியல் 
             அதிகாரம் 16             
பொறையுடைமை      
குறள் 154
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை 
போற்றி யொழுகப் படும்.

பொருள்:  
எல்லாவற்றிலும் நிறைவாக இருக்கும் தன்மை ஒருவரை விட்டு நீங்காமல் இருக்க வேண்டுமானால், அவர் பொறுமை என்னும் குணத்தைப் போற்றிக் காக்க வேண்டும்.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்




















No comments:

Post a Comment