About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Saturday, April 28, 2018

158. மொட்டைக் கடிதம்

தலைமை அலுவலகத்திலிருந்து பொது மேலாளர் பேசுகிறார் என்று அவரது உதவியாளர் லீலா அறிவித்ததும், கிளை மேலாளர் ருத்ரமூர்த்தி தொலைபேசியை எடுத்து "சார்!" என்றார். 

"உங்க ஸ்டெனோ பக்கத்தில இருக்காங்களா?" என்றார் பொது மேலாளர்.

"ஆமாம்" என்ற ருத்ரமூர்த்தி, பொது மேலாளர் தன்னிடம் தனிமையில் பேச விரும்புகிறார் என்று புரிந்து கொண்டு, லீலாவை எழுந்து போகும்படி சைகை செய்தார். 

லீலா அறையை விட்டு வெளியே சென்ற பிறகு, "இப்ப இங்க யாரும் இல்லை. சொல்லுங்க சார்!" என்றார். 

"என்ன மூர்த்தி! உங்க ஸ்டெனோவோட நீங்க ரொம்ப நெருக்கமா இருக்கீங்களாமே!" என்றார் பொது மேலாளர்.

ருத்ரமூர்த்தி அதிர்ச்சி அடைந்தவராக, "என்ன சார் இது?" என்றார்.

"நல்ல வேளை! 'உங்களுக்கு எப்படித் தெரியும்?'னு நீங்க கேக்கல! இது மாதிரி எங்களுக்கு ஒரு மொட்டைக் கடுதாசி வந்திருக்கு."

"சார்! இது ரொம்ப அபாண்டம்!"

"நாங்க இதை நம்புவோமா? இதை யார் எழுதியிருப்பாங்கன்னு உங்களால ஊகிக்க முடியுமா?"

"ஊகம் இல்ல சார்! உறுதியாவே தெரியும். நீங்க என் மேல வச்சிருக்கிற நம்பிக்கைக்கு ரொம்ப நன்றி."

"யாரு இதை எழுதியிருப்பாங்கன்னு எங்கிட்ட சொன்னீங்கன்னா, நாங்க அந்த ஆள் மேல ஒரு கண் வச்சுப்போம். சந்தர்ப்பம் வரும்போது அவர் மேல நடவடிக்கை எடுப்போம்" என்றார் பொது மேலாளர்.

"வேண்டாம் சார்! ஐ வில் டீல் வித் இட்!" என்றார் ருத்ரமூர்த்தி.

தொலைபேசியை வைத்ததும், பியூனை அழைத்து "பாஸ்கரை வரச்சொல்லு!" என்றார்.

பாஸ்கர் வந்ததும், "என்ன பாஸ்கர்! ஒரு கஸ்டமர் கம்ப்ளெயின்ட் பத்தி உங்கிட்ட சொன்னேனே! என்ன ஆச்சு?" என்றார். 

"அவரை நேர்ல போய்ப் பாத்துப் பேசிட்டேன். அவர் நான் சொன்னதை ஏத்துக்கிட்டு கம்பளெயின்ட்டை வாபஸ் வாங்கிட்டாரு."

"குட்!" என்ற ருத்ரமூர்த்தி,"ஆமாம்! லீலாவைப் பத்தி நீ என்ன நினைக்கறே?" என்றார்.

"என்ன சார் கேள்வி இது?"

"அவளைப் பத்தி ஹெட் ஆஃபீஸுக்கு யாரோ மொட்டைக் கடுதாசி எழுதி இருக்காங்க."

"அவங்களைப் பத்தியா?" என்றான் பாஸ்கர்.

"பின்ன என்னைப் பத்தியா எழுதுவாங்க?"

"ஆமாம், இதை ஏன் சார் எங்கிட்ட சொல்றீங்க?"

"ஏன்னா, நீ ஒரு புத்திசாலி. எல்லா விஷயங்களையும் நல்லாப் புரிஞ்சுக்கிறவன். யாரோ என்னைப் பழி வாங்கறதா நெனச்சு அந்த நல்ல பொண்ணோட பேரைக் கெடுக்கப் பாக்கறாங்க."

பாஸ்கர் மௌனமாக இருந்தான்.

"நீ பொறுப்புள்ளவன். இந்த மாதிரி மொட்டைக் கடுதாசி எழுதறவங்க யாருன்னு கண்டுபிடிச்சு அவங்களுக்கு புத்தி சொல்லு. என் மேல கோபம் இருந்தா, என்னோட நேரடியா மோதட்டும். மத்தவங்க பாதிக்கப்படக் கூடாது. சரி. போ!"

பாஸ்கர் மௌனமாக வெளியேறினான்.

பாஸ்கர் சென்றதும் ருத்ரமூர்த்தி யோசித்தார். அவனுடைய முகபாவம், பேச்சு இவற்றிலிருந்து கடிதத்தை எழுதியவன் அவன்தான் என்பது அவருக்கு உறுதியாகி விட்டது. லீலாவை இதில் இழுத்தது தவறு என்று அவன் உணர்ந்திருப்பான் என்று தோன்றியது.

பாஸ்கர் வேலைக்குச் சேர்ந்ததிலிருந்தே அவரிடம் விரோதம் பாராட்டி வந்திருக்கிறான். பயிற்சிக் காலத்தில் அவர் கடுமையாக நடந்து கொண்டதும், சரியாக வேலை செய்யாவிட்டால், பயிற்சிக் காலம் முடிந்ததும் அவன் வேலை நிரந்தரம் ஆகாது என்றும், அவன் வேலையை விட்டு அனுப்பப்படுவான் என்றும் அவர் எச்சரித்ததும் அவர் மீது அவனுக்கு ஒரு தவறான அபிப்பிராயத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்தி விட்டது. 

அவருக்கு எதிராக அவன் பல செயல்களைச் செய்து கொண்டிருந்தது அவருக்குத் தெரியும். பிற ஊழியர்களிடம் அவரைப் பற்றித் தவறாகக் கூறுவது, தலைமை அலுவலகத்துக்கு அவர் மீது பழி சொல்லி மொட்டைக் கடிதங்கள் எழுதுவது போன்ற செயல்களில் அவன் ஈடுபட்டிருந்தது அவருக்குத் தெரியும்.

ஆயினும் அவன் வேலையை அவன் திறமையாகச் செய்து வந்ததால் அவர் அவற்றையெல்லாம் பொருட்படுத்தவில்லை. இப்போது லீலாவை அவருடன் தொடர்பு படுத்தி அவன் எழுதியதால்தான் அவர் அவனிடம் அந்த மொட்டைக் கடிதம் பற்றிப் பேசினார் - அதுவும் மறைமுகமாக.

இந்த சம்பவத்துக்குப் பிறகும் அவருக்கு எதிரான செயல்பாடுகள் தொடர்ந்தன. அவற்றுக்குப் பின்னே இருந்தது பாஸ்கர்தான் என்பதில் அவருக்கு சந்தேகமில்லை. 

அவர் மீது புகார் அடங்கிய கடிதங்கள் தலைமை அலுவலகத்துக்கு அவ்வப்போது அனுப்பப்பட்டு வந்தன. ஆனால் அவற்றில் மற்ற ஊழியர்கள் தொடர்பு படுத்தப் படவில்லை. மற்றவர்களை இழுக்க வேண்டாம் என்று அவர் சொன்னதை அவன் ஏற்றுக்கொண்டு செயல்பட்டதாகத் தோன்றியது!

"சார்! ஜி எம் கிட்டேருந்து ஃபோன்" என்றாள் லீலா.

ருத்ரமூர்த்தி ஃபோனை எடுத்துப் பேசினார்.

"மிஸ்டர் மூர்த்தி! நாலஞ்சு வருஷமா உங்களைப் பத்தி அப்பப்ப ஏதாவது மொட்டைக் கடுதாசி வந்துக்கிட்டிருக்கு!"

"அதுக்காக எம்மேல ஆக்‌ஷன் எடுக்கப் போறீங்களா சார்?" என்றார் ருத்ரமூர்த்தி சிரித்துக்கொண்டே.

"நீங்க சொல்லாட்டாலும், இதையெல்லாம் எழுதறது யாருன்னு எனக்குத் தெரியும்."

ருத்ரமூர்த்தி மௌனமாக இருந்தார்.

"உங்க ஆஃபீஸ் ஸ்டாஃப்  மூலமாவே எங்களுக்குத் தகவல்கள் வந்துக்கிட்டுருக்கு. பாஸ்கர்தானே அது?" என்றார் பொது மேலாளர்.

ருத்ரமூர்த்தி பதில் பேசவில்லை.

"நீங்க இதையெல்லாம் பொறுமையா சகிச்சுக்கிட்டிருக்கீங்க. அதுக்கே உங்களைப் பாராட்டணும். எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருந்தீங்கன்னா அவனை வேலையை விட்டுத் தூக்கி இருப்பேன்! ஆனா இப்படி ஒரு காரியம் பண்ணியிருக்கீங்களே!"

"நீங்க எதைச் சொல்றீங்கன்னு எனக்குப் புரியுது!"

"அசிஸ்டன்ட் மானேஜர் போஸ்டுக்கு பாஸ்கர் பேரை ரெகமெண்ட் பண்ணி இருக்கீங்களே! அதுவும் அவனை விட சீனியர்கள் மூணு பேரு இருக்கறப்ப!"

"சார்! திறமை அடிப்படையில பாஸ்கர்தான் முதல்ல இருக்கான். ஒரு பொறுப்பான பதவிக்குத் திறமைதானே சார் முக்கியம்?"

"அவன் உங்களுக்குப் பண்ணின கெடுதலை எல்லாம் மறந்துட்டீங்களா? இது மாதிரியெல்லாம் செய்யறவனை எப்படி ஒரு பொறுப்பான பதவியில் நியமிக்க முடியும்?"

"சார்! வேலை விஷயத்தில பாஸ்கரோட செயல்பாடு எப்பவுமே சிறப்பாத்தான் இருந்திருக்கு. அதனால இனிமேயும் அப்படித்தான் இருக்கும்னு எதிர்பாக்கறதில என்ன தப்பு? பொறுப்பான பதவிக்கு வந்தப்பறம் அவன் இன்னும் அதிகப் பொறுப்போடு நடந்துப்பான்னு நினைக்கறேன். கம்பெனிக்கு எது நல்லதுன்னுதான் பார்த்தேன். தனிப்பட்ட முறையில அவன் எனக்கு நிறைய தொந்தரவு கொடுத்தான் என்கிறதுக்காக அவனுக்குக் கிடைக்க வேண்டிய புரமோஷனை நான் ஏன் சார் தடுக்கணும்?' என்றார் ருத்ரமூர்த்தி.
  .
இல்லறவியல் 
             அதிகாரம் 16             
பொறையுடைமை      
குறள் 158
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம் 
தகுதியான் வென்று விடல் 

பொருள்:  
தம் ஆணவத்தால் நமக்குத் தீங்குகள் செய்த ஒருவரை நாம் நமது பொறுமை என்ற பண்பினால் வென்று விட வேண்டும்.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்























 

3 comments:

  1. ஆர்வத்துடன் அடுத்தடுத்த குறளின் கதைகளுக்காக காத்துருக்கின்றேன்.

    ReplyDelete
  2. Superb, PR, in a way it, sort of, reflects my approach in the job !

    ReplyDelete
    Replies
    1. You have a professional and objective outlook and your approach is bound to reflect this. Thank you.

      Delete