About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Sunday, March 13, 2016

56. சுகமான சுமைகள்

அலாரம் அடித்தபோது சுமித்ரா எழுந்திருக்கவில்லை. அதற்கு ஐந்து நிமிடம் முன்பே எழுந்து பல் துலக்கப் போய் விட்டாள். தினமும் அலாரம் வைத்து எழுந்து பழகியதில் தானாகவே விழிப்பு வர ஆரம்பித்து விட்டது.

அலாரம் அடித்த சத்தம் கேட்டதும், இனி அடுத்த நாளிலிருந்து அலாரம் வைக்காமலேயே எழுந்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டாள். 'கடிகாரமே, நீ இனி எனக்காக இரவு முழுவதும் விழித்திருந்து காலையில் என்னை எழுப்ப வேண்டாம்!'

அடுத்த ஒரு மணி நேரத்துக்கு அவளுக்கு சமையல் அறையில் வேலை இருந்தது. கணவன், மாமியார், குழந்தைகளுக்குக் காலை உணவு, மதிய உணவு செய்து குழந்தைகளுக்கும், தனக்கும் மதிய உணவைக் கட்டி முடித்த பின் மாமியாரை மென்மையாக எழுப்பினாள்.

மாமியார் எழுந்ததும் தான் செய்து வைத்தவற்றை அவரிடம் சொல்லி விட்டு வேலைக்குக் கிளம்பினாள் சுமித்ரா.

"ஏன் இன்னிக்கு சீக்கிரமே கிளம்பிட்டே?" என்றார் மாமியார்.

"இனிமே பஸ்ஸிலதான் போகணும். அதனால கொஞ்சம் சீக்கிரம்தான் கிளம்பணும்."

"ஏன் சரவணன் வர மாட்டானா?"

"அவனுக்கு நேரத்தை மாத்திட்டாங்க. அவன் இனிமே லேட்டாதான் கிளம்புவான். அதனால அவனோட போக முடியாது."

"அடப்பாவமே! ஏற்கனவே நீ நாள் முழுக்க ழைக்கறே! உனக்கு இன்னும் கஷ்டம்தான்."

"நீங்க இப்படிச் சொல்றதே ரொம்ப ஆறுதலா இருக்கு அத்தை! எந்த மாமியார் இப்படி மருமகள் கஷ்டப்படறாளேன்னு நெனைப்பாங்க?"

சுமித்ராவால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

"ஏண்டி அழறே? உன் கஷ்டம் எல்லாம் கொஞ்ச நாள்தான். சீக்கிரமே  எல்லாம் சரியாயிடும்" என்றார் மாமியார், அவள் முதுகைத் தட்டிக் கொடுத்து.

'நல்லவேளை! நான் அழுத காரணம் அத்தைக்குத் தெரியாது, சரவணனோடு என்னால் இனிமேல் ஏன் போக முடியாது என்பது தெரியாத மாதிரி!'

சரவணன் அவளுடைய நிறுவனத்தில் வேலை செய்பவன். அவளை விட ஒரு வயது சிறியவன். அவன் அவள் வீட்டு வழியேதான் அலுவலகத்துக்குப் போக வேண்டும் என்பதால் அவள் அவனுடனேயே ஸ்கூட்டரில் வரலாம் என்று சொன்னவன் அவன்தான். முதலில் சுமித்ரா தயங்கினாலும், அவள்  கணவனும், மாமியாரும் வற்புறுத்தியதால் இதற்கு ஒப்புக் கொண்டாள்.

அலுவலகத்தில் சிலர் அவர்களைப் பற்றித் தவறாகப் பேசியதை அவள் பொருட்படுத்தவில்லை. சரவணன் தனது ஒன்று விட்ட சகோதரன் என்றே அவள் மற்றவர்களிடம் சொல்லி இருந்தாள். சரவணனும் அவளை 'அக்கா' என்றே அழைத்து வந்தான்.

ஆனால் பல நாட்களுக்குப் பிறகு, நேற்று இந்த உறவில் ஒரு சிக்கல் விழுந்து விட்டது. அலுவலகத்திலிருந்து வரும்போது சில சமயம் அவர்கள் வழியில் ஒரு சிற்றுண்டி விடுதியில் காப்பி அருந்துவார்கள். நேற்று அதுபோல் காப்பி குடித்துக் கொண்டிருந்தபோது, சரவணன் முதல் முறையாக அவளைப் பெயர் சொல்லி அழைத்தான்.

"சுமித்ரா! நான் உன்னை விட ஒரு வயசுதான் சின்னவன். இந்த அக்கா தம்பி உறவெல்லாம் எதுக்கு?" என்று சொல்லி விட்டு அவளைப் பார்த்தான்.

ஒரு கணம் அவனை முறைத்துப் பார்த்த சுமித்ரா, ஒன்றும் சொல்லாமல் காப்பியைக் குடித்து முடித்து விட்டு எழுந்தாள். பில்லுக்குப் பணம் கொடுத்து விட்டு  விடுவிடுவென்று வெளியேறினாள்.

பின்னாலேயே ஒடி வந்த சரவணன் "அக்கா, தப்பா நெனச்சுக்காதீங்க. ஐ ஆம் சாரி... " என்று பதற்றத்துடன் மன்னிப்புக் கேட்டதைப் பெருட்படுத்தாமல், "நாளையிலேருந்து நான் பஸ்ஸிலேயே போய்க்கறேன். நீ என் வீட்டுக்கு வராதே" என்று சொல்லி விட்டுப் போய் விட்டாள்.

'ஏதோ உணர்ச்சி வேகத்தில் பேசி விட்டான். கண்டித்துப் பேசினால் தன் தவறை உணர்ந்து பழையபடி ஆகி விடுவான்' என்று தோன்றினாலும், ஒரு தவறான எண்ணம் அவன் மனதில் உதித்த பிறகு அவனுடன் தொடர்ந்து நட்பாக இருப்பது சரி வராது என்று நினைத்து அவன் உறவைத் துண்டித்து விட்டாள் சுமித்ரா.

இப்போது மாமியார் அவளுக்காகப் பரிதாபப்பட்டுப் பேசியபோது சுமித்ரா அழுதது சரவணன் இப்படி நடந்து கொண்டு ஒரு நல்ல நட்பை அழித்து விட்டானே என்ற ஆற்றாமையால்தான்.

மாலை சுமித்ரா வீட்டுக்குத் திரும்பியபோது பள்ளியிலிருந்து திரும்பியிருந்த குழந்தைகள் அவளை உற்சாகமாக வரவேற்றனர். அவர்களை விசாரித்து விட்டுக் கணவன் படுத்திருந்த அறைக்குச் சென்றாள்.

"சாப்பிட்டீங்களா? உங்களுக்குக் கத்தரிக்கா சாம்பார் புடிக்காது. ஆனா வேற காய் இல்லாததால தனியா கத்தரிக்கா இல்லாம சாம்பார் எடுத்து வச்சிருந்தேன். அத்தை கிட்ட சொல்ல மறந்துட்டேன்."

"அதை விடு. நீ ஏன் சரவணனோட போகலே? அம்மா அவனுக்கு நேரம் மாத்திட்டதா சொன்னாங்க. உங்க கம்பெனியில ஷிஃப்ட் கிடையாதே?" என்றான் அவள் கணவன் ராகவன்.

சுமித்ராவுக்கு மீண்டும் அழுகை பொங்கிக் கொண்டு வந்தது. அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டு, "எவ்வளவு நாளைக்கு அவனோட போக முடியும்? ஆஃபீஸில வேற சில பேரு தப்பாப் பேசறாங்க. நீங்க அடிக்கடி சொல்லுவீங்க இல்ல,  நாம யாரையும் நம்பி இருக்கக் கூடாதுன்னு! அதனாலதான் இந்த ஏற்பாடு வேண்டாம்னு நிறுத்திட்டேன்."

"என்னவோ நடந்திருக்கு. சரி. எப்படியும் கொஞ்ச நாள் கழிச்சு நீ எங்கிட்ட சொல்லுவ. அப்ப தெரிஞ்சுக்கறேன்." 

"சரி. எழுந்திருங்க. என்னைப் புடிச்சுக்கிட்டு நடந்து பழகுங்க."

பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு குணமாகிக் கொண்டு வந்த ராகவன் அவள் தோளில் கை வைத்தபடி நடந்தான்.

"நேத்தியை விட இன்னிக்கு நல்லா நடக்கிறீங்க" என்றாள் சுமித்ரா உற்சாகமாக.

"தினமும் காலையில சீக்கிரம் எழுந்து, எங்களுக்கெல்லாம் சமையல் பண்ணி வச்சுட்டு, வேலைக்குப் போய்த் திரும்பிய உடனேயே எனக்கு நடைப் பயிற்சி கொடுக்க வந்துடறியே, உனக்குக் கொஞ்சம் கூடச் சோர்வே இல்லியா? என்றான் ராகவன் வியப்புடன்.

"இல்லை" என்றாள் சுமித்ரா.

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 6
வாழ்க்கைத் துணைநலம்
குறள் 56
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

பொருள்:
தன்னை (தன் கற்பை)க் காப்பாற்றிக் கொண்டு, தன் கணவனை அக்கறையுடன் கவனித்துக் கொண்டு, தன் குடும்பத்தின் நற்பெயருக்குக் களங்கம் வராமல் பார்த்துக் கொண்டு, மனம் தளராமல் வாழ்பவள் பெண். 

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்















No comments:

Post a Comment