About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

அதிகாரம் 1 - கடவுள் வாழ்த்து

 திருக்குறள் 
அறத்துப்பால்
பாயிரவியல்
அதிகாரம் 1
கடவுள் வாழ்த்து
1. அகர முதல

மயிலையில் தமது குடிலின் வாசல் திண்ணையில் அமர்ந்தபடி திருவள்ளுவர் யோசனையில் ஆழ்ந்திருந்தார். அவர் அருகில் ஓலைச் சுவடிகள்.   

எழுத்தாணியின் கூரற்ற முனை அவர் முகத்தின் பல பகுதிகளையும் தடவியபடி, 'ம்ம்..யோசிக்கும்போது எல்லோரும் ஒரே மாதிரி உடல் அசைவுகளைத்தான் செய்கிறார்கள். யோசனைகளின் வீச்சுதான் ஆளுக்கு ஆள் மாறுபடுகிறது' என்று நினைத்தது!   

உள்ளிருந்து அவர் மனைவி வாசுகி வந்தார். "என்ன யோசனை கணவரே?" என்றார்.

"மனித வாழ்க்கையின் எல்லாக் கூறுகளையும் உள்ளடக்கி ஒரு நீதி நூல் எழுதலாம் என்று இருக்கிறேன்" என்றார் திருவள்ளுவர்.

"எழுதுங்கள். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டும். நம் நாட்டில் நீதி நூல்கள் ஆயிரம் இருக்கின்றன, ஆனால் அவற்றை யாரும் படிப்பதில்லை."

"அதனால்தான் எளிய செய்யுள் வடிவில் அதுவும் ஒவ்வொரு செய்யுளும் ஒன்றே முக்கால் அடி நீளத்தில் இருக்கும்படி எழுதலாம் என்று நினைக்கிறேன்."

"நல்ல யோசனை. குறுகிய பா என்றால் படிக்கத் தூண்டுவதாக இருக்கும்."

"என்ன சொன்னாய்? குறுகிய பா! அருமையான சொற்றொடர். என் நூலுக்குக் குறள் என்றே பெயர் வைத்து விடுகிறேன்."

"திருக்குறள் என்று வையுங்கள். மங்களகரமாக இருக்கும்."

"சரியான பெயர். செய்யுளின் நீளம் குறைவாக இருந்தாலும், அதில் ஆழமான பொருள் இருக்கும்படி அமைக்கப் போகிறேன்."

"அப்படியானால், திருக்குறள் என்பது மிகப் பொருத்தமான பெயர். திருமாலின் வாமன அவதாரத்தை வைணவர்கள் 'திருக்குறளப்பன்' என்று குறிப்பிடுவார்கள். சிறிய உருவமாகத் தோன்றி, மூவுலகையும் அளந்த விஸ்வரூபத்தைக் காட்டியவர் வாமனர். அதுபோல் உங்கள் குறளும் நீளம் குறைவாக இருந்தாலும், தோண்டத் தோண்ட ஆழமான பொருளைத் தரும் புதையலாக அமைய வேண்டும். அது சரி. இந்த நூலை எப்படி அமைக்கப் போகிறீர்கள்?"

"மனித வாழ்வின் கூறுகள் அனைத்தையும் உள்ளடக்க வேண்டுமென்றால் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு கருப் பொருட்கள் பற்றியும் கூற வேண்டும்."

"ஓ! அப்படியானால் உங்கள் நூல் மிக மிக நீளமாக அமைந்து விடுமே!"

"அப்படி இருக்காது. செய்யுட்களைக் குறுகிய நீளத்துக்குள் அமைப்பது போல், மூன்று கருப்பொருட்களையும் சுருக்கமாக விளக்கலாம் என்று இருக்கிறேன்!"

"சுருக்கமாக விளக்குவதா? இது போன்ற முரண்பாடுகளை உங்களால் மட்டும்தான் கையாள முடியும். அது சரி. மூன்று கருப்பொருட்கள் என்கிறீர்களே? மொத்தம் நான்கு இல்லையா?"

"அறம் பொருள் இன்பம், வீடு என்ற நான்கு கருப்பொருட்களில், வீடு என்பது இலக்கு. மற்ற மூன்றும் வீடு என்ற இலக்கை அடைவதற்காக மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள். ஒருவன் அற வழி நடந்து, பொருள் ஈட்டி, முறையாக இன்பம் துய்த்தால், வீடு பேறு அவனுக்குக் கிட்டும். வீடு பேற்றைப் பெற வேண்டும் என்பதற்காக அவன் தனியாக முயற்சி செய்ய வேண்டியதில்லை என்ற கருத்தை மறைபொருளாகக் கொண்டு, அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று இந்த நூலை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப் போகிறேன்."

"அப்படியானால் நூலை வடிவமைத்து விட்டீர்கள் என்று சொல்லுங்கள்."

"ஆமாம். என்னென்ன தலைப்புகளைப் பற்றி எழுத வேண்டும் என்று சிந்தித்து 133 தலைப்புகளைத் தேர்ந்தெடுத்து அவற்றை இந்த ஓலைச் சுவடியில் குறித்து வைத்திருக்கிறேன்." 

"என்னிடம் சொல்லவேயில்லையே! காமத்துப்பாலை வடிவமைக்கும்போதாவது என் கருத்துக்களைக் கேட்டிருக்கலாம்!"

"இப்படி நீ கோபித்துக் கொள்கிறாயே, இந்த ஊடலைப் பற்றிக் கூட எழுதப் போகிறேன். உன் கருத்தைக் கேட்கவில்லை என்று கோபித்துக் கொள்ளாதே! உன்னிடம் கற்றுக் கொண்டவற்றின் அடிப்படையில்தான் அதிகாரங்களை அமைத்திருக்கிறேன். குறள்களை எழுதும்போது, நிச்சயம் உன் சிந்தனைகள் எனக்குத் தேவைப்படும். காமத்துப்பால் மட்டுமல்ல, மற்ற இரண்டு பால்களைப் பற்றி எழுதும்போது கூட உன் கருத்துக்களைக் கேட்டுக் கொள்வேன்."

"ஊடல் கொண்ட மனைவியை எப்படி அமைதிப் படுத்துவது என்பதை மட்டும் உங்களுக்கு யாரும் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை!"

"உண்மையாகவே உன் ஆலோசனை எனக்குப் பல சந்தர்ப்பங்களில் தேவைப்படும். முதல் குறளை எழுதுவதற்குக் கூட நீதான் உதவ வேண்டும்."

"அதில் என்ன குழப்பம்? முதல் குறள் கடவுளைப் பற்றித்தானே? எந்தக் கடவுளை வாழ்த்திப் பாடுவது என்ற குழப்பமா?"

"இல்லை. இந்த நூலின் முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து. அதில் இடம் பெறப் போகும் பத்து குறள்களும் பொதுவான கடவுளைப் பற்றித்தான் இருக்கும். பல்வேறு கடவுள்களை வழிபடுபவர்களும் இது தாங்கள் வழிபடும் கடவுளைத்தான் குறிக்கிறது என்று நினைக்கும் விதமாகக் கடவுளின் பொதுவான தன்மைகளைப் பற்றித்தான் எழுதப் போகிறேன். ஆனால் முதல் செய்யுளில்தான் ஒரு சிக்கல்."

"என்ன சிக்கல்?"

"பொதுவாகத் தமிழ்க் காப்பியங்கள் உலகு என்ற சொல்லுடன் துவங்குவதுதான் மரபு. உலகு என்று ஆரம்பித்தால் அதை எப்படித் தொடர்வது என்று புரியவில்லை."

"உலகு என்ற வார்த்தை முதல் செய்யுளில் இருந்தால் போதும், முதற் சொல்லாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை அல்லவா?"

"நீ சொல்வது சரிதான். கடவுளையும் உலகையும் தொடர்பு படுத்தி எழுத வேண்டும். எனக்குச் சரியான ஒரு கருத்து கிடைக்கவில்லை."

"நேற்று கபாலீஸ்வரர் கோவிலில் ஒருவர் உபன்யாசம் செய்து கொண்டிருந்தார். அவர் ஒரு கதை சொன்னார். ஒருமுறை சிவபெருமானிடம் ஒரு மாம்பழம் இருந்ததாம். அதை முழுதாகத் தனக்கே கொடுக்க வேண்டும் என்று விநாயகரும் முருகனும் கேட்டார்களாம். 'உங்கள் இருவரில் யார் முதலில் உலகைச் சுற்றி வருகிறார்களோ அவர்களுக்குத் தான் பழம்' என்றாராம் சிவபெருமான். முருகன் மயில் மீது ஏறி உலகைச் சுற்றி வருவதற்குள், விநாயகர் பெற்றோரை வலம் வந்து முந்திக் கொண்டாராம். பழத்தை விநாயகருக்குக் கொடுத்த சிவபெருமான், பெற்றோர்தான் உலகம் என்று முருகனுக்கு உணர்த்தினாராம்."

"சுவாரசியமான கதை. பெற்றோர்தான் உலகம். அப்படியானால் இவ்வுலகுக்கே பெற்றோர் கடவுள்தான். அவர்தானே ஆதியாக இருந்து இந்த உலகைப் படைத்தவர்? ஆதி பகவன் முதற்றே உலகு! அருமையாக அமைந்து விட்டது. ஆதி பகவன் என்றால் இவ்வுலகம் அமையக் காரணமான இறைவன் என்றும் பொருள் கொள்ளலாம். ஆதி என்ற பெயரைப் பெண் பெயராகக் கொண்டால், ஆண் பெண் என்று இரு உருவில் அமைந்த கடவுள் என்றும் கொள்ளலாம். 'ஆதி பகவன் முதற்றே உலகு' என்பதைக் குறளின் பின்பகுதியாக வைத்துக் கொள்ளலாம். ஆனால் குறளை எப்படித் துவங்குவது?"

'எழுத்துக்கள் 'அ'வில்தானே துவங்குகின்றன? எனவே உங்கள் முதல் குறளையும் 'அ'விலேயே துவங்குங்கள்."

"அருமையான யோசனை. 'அ' என்றால் அகரம். 'அகர முதல எழுத்தெல்லாம். அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.' அருமையாக அமைந்து விட்டது. முதல் குறளை நீயே அமைத்துக் கொடுத்து விட்டாய் வாசுகி!" 

"மனைவியின் பெருமை பற்றி எழுதும்போது என் பெருமையை ஞாபகம் வைத்துக் கொண்டு எழுதினால் போதும்!"

குறள் 1
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

பொருள்:
எழுத்துக்கள் 'அ' விலிருந்து துவங்குகின்றன. அதுபோல் இவ்வுலகு கடவுளை முதன்மையாகக் கொண்டிருக்கிறது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


2. கடவுள் என்னும் பொறியாளர்

நீண்ட நாட்களுக்குப் பிறகு என் நண்பன் இளங்கோவைச் சந்தித்ததில் மகிழ்ச்சியை விட ஆச்சரியமே அதிகம் ஏற்பட்டது எனக்கு. காரணம் இளங்கோவை நான் சந்தித்தது ஒரு கோவிலில்.

இளங்கோ என் பள்ளித் தோழன். பள்ளி நாட்களில் அவனுக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. இத்தனைக்கும் அவன் பெற்றோர் இருவரும் பக்தியில் ஊறியவர்கள். அவர்களது அதீத பக்தியே இளங்கோவிடம் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விட்டதோ என்னவோ!


பள்ளி நாட்களில் அவன் கோவிலுக்குப் போக மாட்டான். தன்னை ஒரு பகுத்தறிவுவாதி என்று பெருமையாகக் கூறிக்கொண்ட அவன், எங்களை எல்லாம் மூட நம்பிக்கை கொண்டவர்கள் என்று கிண்டல் செய்வான்.


பள்ளிப் படிப்பு முடிந்ததும் அவன் பொறியியல் படிப்பில் சேர்ந்து விட்டான். நான் பி.காம் படித்து, பிறகு சி.ஏ படித்து சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் ஆகத் தொழில் செய்து வந்தேன்.


பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்செயலாக இளங்கோவைக் கோவிலில் சந்தித்ததும் ஆச்சரியப்படாமல் எப்படி  இருக்க முடியும்?


கோவிலிலேயே நாங்கள் சந்தித்துச் சுருக்கமாகப்  பேசிக் கொண்டோம். கோவிலிலிருந்து வெளியே வந்ததும் அவனிடம் நான் கேட்ட முதல் கேள்வி இதுதான்: "நாத்திகனாக இருந்த உனக்குக் கடவுள் நம்பிக்கை எப்படி வந்தது?"


"பொறியியல் படித்த பிறகுதான்" என்று விளக்கினான் இளங்கோ.


 "பொறியியல் வல்லுநர்கள் மின்சாரம் முதலிய சக்திகளைப் பயன்படுத்திப் பல அற்புதமான இயந்திரங்களை உருவாக்கி இருக்கிறார்கள். அவற்றைப் பற்றியெல்லாம் படித்தபோது இந்த உலகில் இயற்கையாக அமைந்திருக்கும் பல பொறியியல் அற்புதங்களைப் பற்றி நினைத்து வியந்தேன். 

"மனித உடலையே எடுத்துக் கொள்ளேன். எந்த ஒரு விசையின் உதவியும் இன்றி நம் இதயத்தில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் பம்ப், உடலின் பல நுண்ணிய உறுப்புகளை இணைக்கும் ரத்தக் குழாய்கள், நாளங்கள், கோடிக்கணக்கான நரம்புகளால் உருவாக்கபட்டுள்ள பிரமிக்க வைக்கும் தகவல் தொடர்பு அமைப்பு, மூளை என்னும் அற்புத ரோபோட் என்று சொல்லிக்கொண்டே போகலாம். 

"இவையெல்லாம் உருவாக்கப் பட்டதன் பின்னணியில் ஒரு மிக உயர்ந்த அறிவு இருக்க வேண்டும் அல்லவா? அந்த அறிவை இறைவன் என்று பாவித்து அதை வியந்து வணங்காவிட்டால், நான் படித்த படிப்புக்கே அர்த்தம் இல்லை என்று தோன்றியது."

தான் கற்ற கல்வி அளித்த அறிவைப் பயன்படுத்திச் சிந்தித்துக் கடவுளை உணர்ந்த இளங்கோ உண்மையிலேயே ஒரு பகுத்தறிவுவாதிதான்!

குறள் 2:
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

பொருள்:

நிறைவான, தூய அறிவு படைத்த இறைவனின் திருவடிகளை வணங்குவதே கல்வி கற்பதன் பயன் ஆகும்

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


3. அர்ச்சகரின் ஆசை 

அது ஒரு பழமையான கோவில். அங்கே கூட்டம் அதிகம் இருப்பதில்லை. ஒரு வயதான அர்ச்சகர் அங்கே பூஜை செய்து வந்தார்.

ஒரு நாள் நான் கோவிலுக்குப் போனபோது அர்ச்சகரைத் தவிர வேறு யாருமே இல்லை. அவரிடம் ஒன்று கேட்க வேண்டும் என்று தோன்றியது.

கோவிலுக்கு வருபவர்கள் கடவுளிடம் பலவிதமாக வேண்டிக் கொள்வார்கள் - பெண்ணுக்குக் கல்யாணம் ஆக வேண்டும் என்பதிலிருந்து, தொந்தரவு கொடுக்கும் தொழில் கூட்டாளி சீக்கிரமே மண்டையைப் போட வேண்டும் என்பது வரை பலவித வேண்டுதல்கள்!

இந்தக் கோவில் அர்ச்சகர் என்ன வேண்டிக் கொள்வார்? பக்கத்தில் வேறு யாரும் இல்லாததால், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவரிடமே கேட்டு விட்டேன்: "சாமி, கடவுளிடம் நீங்கள் என்ன வேண்டிக் கொள்வீர்கள்?"

அவர் என்னைக் கொஞ்சம் ஆச்சரியமாகப் பார்த்தார். பிறகு என்னிடம் சொல்லலாம் என்று தோன்றியதாலோ என்னவோ, "எனக்கு நீண்ட ஆயுளைக் கொடு என்று வேண்டிக் கொள்வேன்" என்றார்.

"நீங்கள் சொல்வது விசித்திரமாக இருக்கிறதே. உங்களைப் போன்று ஆன்மீகத்தில் ஆழ்ந்தவர்கள் இறைவன் அடி சேர வேண்டும் அதாவது சொர்க்கத்துக்குப் போக வேண்டும் என்றுதானே வேண்டிக் கொள்வார்கள்?" என்று என் சிற்றறிவில் உதித்த புத்திசாலித்தனமான கேள்வியைக் கேட்டேன்!

"நான்தான் இறைவன் அடி சேர்ந்து விட்டேனே!" என்றார் அர்ச்சகர்.

"என்ன சொல்கிறீர்கள்?" என்றேன் சற்றே பயத்துடன். 

'இறைவனடி சேர்ந்து விட்டேனே' என்று அவர் சொன்னது என் முன்னே நின்ற அவர் உருவத்தைப் பற்றிச் சில கற்பனைகளை உருவாக்கி, ஒரு கணம் என்னை மயக்கத்தில் ஆழ்த்தி, மனதில் மெலிதாக ஒரு அச்சத்தை எழுப்பியது.

"இறைவன் அடி சேர்வது என்றால் என்ன? இறைவனின் திருவடிகளை நம் மனத்தில் இருத்திக் கொள்வது என்று பொருள். ஐம்பது வருடங்களுக்கு மேலாக இந்தக் கோவிலில் நான் பூசை செய்து வருகிறேன்.

"தினமும் பல மணி நேரம் கடவுளின் சன்னிதியிலேயே இருந்ததில் அவரது திருவுருவம் என் மனதில் ஆழப் பதிந்து விட்டது. அவர் திருவடியில் நான் செய்த கோடிக்கும் மேற்பட்ட அர்ச்சனைகள் அவரது திருவடிகளை என் மனதில் ஆழப் பதிய வைத்து விட்டன.

"நான் கோவிலில் இல்லாத நேரங்களிலும் என் மனக்கண்ணில் இறைவனின் திருவுருவும், திருவடிகளும்தான் நிழலாடிக் கொண்டிருக்கின்றன. இதை விட மேலான இறை அனுபவம் வேறு என்ன வேண்டும்? இந்த அனுபவத்தை இன்னும் பல காலம் நான் அனுபவிக்க வேண்டும் என்று விரும்புவதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?"

என்னை அறியாமல் அவர் திருவடிகளில் விழுந்து வணங்கினேன்.

குறள் 3:
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ்வார்.

பொருள்:
மலராகிய நம் மனதில் வந்து  அமர்ந்திருக்கும் இறைவனின் திருவடிகளைச் சரணடைந்தவர்கள் இவ்வுலகில் நீண்ட காலம் மகிழ்ச்சியாக வாழ்வார்கள். ('நிலமிசை நீடு வாழ்வார்' என்பதற்குப் பரிமேலழகர் 'வீடு என்கிற சொர்க்கத்தில் நிலையாக வாழ்வார்' என்று பொருள் கூறி இருக்கிறார்.)
இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:



                         4. நீங்கள் எந்தக் கட்சி?

"நம் அலுவலகத்தில் இரு குழுக்கள் இருக்கின்றனவே, அவற்றில் நீங்கள் எந்தக் குழு?" என்றார் குருமூர்த்தி. நாங்கள் இருவரும் ஒரே அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், இப்போதுதான் அவரை முதலில் சந்திக்கிறேன்.

"நான் எந்தக் குழுவிலும் இல்லை. நீங்கள்?" என்றேன்.

"நான் தேவராஜ் குழுதான். அவருக்குத்தான் மேலிடத்தில் செல்வாக்கு அதிகம். வெங்கடகிருஷ்ணன் குழு அவ்வளவு வலுவாக இல்லை. நீங்களும் தேவராஜ் குழுவில் சேர்ந்து விடுங்கள். அதுதான் உங்களுக்கு நல்லது."

"அப்ளிகேஷன் ஃபாரம் ஏதாவது இருக்கிறதா?" என்றேன் அப்பாவித்தனமாக.

அவர் என்னை முறைத்து விட்டுப் போய் விட்டார்.

நான் இரண்டு குழுவிலும் இல்லை என்றாலும் மூன்றாவது குழுவில் இருக்கிறேன் - பரந்தாமன் குழுவில்.

உண்மையில் பரந்தாமன் குழு என்று எதுவும் இல்லை!

எங்கள் அலுவலகத்தில் மேல் நிலையில் இரண்டு அதிகாரிகள் இருக்கிறார்கள் -  தேவராஜ், வெங்கடகிருஷ்ணன். இவர்கள் இருவருக்கும் இடையே அதிகாரப் போட்டி. யார் உயர்ந்தவர் என்று காட்டிக் கொள்வதற்காக, எப்போதுமே ஏதாவது போட்டிச் செயல்களில் ஈடுபட்டிருப்பார்கள்.

சில சமயம் தேவராஜ் கை ஓங்கி இருக்கும், வேறு சில சமயம் வெங்கடகிருஷ்ணனின் அதிகாரம் கொடி கட்டிப் பறக்கும். அநேகமாக அலுவலகம் முழுவதுமே இரண்டாகப் பிரிந்திருக்க, என் போல் ஒரு சிலர் மட்டும் இந்தக் குழு அரசியலில் பங்கேற்காமல் ஒதுங்கி இருப்போம்.

தேவராஜின் கை ஓங்கி இருந்தபோது அவர் வெங்கடகிருஷ்ணனின் குழுவைச் சேர்ந்தவர்களுக்குத் தொல்லை கொடுப்பார். தொல்லை என்பது சிறு தொந்தரவு முதல் பதவி உயர்வு வாய்ப்பு மறுக்கப்படுதல் போன்ற தீங்குகள் வரை பலவகையாக இருக்கும்.

ஒரு கட்டத்தில் தேவராஜ்தான் வெற்றி பெறுவார் என்று தோன்றியதால், வெங்கடகிருஷ்ணன் குழுவிலிருந்த சிலர் தேவராஜ் குழுவுக்கு மாறினர்.

திடீரென்று ஒருநாள் நிலைமை மாறி விட்டது. தேவராஜ் செய்த ஒரு தவறால் மேலிடத்தில் அவர் மீது அதிருப்தி ஏற்பட்டு, வெங்கடகிருஷ்ணன் கை ஓங்கி விட்டது. இப்போது வெ.கி. தன் பழிவாங்கலைத் தொடங்கி விட்டார்.

இந்தப் பழிவாங்கலில் பாதிக்கப்பட்டவர்களில் குருமூர்த்தியும் ஒருவர். அவருக்கு வரவிருந்த பதவி உயர்வு பறிபோனதுடன் அவர் மீது பல புகார்கள் எழுப்பப்பட்டு விளக்கம் கேட்கப்பட்டது.

அவர் என்னிடம் புலம்பினார். "தப்புக் கணக்குப் போட்டு விட்டேன் ஐயா! இந்த தேவராஜை நம்பி மோசம் போய் விட்டேன். பேசாமல் வெங்கடகிருஷ்ணனிடம் சரணடைந்து விடலாம் என்று பார்க்கிறேன்" என்றார்.

"மறுபடியும் தேவராஜ் கை ஓங்கினால் என்ன செய்வீர்கள்?" என்றேன்.

அவரால் பதில் சொல்ல முடியவில்லை. "ஆமாம் நீங்கள் இரண்டு குழுவிலும் இல்லையே, உங்களுக்கு எதுவும் பாதிப்பு இல்லையா?" என்றார்.

"இல்லை. பதவி உயர்வுப் பட்டியலில் என் பெயரும் இருப்பதாகச் சொல்கிறார்கள்" என்றேன்.

"அது எப்படி?" என்றார் குருமூர்த்தி வியப்புடன்.

"நான்தான் பரந்தாமன் குழுவில் இருக்கிறேனே!" என்றேன்.

"பரந்தாமன் எம்.டி. ஆயிற்றே? அவருக்கு ஏது குழு? அதுவும் அவர் எங்கோ தூரத்தில் தலைமை அலுவலகத்தில் இருக்கிறார்."

"ஆனால் அவருக்கு இங்கே நடப்பதெல்லாம் தெரியும். இந்த இரு குழுக்களின் சண்டையை அவர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். என்னைப்போல் எந்தக் குழுவிலும் சேராதவர்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால், அவர் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டார். இது தெரிந்துதான் வெங்கடகிருஷ்ணன் என் பதவி உயர்வைத் தடுக்க முயலவில்லை."

"தவறு செய்து விட்டேன். இவர்களுக்கு விசுவாசமாக இல்லாமல் கம்பெனிக்கு விசுவாசமாக இருந்திருந்தால் விருப்பு வெறுப்பு இல்லாத எம்.டி.யின் துணை எனக்கும் கிடைத்திருக்கும்" என்றார் குருமூர்த்தி வருத்தத்துடன்.

உடனேயே சமாளித்துக்கொண்டு, "இப்போதும் ஒன்றும் குடி முழுகிப் போய்விடவில்லை. இரண்டு குழுவிலிருந்தும் விலகிப் பரந்தாமன் குழுவில் சேர்ந்து விடப் போகிறேன். பரந்தாமன் குழுவில் சேர்வதற்கு அப்ளிகேஷன் ஃபாரம் இருக்கிறதா?" என்றார் சிரித்தபடி.

குறள் 4:
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

பொருள்:
விருப்பு, வெறுப்பு இல்லாத இறைவனின் அடி சேர்ந்தவர்களுக்கு எப்போதுமே துன்பம் வராது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

5. அன்னதானம் 

அந்தக் கோவிலில் அன்னதானம் நடந்து கொண்டிருந்தது. அன்னதானம் செய்தவர் தன் குடும்பத்தினருடன் சேர்ந்து எல்லோருக்கும் உணவை வழங்கிக் கொண்டிருந்தார்.

உணவை வாங்கிச் சென்று கொண்டிருந்த ஒருவர், "ஏதோ வேண்டுதலாம்!" என்றார். 

அன்னதானம் செய்தவரின் வேண்டுதல் பலிக்க வேண்டுமே என்று பரிதாபப்பட்டு இவர் உணவை வாங்கிக்கொண்டு போவது போன்ற தொனி அவர் குரலில் ஒலித்தது!

இன்னொரு நாள் அந்தக் கோவிலில் அதே போன்று வேறொரு அன்னதானம் நடந்து கொண்டிருந்தது. ஆனால் அன்னதானம் செய்தவரை அங்கே காணோம். கோவில் அர்ச்சகரே சர்க்கரைப் பொங்கலையும், புளியோதரையையும் பிரசாதமாக வழங்கிக் கொண்டிருந்தார்.

பிரசாதத்தை வாங்கிச் சென்றவர் ஒருவர் "யாருடைய உபயம் இது?" என்று கேட்டதற்கு, அர்ச்சகர் 'யாரோ ஒரு புண்ணியவான் என்னிடம் பணம் கொடுத்து புளியோதரையும், சர்க்கரைப் பொங்கலும் செய்து ஸ்வாமிக்கு நிவேதனம் செய்து  விட்டு, பிரசாதத்தை எல்லோருக்கும் கொடுக்கச் சொல்லி விட்டுப் போனார். நிறையச் செய்து எல்லோருக்கும் நிறையக் கொடுங்கள் என்றும் சொன்னார். அவருக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறதா என்பதே எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால் 'பூஜைக்கு என்னை எதிர் பார்க்காதீர்கள்' என்று சொல்லி விட்டுப் போனார். அதன்படியே அவர் இன்று வரவில்லை" என்றார்.

இந்த இரு அன்னதானங்களைப் பற்றி ஆன்மிகச் சொற்பொழிவாளர் ஒருவரிடம் கேட்டேன். அவர் சொன்னார் 

"தானே நேரில் அன்னதானம் செய்தவர் ஏதோ ஒரு பலனை எதிர்பார்த்துச் செய்திருக்கிறார். நல்லது செய்தால் நல்லது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் செய்யப்பட்டது அது. இது போன்ற நல்வினைகள் நமக்குக் குறுகிய பலனையே அளிக்கும்.

"நீங்கள் ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் கடனாகக் கொடுத்தால், அந்தப் பணம் உங்களுக்கு வட்டியுடன் திரும்பக் கிடைக்கலாம். ஒரு வேளை கடன் திரும்பி வராமல் போனால், 'கொடுத்த கடன் திரும்ப வரவில்லையே' என்று கவலைப் படுவீர்கள், வருந்துவீர்கள்.

"பலனை எதிர்பார்த்து நல்வினைகளைச் செய்பவர்களும் தாங்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்காவிட்டால், 'இத்தனை நல்ல காரியங்கள் செய்தேனே! அவற்றுக்குப் பலன் இல்லையா?' என்று புலம்புவார்கள். 

"அன்னதானம் வாங்கிச் சென்றவர் கூட அன்னதானம் செய்தவரைச் சற்றே இளக்காரமாக நினைத்து 'ஏதோ வேண்டுதலாம்' என்று பரிதாபப் பட்டோ, எகத்தாளம் செய்தோ பேசினார் பாருங்கள்!

"இரண்டாவது அன்னதானம் பலனை எதிர்பாராதது. ஒரு நாள் சிலருக்காவது ஒரு வேளை உணவு வழங்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் விளைந்தது. இதற்காக அவர் பலன் எதையும் எதிர்பார்க்கவில்லை. தான் யார் என்பதையும் காட்டிக் கொள்ளவில்லை. 

"கோவில் பூஜையில் கலந்து கொண்டு புண்ணியத்தை அடைய வேண்டும் என்றோ, அன்னதானம் பெற்றுச் செல்பவர்கள் தம் முகத்தைப் பார்த்துத் தன்னை வாழ்த்த வேண்டும் என்றோ அவர் எதிர்பார்க்கவில்லை. அர்ச்சகர் அவரைப் 'புண்ணியவான்' என்கிறார்!

 புண்ணியத்தை எதிர்பார்க்காதவருக்குப் புண்ணியவான் என்ற பெயர் கிடைக்கிறது! புண்ணியத்தை எதிர்பார்த்துச் செயல்பட்டவருக்குப் பச்சாதாபம்தான் கிடைத்தது!

"ஒருவர் தீவினைகளைச் செய்தால் பதிலுக்கு அவர் தீமைகளை அனுபவிக்க வேண்டும், நரகத்துக்குப் போக வேண்டும் அல்லது மீண்டும் பிறவி எடுத்து வந்து கஷ்டப்பட வேண்டும்.

"அதுபோல் புண்ணியங்களை எதிர்பார்த்து நற்காரியங்களைச் செய்தால் அதனால் புண்ணியம் கிடைக்கும். அந்தப் புண்ணியம்  ஒரு விதத்தில் டிராவலர்ச் செக் போல. வேறொரு சந்தர்ப்பத்தில் அவை நமக்கு நன்மைகளாக மாறும்.  

"டிராவலர்ஸ் செக்கை மாற்றுவது போல் நம் விருப்பப்படி விருப்பமான நேரத்தில், விருப்பமான விதத்தில் மாற்றிக்கொள்ள முடியாதுதான். ஆயினும் புண்ணியங்களுக்குப் பலன்கள் நிச்சயமாகக் கிடைக்கும்.

"அந்த நற்பலன்கள் இந்தப் பிறவியிலேயே கிடைக்கலாம், அடுத்த பிறவியில் கிடைக்கலாம். அல்லது உல்லாசப் பயணம் போல் சில காலம் சொர்க்கத்தில் இன்ப வாழ்வு வாழும் வாய்ப்புக் கிடைக்கலாம். ஆனால் அதன் பிறகு மீண்டும் பிறவி உண்டு.

"ஆனால் பலனை எதிர்பாராமல் நன்மைகளைச் செய்பவர்கள் இறைவனுக்கு நெருக்கமாக ஆகிறார்கள். 'நிஷ்காம்ய கர்மம்' என்று கீதையில் பகவான் சொல்கிறார். அதாவது 'பலனை எதிர்பாராத செயல்.'

"இத்தகைய செயல்களைச் செய்பவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையே சொர்க்கமாகும். இப்பிறவி முடிந்ததும் அவர்களுக்கு மறு பிறவி இருக்காது. இறைவன் திருவடி நிழலிலேயே நிரந்தரமாக இருக்கும் பேறு கிட்டும். 

"ஆனால் இப்பிறவியிலேயே இறைவனின் திருவடிகளைப் பற்றியவர்களால்தான் இது போன்று பற்றற்றுச் செயல்பட முடியும்."

எனக்கு ஓரளவு புரிந்தது போல் இருந்தது. உங்களுக்கு?

திருவள்ளுவர் சொல்வதும் இதைத்தானோ?

குறள் 5:
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ் புரிந்தார் மாட்டு

பொருள்:
இறைவனின் உண்மையான புகழை உணர்ந்து அதில் ஈடுபடுபவர்களை அறியாமையால் விளையும் இரு வினைகளும் அணுகுவதில்லை.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

6. கடவுளின் சொத்து
 
"கடவுள் நமக்கு ஐந்து புலன்களைக் கொடுத்திருப்பதே அந்தப் புலன்களின் மூலம் நாம் இன்பம் அனுபவிக்க வேண்டும் என்பதற்காகத்தானே? பின் ஏன் புலன்களை அடக்க வேண்டும் என்று எல்லோரும் சொல்கிறார்கள்?"

நான் மதித்துப் போற்றும் ஆன்மீகப் பெரியவரிடம் நான் கேட்ட கேள்வி இது.

"சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், கொழுப்பு, உடல் பருமன் போன்ற பிரச்னைகளுக்கு மருத்துவர்கள் கூறும் ஆலோசனை என்ன?" என்று என்னைக் கேட்டார் அவர்.

"குறிப்பிட்ட உணவு வகைகளை உண்ணக் கூடாது என்பார்கள். பலவித உணவுக் கட்டுப்பாட்டுகளை விதிப்பார்கள்."

"நோய் வந்தால் உணவுக் கட்டுப்பாட்டுகளை ஏற்றுக் கொள்கிறோம். முதலிலேயே கட்டுப்பாட்டோடு இருந்தால் நோய் வருவதற்கான வாய்ப்பே குறைவாகத்தானே இருக்கும்? எயிட்ஸ் போன்ற நோய்கள் ஏன் வருகின்றன? புலன்களைக் கட்டுப்படுத்தாததால்தானே?"

"ஆனால் புலன்களைக் கட்டுப்படுத்துவது கடினமான செயலாயிற்றே?"

"அதற்குத்தான் இறைவனின் துணையை நாட வேண்டும்?"

"கடவுளால் நம் புலன்களைக் கட்டுப் படுத்த முடியுமா?"

"புலன்களைக் கொடுத்தவனால் அவற்றைக் கட்டுப்படுத்த முடியாதா? ஆனால் நாம் விரும்பினால்தான் கடவுள் நமக்கு உதவுவார்."

"கடவுள் பக்தி உள்ளவர்கள் பலபேர் சாப்பாட்டில் விருப்பம் உள்ளவர்களாகவும், கேளிக்கைகளில் ஈடுபடுபவர்களாகவும் இருக்கிறார்களே!"

"அவர்கள் பக்தி உண்மையான பக்தி இல்லை. பொதுவாகவே நம் மனத்தை ஒரு திசையில் செலுத்தினால், அது மற்ற திசைகளில் போகாது. 

"சைக்கிள் ஓட்டும்போது சாலையை நேராகப் பார்த்து ஓட்டினால் சைக்கிள் நேராகப் போகும். பக்கவாட்டில் பார்த்துக் கொண்டே ஓட்டினால் சாய்ந்த பாதையில்தான் போகும். ஒழுக்கம் என்றால் சாயாமல், வளையாமல், விலகாமல் நேர்ப் பாதையில் போவது என்று பொருள்.

"யாராவது ஒருவர் அவரது பொருளை நம்மிடம் கொடுத்துப் பாதுகாக்கச் சொன்னால் அதை நாம் தவறாகப் பயன்படுத்துவோமா? எச்சரிக்கையுடன் பாதுகாப்போம் அல்லவா? 

"இந்த உடல் இறைவனின் சொத்து. அதைப் பாதுகாக்கும் பொறுப்பு நம்முடையது என்று உணர்ந்தால் புலன்களைக் கட்டுப்படுத்துவது கை கூடும். 

"இந்த உணர்வு வருவதற்கு இறைவனிடம் பக்தி வேண்டும். இறைவனிடம் பக்தி செலுத்தி ஒழுக்கமாக வாழ்ந்தால் புலன்களை நாம் கட்டுப்படுத்தலாம். நோய் நொடி இல்லாமல் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழலாம்."

அந்தப் பெரியவர் அப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று தோன்றியது.

குறள் 6:
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ்வார்.

பொருள்:
ஐம்புலன்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் படைத்த இறைவனை வணங்கி, பொய் கலவாத ஒழுக்கத்துடன் வாழ்பவர்கள் நீண்ட காலம் நலமாக வாழ்வார்கள்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


7. கலெக்டரிடம் ஒரு கோரிக்கை 

"என்னுடைய முதியோர் ஊதிய விண்ணப்பம் கலெக்டர் ஆஃபிசில் ஒரு மாதமாகத் தூங்கிக்  கொண்டிருக்கிறது. இன்னும் அது பரிசீலனைக்குக் கூட எடுத்துக் கொள்ளப்படவில்லை" என்றார் அந்த முதியவர்.

"கலெக்டர் அலுவலகத்துக்குப் போய் விசாரித்தீர்களா? என்ன சொல்கிறார்கள்?"

"பலமுறை போய் வந்து விட்டேன். ஒரு மாத ஊதியத்தொகை எவ்வளவு கிடைக்குமோ அவ்வளவு தொகை செலவழிந்து விட்டது. ஒவ்வொருவரும் ஒவ்வொருவரைக் கை காட்டுகிறார்கள். செக்‌ஷனில்  கேட்டால் தாசில்தாரைக் கேட்கச் சொல்கிறார்கள். தாசில்தாரைக் கேட்டால் ரெவின்யூ இன்ஸ்பெக்டரைக் கேட்கச் சொல்கிறார். ரெவின்யூ இன்ஸ்பெக்டர் அலுவலகத்திலேயே இருப்பதில்லை. எப்போது வருவார், எப்போது வெளியே போவார் என்று யாருக்கும் தெரியவில்லை."

"கலெக்டரைப் பார்த்தீர்களா?"

"என் போன்ற சாமானியர்கள் எல்லாம் கலெக்டரைப் பார்க்க முடியுமா?" என்றார் பெரியவர்.

"நம் போன்ற சாமானியர்களுக்கு உதவுவதற்காகத்தான் கலெக்டர் என்ற பதவியே உருவாக்கப் பட்டிருக்கிறது. நாளைக்கு நானும் உங்களுடன் வருகிறேன். கலெக்டரைப் பார்த்து விடலாம்" என்றேன்.

"அதனால் மற்ற அதிகாரிகள் கோபித்துக்கொண்டு விட மாட்டார்களே?" என்றார் பெரியவர் கவலையுடன்.

"கவலைப்படாதிர்கள். பெரிய அதிகாரியிடம் போனால் பிரச்னை நிச்சயம் தீரும்" என்று அவருக்கு உறுதி சொன்னேன்.

மறுநாள் கலெக்டர் அலுவலகத்துக்குப் போனபோது, அங்கே ஒரு பெரிய கூட்டமே கலெக்டரைப் பார்க்கக் காத்திருந்தது. பார்வையாளர் நேரம் 3 முதல் 4 மணி வரை என்று போட்டிருந்தது. ஆனால் வெளியே போயிருந்த  கலெக்டர் அலுவலகத்துக்கு வரும்போதே 4.30 மணி ஆகி விட்டது. 

'இன்று கலெக்டரைப் பார்க்க முடியாது' என்று ஊழியர்கள் கூறியதால் பெரும்பாலோர் திரும்பிப் போய் விட்டார்கள். சுமார் பத்து பேர்தான் பொறுமையாகக் காத்திருந்தோம்.

சுமார் ஐந்து மணிக்கு கலெக்டர் மணியை அடித்து பியூனை அழைத்தார். பியூனுக்குப் பின்னால் நானும் நுழைந்து விட்டேன். கலெக்டர் முகத்தில் களைப்பும் சலிப்பும் தெரிந்தது.

"என்ன?" என்றார் என்னைப் பார்த்து.

"சார்! பார்வையாளர் நேரத்தின்போது உங்களைப் பார்க்க சுமார் நூறு பேர் காத்திருந்தார்கள். பெரும்பாலோர் திரும்பிப் போய் விட்டனர். நாங்கள் பத்து பேர் இருக்கிறோம். தயை கூர்ந்து நீங்கள் எங்களைப் பார்க்க வேண்டும்" என்றேன் பணிவாக.

பியூன் என்னிடம் திரும்பி, "அதெல்லாம் பார்க்க முடியாது. யாரைக் கேட்டு உள்ளே வந்தே? வெளியே போ!" என்று விரட்டினார்.

கலெக்டர் குறுக்கிட்டு, "இரு இரு" என்று பியூனை அடக்கி விட்டு, என்னிடம் "சார். ஒரு ஐந்து நிமிடம் கழித்து நான் ஒவ்வொருவராகக் கூப்பிடுகிறேன். கொஞ்சம் காத்திருங்கள்" என்றார்.

சொன்னது போலவே, சில நிமிடங்கள் கழித்து ஒவ்வொருவராக வரச் சொல்லி அவர்கள் குறைகளைக் கேட்டார். எங்கள் முறை வந்தபோது, பெரியவரின் பிரச்னையைச் சொன்னேன்.

கலெக்டர் சம்பந்தப்பட்ட அதிகாரியை அழைத்து விசாரித்தார்.

"இதை ஏன் இன்னும் நீங்கள் பரிசீலிக்கவில்லை?"என்று அதிகாரியைக் கடிந்து கொண்டார்.

"நாளைக்கு இந்த விண்ணப்பம் என் மேஜைக்கு வர வேண்டும்" என்று அதிகாரியிடம் சொல்லி விட்டு, அருகிலிருந்த உதவியாளரிடம், "இதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். நாளைக்கு எனக்கு இது பற்றி நினைவூட்டுங்கள்" என்று சொன்னவர், பெரியவரைப் பார்த்து, "கவலைப் படாதீர்கள். நீங்கள் எல்லா விவரங்களும் சரியாகக் கொடுத்திருந்தால் இன்னும் ஒரு வாரத்துக்குள் உங்கள் ஓய்வூதியம் சாங்ஷன் ஆகி விடும்" என்றார். அவருக்கு நன்றி தெரிவித்து விட்டு வெளியே வந்தோம்.

கலெக்டர் உறுதியளித்தபடியே ஒரு வாரத்துக்குள் பெரியவருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டிருப்பதாகக் கடிதம் வந்தது.

பெரியவருக்கு மிகவும் ஆச்சரியம். "எப்படி தம்பி இது?" என்றார் என்னிடம், நம்ப முடியாமல்.

"பெரியவரே! ஒரு பிரச்னை தீரவில்லை என்றால் மேலிடத்தை அணுகினால்தான் நடக்கும்" என்றேன்.

குறள் 7:
தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

பொருள்:
தனக்கு நிகரில்லாத கடவுளின் திருவடிகளைப் பற்றினாலே ஒழிய, இவ்வுலகில் கவலை இல்லாமல் வாழ முடியாது. (இறைவனின் திருவடிகளைப் பற்றியவர்களுக்குக் கவலை எதுவும் இருக்காது.)

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

8. ஓட்டுநர் உரிமம் 
"கார் ஓட்டக் கற்றுக்கொள்ள வேண்டும். எந்த டிரைவிங் ஸ்கூலில் சேரலாம்?" என்று கேட்டான் சுனில்.

"நம் பேட்டையில் இரண்டு பள்ளிகள் இருக்கின்றன. ஒன்று 'அக்னி டிரைவிங் ஸ்கூல்.' அதில்  கட்டணம் அதிகம். பயிற்சி நேரமும் அதிகம். பெண்ட் எடுத்து விடுவார்கள். சரியாக ஓட்ட வரும் வரை டிரைவிங் டெஸ்டுக்கு அனுப்ப மாட்டார்கள்.

"இன்னொரு பள்ளியின் பெயர் 'ஃபாஸ்ட் டிராக் டிரைவிங் ஸ்கூல்.' இவர்கள் பெயருக்கு ஏற்ப அதி வேகமாகச் சொல்லிக் கொடுத்து விடுவார்கள். லைசன்ஸ் உத்தரவாதம். நன்றாக ஓட்டத் தெரிந்தாலும் சரி, தெரியாவிட்டாலும் சரி, லைசன்ஸ் கிடைத்து விடும். கட்டணமும் குறைவு" என்றான் ராகவ்.

"நான் 'ஃபாஸ்ட் டிராக் டிரைவிங் ஸ்கூலி'லேயே சேர்ந்து கொள்கிறேன். லைசன்ஸ் வாங்கி விட்டால் போதும். அப்புறம் நானே ஓட்டிப் பழகிக் கொள்வேன்" என்றான் சுனில்.

"யோசனை செய்து முடிவு செய். முதலிலேயே நன்றாகக் கற்றுக் கொள்வது நல்லது அல்லவா?"

"இல்லை. எனக்கு அதற்கெல்லாம் நேரம் இல்லை."

'ஃபாஸ்ட் டிராக்'கில் சேர்ந்து விரைவிலேயே லைசன்ஸ் வாங்கி விட்டான் சுனில்.

லைசன்ஸ் கைக்கு வந்த அடுத்த நாளே அவன் அப்பா சமீபத்தில்தான் வாங்கியிருந்த காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான். வீட்டுக்கு அருகில் போக்குவரத்து அதிகம் இல்லாத சாலைகளில் ஓட்டிப் பார்த்தான். ஓரளவு சமாளித்து ஓட்ட முடிந்தது.

இரண்டாவது நாள் காரை எடுத்துக் கொண்டு போக்குவரத்து மிகுந்த சாலைகளுக்குப் போனான். அரை மணி நேர ஓட்டத்தில் தடுமாற்றம்தான் அதிகம் ஏற்பட்டது. 

வீட்டுக்குத் திரும்பி விடலாம் என்று நினைத்தபோது கார் சாலைக்கு நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதியது. காருக்குச் சேதம். அவனுக்கும் அடி. போலிஸில் கேஸ் வேறு பதிவு செய்து விட்டார்கள்.

மருத்துவமனையில் தன்னை வந்து பார்த்த ராகவிடம் சுனில் சொன்னான். "அவசரப்பட்டு விட்டேன். கார் ரிப்பேர், மருத்துவ மனைச் செலவு, வழக்குச் செலவு என்று அப்பாவுக்கு நிறையச் செலவு வைத்து விட்டேன். பத்தாயிரம் ரூபாய் அபராதம்  கட்டினால்தான் வழக்கு முடியும் போல் இருக்கிறது."

"இப்போது வருந்தி என்ன பயன்? எந்த ஒரு பயிற்சி பெறுவதாக இருந்தாலும் திறமை, நாணயம் இரண்டும் உள்ளவர்களிடம்தான் பயிற்சி பெற வேண்டும்" என்றான் ராகவ்.

"எத்தனை மாதம் ஆனாலும் சரி, 'அக்னி டிரைவிங் ஸ்கூலில்' மறுபடியும் பயிற்சி பெற்று அவர்கள் என் கார் ஓட்டும் திறமையை அங்கீகரித்த பிறகுதான் மீண்டும் கார் ஓட்டுவேன்" என்றான் சுனில்.

குறள் 8:
அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.

பொருள்:
அறக்கடலாக விளங்கும் இறைவனின் திருவடிகளைச் சரணடைந்தவர்களால் மட்டுமே பிறவி என்ற இப்பெருங்கடலை நீந்த முடியும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

9. வணங்காத தலை
அவர் தன் சுய முயற்சியால் முன்னுக்கு வந்தவர். அது குறித்து அவருக்குப் பெருமை உண்டு. அவருக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை.

"கடவுள் என்ன செய்தார்? நான் படித்தேன், நான் உழைத்தேன், நான் சிந்தித்து, திட்டமிட்டுச் செயல்பட்டேன். பிரச்னைகள் வந்தபோது அமைதியாக அவற்றை எதிர் கொண்டேன். கடவுளிடம் உதவி கேட்கவில்லை. கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா என்பது எனக்குத் தெரியாது. அவரை வணங்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை" என்பார்.

அவருக்குத் திருமணம் ஆயிற்று. அவர் மனைவிக்குக் கடவுள் பக்தி உண்டு. அதில் அவர் குறுக்கிடவில்லை.

பல ஆண்டுகள் மண வாழ்க்கைக்குப் பிறகு ஒருமுறை அவர் மனைவி அவரிடம் சொன்னாள். "நமக்கு ஐம்புலன்கள் இருக்கின்றனவே, அவற்றின் பயன் என்ன என்று சொல்ல முடியுமா?"

"பள்ளிக்கூடத்தில் படிக்கும் சிறுவனைக் கேட்பதுபோல் கேட்கிறாயே! சரி. படித்தது ஞாபகம் வருகிறதா என்று பார்க்கிறேன். கண் - பார்ப்பதற்கு. காது - கேட்பதற்கு. நா - சுவையை உணர்வதற்கு. நாசி - மணத்தை நுகர்வதற்கு. உடல் - தொடு உணர்ச்சிக்கு. எண்ணிக்கை ஐந்து வந்து விட்டதல்லவா?"

"சரி. தலை எதற்கு?"

"புதிதாகக் கேட்கிறாயே! மூளையை உள்ளடக்குவதற்கு, முகத்துக்கு மேல் மூடியாக இருந்து உடலுக்குள் நீர், தூசு இதெல்லாம் மேலிருந்து விழாமல் தடுப்பதற்கு!"

"அதை விட முக்கியமான ஒரு பணி தலைக்கு உண்டு. இறைவனை வணங்குவது."

"ஓ! கோவிலுக்குப் போய் விட்டு வந்தாய் அல்லவா? அங்கே உபன்யாசத்தில் சொன்னார்களாக்கும்?"

"கோவிலில் ஒருவரைப் பார்த்தேன். அவருக்கு ஒரு பையன் இருக்கிறானாம். பிறவி முதலே ஐம்புலன்களும் செயலற்றிருக்கின்றனவாம். கண் திறந்திருக்கும் ஆனால் எதையும் பார்க்காது. நாவுக்குச் சுவை தெரியாது. எதைக் கொடுத்தாலும் மென்று விழுங்கும். மூக்குக்கு வாசனை தெரியாது. மல்லிகையின் மணமும் ஒன்றுதான், சாக்கடையின் நாற்றமும் ஒன்றுதான். காது சுத்தமாகக் கேட்காது. உடலில் உணர்ச்சி கிடையாது. கீழே விழுந்தாலும் வலி தெரியாது. நடைப்பிணம் என்று சொல்வார்களே அது மாதிரி என்று சொல்லி வருத்தப்பட்டார்."

"மிகவும் பரிதாபமானதுதான். ஐம்புலன்கள் உடலில் உறுப்புக்களாக இருந்தும் அவை பணி செய்யவில்லை என்பது மிகவும் கொடுமை. ஆனால் அதற்கும், கடவுளை வணங்குவதுதான் தலையின் தலையாய பணி என்று நீ சொல்வதற்கும் என்ன சம்பந்தம்?"

"ஒரு திருக்குறள் நினைவுக்கு வந்தது."

"என்ன குறள்?"

"கடவுளை வணங்காத தலை செயல்படாத புலன்களைப் போல என்று திருவள்ளுவர் சொல்கிறார்."

"திருவள்ளுவருக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு. அவர் அப்படித்தான் சொல்லுவார்! என்றாவது எனக்குக் கடவுள் நம்பிக்கை வந்தால் நானும் இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்வேன்."

"ஒருநாள் உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது."

குறள் 9:
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

பொருள்:
எட்டு குணங்களை உடைய இறைவனை வணங்காத தலை செயல்படாத புலன்களைப் போல் பயனற்றது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


10. வாழ்க்கைப் பயணம் 
ஒரு இளைஞன் ஒரு ஞானியிடம் கேட்டான் "மனிதர்களுக்குக் கடவுளின் துணை எதற்கு? கடவுளின் துணை இல்லாமல் மனிதனால் வாழ முடியாதா?"

ஞானி கேட்டார் "மோட்டார் சைக்கிள் ஒட்டத் தெரியுமா உனக்கு?"

"ஓ! பிரமாதமாக ஓட்டுவேன்."

"ஹெல்மெட் அணிந்து கொள்வாயா?"

"ஆமாம். அது கட்டாயமாயிற்றே?"

"கட்டாயம் இல்லாவிட்டால் அணிய மாட்டாயா?"

"இல்லை. பாதுகாப்புக்கு அது அவசியம்."

"காரில் போகும்போது ஏன் சீட் பெல்ட் அணிந்து கொள்கிறோம்?"

"அதுவும் பாதுகாப்புக்காகத்தான். விபத்து நடந்தால் ஹெல்மெட், சீட் பெல்ட் அணிந்தவர்களுக்கு உயிர் பிழைக்கும் வாய்ப்பு அதிகம் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறதே!"

"மோட்டார் சைக்கிளில் போனால் ஹெல்மெட். காரில் போனால் சீட் பெல்ட். விமானத்திலும் சீட் பெல்ட், ஆக்ஸிஜன் மாஸ்க், பாரசூட் போன்ற பாதுகாப்பு சாதனங்கள், கப்பலில் போனால் லைஃப் போட், நீந்துவதானால் மிதவை, லைஃப் ஜாக்கெட் போன்ற சாதனங்கள் என்று வாழ்க்கையில் நாம் போகும் எல்லாப் பயணங்களுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொள்கிறோமே, வாழ்க்கை என்ற இந்த நீண்ட பயணத்துக்கு என்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொள்கிறோம்?"

இளைஞன் பதில் சொல்லாமல் ஞானியின் விளக்கத்துக்குக் காத்திருந்தான்.

"இந்த உலக வாழ்க்கை என்பது ஒரு கடலில் நீந்துவது போல். இந்தப் பிறவியை நாம் கடந்து போவது ஒரு பெருங்கடலை நீந்திக் கடப்பது போலத்தான். இந்தக் கடலை நாம் நீந்திக் கடப்பதுதான் வாழ்க்கை. இந்த நீண்ட அபாயம் நிறைந்த நீச்சல் பயணத்தில் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள நாம் நாட வேண்டியது இறைவனின் பாதுகாப்பைத்தான். இறைவனின் திருவடிகளைப் பற்றியவர்களுக்கு இந்தப் பிறவிக் கடலை நீந்திச் செல்வது எளிதாக இருக்கும். மற்றவர்களுக்கு அது கடினமாகத்தான் இருக்கும்."

குறள் 10:
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேராதார்.

பொருள்:
இறைவனின் திருவடிகளில் பக்தி செலுத்துபவர்களால் மட்டுமே பிறவி என்ற இந்தப் பெருங்கடலை நீந்த முடியும். மற்றவர்களால் நீந்த முடியாது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்
















13 comments:

  1. தாங்களின் இவ் பதிவை , ஒலி வடிவில் வெளியிட நான் பயன் படுத்திகொள்ளலாமா ?
    கதைகளை மட்டும்

    ReplyDelete
    Replies
    1. பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த வலைத்தள முகவரியையும் பகிர்ந்து கொண்டால் நன்றி.

      Delete
    2. ஐயா எனது யூடிப் பதிவுகளிளும் பயன் படுத்த விரும்புகிறேன், உங்கள் வலைமனையின் பெயரையும் சேர்த்து.
      நன்றி

      Delete
    3. வலைப்பதிவின் இணைப்பையும் சேர்த்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

      Delete
  2. Respected sir, great efforts and it is a real.pleasure to read the stories. May i use the stories for a website developed for government school kids? It is a social responsibility activity..no commercials involved..just for education purpose..

    ReplyDelete
    Replies
    1. Yes. You can use. Sorry for the delayed reply. Best wishes for your efforts.

      Delete
  3. Sir unga stories nan use pannikkalama

    ReplyDelete
    Replies
    1. பயன்படுத்திஃ கொள்ளலாம் இந்த வலைப்பதிவின் இணைப்பையும் வெளியிட்டு.நன்றி. தாமதாமன பதிலளிப்புக்கு மன்னிக்கவும்.

      Delete
  4. Hi sir,
    Vanakkam. I am really unimpressed with your thirukkural kathaikal. I wish to talk with you in phone. Will I get that privilege? Awaiting your reply

    ReplyDelete
    Replies
    1. Sorry for the delayed response. You can call me at 7667198379. Thanks.

      Delete
  5. ஐயா உங்க கதைகளை நான் எனது YouTube channel la பயன் படுத்தி கொள்ளலாமா

    ReplyDelete
    Replies
    1. பயன்படுத்திக் கொள்ளலாம், இந்த வலைத்தளத்தின் இணைப்புடன். நன்றி!

      Delete
  6. வணக்கம் சார். உங்கள் கதைகள் ஆடியோ புத்தகத்திற்க்கு பயன்படுத்திக் கொள்ளலாமா.

    ReplyDelete