About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

அதிகாரம் 2 - வான் சிறப்பு

திருக்குறள் 
அறத்துப்பால்
பாயிரவியல்
அதிகாரம் 2
வான் சிறப்பு

11. மழையே அமுதம்

(மகாகவி பாரதியார் ஒரு பாத்திரமாக வரும் இந்தக் கதை ஒரு கற்பனை என்று கூறத் தேவையில்லை!)

மழைக்கு ஒதுங்கி சிலர் ஒரு மண்டபத்தில் நின்று கொண்டிருந்தனர். நின்று கொண்டிருந்தவர்களில் பாரதியாரும் ஒருவர்.

பாரதியார் உற்சாகமாக, உரத்த குரலில் தாம் இயற்றிய பாடலைப் பாடிக் கொண்டிருந்தார்.

"வீர சுதந்திரம் வேண்டி நின்றார்      
       பின்பு வேறொன்று கொள்வரோ? 
என்றும் ஆரமுதுண்ண ஆசை கொண்டார் 
        கள்ளில் அறிவைச் செலுத்துவரோ?"

அவர் அருகில் இருந்த ஒரு இளைஞன், பாரதியாரிடம் கேட்டான். "ஏன் கவிஞரே, உங்கள் பாட்டின் முதல் அடிக்கு எனக்கு அர்த்தம் புரிகிறது. இரண்டாவது அடிக்கு அர்த்தம் புரியவில்லையே!" என்றான்.

"என்ன புரியவில்லை?" என்றார் பாரதியார்.

"ஆரமுது என்று குறிப்பிடுகிறீர்களே அது என்ன?"

"அருமையான சுவையுடைய அமுது."

"ஓ! அப்படியானால் அமுது உண்ண வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் கள் குடிக்க மாட்டார்கள். அப்படித்தானே?"

"கள் குடிக்க வேண்டும் என்ற எண்ணம் கூட அவர்களுக்குத் தோன்றாது" என்ற பாரதியார், தன் மூக்கை ஒரு முறை சுளித்து விட்டு, "ஆமாம். உன்னிடமிருந்து ஏதோ வாடை வருகிறதே? நீ கள் குடித்திருக்கிறாயா?" என்றார்.

"ஆமாம். கவிஞரே" என்றான் இளைஞன்.

"குடிப் பழக்கத்தை விட்டு விடு தம்பி. அது உன்னையே குடித்து விடும். உன் குடியையும் கெடுத்து விடும்" என்றார் பாரதியார்.

"ஆமாம் கவிஞரே, உண்மையாகவே, அமுதம் குடிக்க வேண்டும் என்று ஆசை இருந்தால், கள் குடிக்கும் ஆசை போய் விடுமா?"

"அதில் என்ன சந்தேகம்?"

"அமுதம் எப்படி இருக்கும் என்றே எனக்குத் தெரியாதே? அப்புறம் எப்படி அமுதம் குடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு வரும்?"

"உனக்குக் காதலி இருக்கிறாளா?"

"இருக்கிறாள்" என்றான் இளைஞன் சற்றே வெட்கத்துடன்.

"அவளை முத்தமிட வேண்டும் என்று உனக்கு ஆசை உண்டா?"

பாரதியார் உரத்த குரலில் கேட்ட இந்தக் கேள்வியால் சற்றே நெளிந்த அந்த இளைஞன், "உண்டு" என்றான்.

"இதற்கு முன்னால் வேறு எந்தப் பெண்ணையாவது முத்தமிட்டிருக்கிறாயா?" என்றார் பாரதியார்.

"அது எப்படி?" என்று ஆரம்பித்த இளைஞன் "இல்லை" என்றான்.

"முத்தமிடும் அனுபவம் எப்படி இருக்கும் என்று தெரியாமலேயே உன் காதலியை முத்தமிட ஆசைப்படுகிறாயே, அது எப்படி?" என்று மடக்கினார் பாரதியார்.

"கவிஞரே! உங்கள் காதைக் கொடுங்கள். உங்களுக்கு மட்டும் கேட்கும்படி ரகசியமாகச் சொல்லுகிறேன்" என்ற இளைஞன் "முத்தமிடும் அனுபவம் எப்படி இருக்கும் என்று உங்கள் பாடலிலிருந்துதான் தெரிந்து கொண்டேன். அதுவும் கள் குடிப்பதுபோல்தான் இருக்கும்!" என்றான்.

"என்னது?" என்றார் பாரதியார் அதிர்ச்சியுடன்.

இப்போது இளைஞன் உரத்த குரலில், "'கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம் கள்வெறி கொள்ளுதடி!' என்று நீங்கள்தானே பாடியிருக்கிறீர்கள்?" என்று பாடி விட்டு, "அப்படியானால் உங்களுக்கும் கள் குடித்த அனுபவம் இருந்திருக்க வேண்டுமே!" என்றான்.

"முட்டாள்! அது குழந்தையைப் பற்றி எழுதிய பாடல். நான் ஒன்றை நினைத்து எழுதினால் நீங்கள் வேறுவிதமாகப் புரிந்து கொள்கிறீர்கள்!" என்ற பாரதியார், "உனக்கு அமுதின் சுவை எப்படி இருக்க வேண்டும் என்று தெரிய வேண்டும். அவ்வளவுதானே? இங்கே வா!" என்று அவன் கையைப் பிடித்து இழுத்தபடித் தெருவில் இறங்கினார். 

தெருவின் நடுவில் நின்று இளைஞனின் முகத்தைத் தன் கையால் உயர்த்தி வானத்தை நோக்கித் திருப்பினார். அவன் வாயை அழுத்தித் திறக்க வைத்தார்.

அவன் கொஞ்சம் மழைநீரைக் குடித்ததும் அவனை விடுவித்தார். 

"இப்போது நீ குடித்தாயே, இதுதான் அமுதம்! எப்படி என்கிறாயா? அமுதம் வானுலகத்தில்தானே இருக்கிறது? மழையும் வானிலிருந்துதானே பெய்கிறது? இந்தத் தூய நீர்தான் அமுதம். தேவர்கள் உயிர் வாழ அமுதம் தேவை. மனிதர்கள் உயிர் வாழ நீர் தேவை. இதை நான் சொல்லவில்லை. என் முப்பாட்டன் திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார்" என்று ஆவேசமாகக் கூவிய பாரதியார்,

"யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல், 
        வள்ளுவர் போல், இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை: 
         உண்மை, வெறும் புகழ்ச்சி இல்லை"

என்று பாடியபடியே அந்த மழையில் ஆனந்த நடனம் ஆடத் துவங்கினார்.

குறள் 11:
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.

பொருள்:
உலகத்தில் உள்ள உயிர்களை எல்லாம் வாழ வைப்பதால், மழையை அமிர்தம் என்றே கருத வேண்டும். 

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

12. மழையே உணவு

கட்டிட வேலையை முடித்து விட்டு வேலாயி வீட்டுக்கு வரும்போது இருட்டி விட்டது. 

வீடு என்றால் வாசல், ஜன்னல், அறைகள் போன்ற அமைப்புகளைக் கொண்ட கட்டிடம் என்று நினைத்து விடாதீர்கள். 

பல வீடுகளின் கட்டிடப் பணிகளில் பணியாற்றியுள்ள வேலாயிக்கு வீடு என்பது நடைபாதையில் ஒரு சிறிய இடம்தான்.

சில சமயம், பாதி கட்டப்பட்ட வீட்டில் காவல் காக்கும் பொறுப்பு அவள் குடும்பத்துக்குக் கிடைக்கும். அப்போது மட்டும் வீட்டின்  வெளிச் சுவருக்கு அருகே ஆஸ்பெஸ்டாஸ் கூரையாலும் மரத் தடுப்புகளாலும் ஆன ஒரு வீடு அவர்களுக்குக் கிடைக்கும். அவள் குழந்தைகளுக்கும், மழையிலிருந்தும் குளிரிலிருந்தும் பாதுகாப்புக் கிடைக்கும். குழாய்த் தண்ணீர், கழிப்பறைகள் போன்ற 'ஆடம்பரங்களையும்' அனுபவிக்கலாம்.

அவளது தற்போதைய வீடு நடைபாதையில்தான் இருந்தது. வேறு சில கூலித் தொழிலாளர்களும் பக்கத்திலேயே குடி இருந்தனர்.

வேலாயியின் கணவன் வடிவேலுவும் கட்டிடத் தொழிலாளிதான். ஆனால் அவனுக்கு தினமும் வேலை செய்த அலுப்பு நீங்க 'சக்தி பானம்' அருந்த வேண்டும். 

'ஆண்களுக்கு மட்டும்தான் உடல் அலுப்பு வருமா?' என்று வேலாயிக்குத் தோன்றும். ஆனால் அவள் அப்படிக் கேட்டதில்லை. கேட்டு விட்டு, அடி வாங்கிக்கொண்டு உடல் அலுப்பை மேலும் அதிகமாக்கிக் கொள்ள அவள் தயாராயில்லை!

அவளைப் போன்ற பெண்கள் வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு வந்து, நீர், விறகு போன்ற சாதனங்களைச் சேகரித்து, சமையல் செய்து அனைவருக்கும் பரிமாறி, மீதம் இருப்பதை உண்டு விட்டுப் பாத்திரங்களை சிறிதளவு நீரில் திறமையாகக் கழுவி வைத்து விட்டுத் தூங்க வேண்டும். 

உடல் அலுப்பு என்ற ஒன்றைப் பற்றி அவளைப் போன்ற பெண்கள் எப்படிப் பேச முடியும்?

அவள் கணவனின் தினக்கூலி அவன் உடல் அலுப்பைப் போக்கிக் கொள்ளவே சரியாகி விடும் என்பதால் அவளுடைய கூலியில்தான் குடும்பம் நடக்க வேண்டும்.

வேலாயி வீட்டுக்கு வந்தபோது அவளுடைய நான்கு குழந்தைகளில் மூன்று பேர் விளையாடிக் கொண்டிருந்தனர். கடைசிக் குழந்தை கைக்குழந்தை. எப்போதும் அவளிடம்தான் இருக்கும்.

காலையில் குடித்த கஞ்சிக்குப் பிறகு வேறு எதையும் உண்ணாத நிலையிலும் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளைப் பார்த்ததும் ஒரு புறம் அவளுக்கு நிம்மதியாக இருந்தாலும், மறுபுறம் ஓவென்று அழலாம் போல் தோன்றியது.

'வீட்டில்' மளிகைச் சாமான்களின் இருப்பைப் பார்த்தபோது வேலாயிக்கு அழுகை வந்து விட்டது. 

'இந்த அரிசி எல்லோருக்கும் போதாதே!' நடைபாதைவாசி என்பதால் அவர்கள் குடும்பத்துக்கு ரேஷன் கார்டு கிடையாது. ரேஷன் கடையில் திருட்டு அரிசி நாளைக்குத்தான் வாங்க முடியும்.

'என்ன செய்வது? இருப்பதை வைத்துச் சமாளிக்க வேண்டியதுதான்.'

காலையில் குழாயடியில் வரிசையில் நின்று பிடித்து வைத்திருந்த ஒரு குடம் நீரில் பசி தீர்த்துக் கொள்வதற்காக அவள் குழந்தைகள் குடித்தது போகப் பாதிக் குடத்துக்கு மேல் மீதி இருந்தது. 

'நல்ல வேளை தண்ணீராவது இருக்கிறதே. தண்ணீர்தான் கடவுள்!'

சோறு வடித்துக் குழந்தைகளுக்குப் பரிமாறுமுன் சிறிது மோரையும் நிறைய நீரையும் கலந்தாள்.

குழந்தைகள் தங்கள் அலுமினியத் தட்டுகளில் பரிமாறப்பட்ட சோற்றைக் கையால் எடுத்துச் சாப்பிட முடியாமல் அப்படியே உறிஞ்சிக் குடித்தனர். சீக்கிரம் சாப்பிட்டு முடித்து விட்ட உற்சாகத்தில் மறுபடியும் விளையாடப் போய் விட்டனர். 

தண்ணீரின் துணையால் இப்போது வயிறு நிரம்பி விட்டது. இரவில் பசி எடுக்கும். அப்போது எழுந்து தண்ணீர் குடித்து விட்டுப் படுத்துக் கொண்டு விடுவார்கள்.

கலயத்தில் சோறு கொஞ்சம்தான் மீதி இருந்தது. குடித்து விட்டுத் தாமதமாக வரும் கணவனுக்குக் கண்டிப்பாகச் சோறு வேண்டும். எனவே இருந்த சோற்றைக் கணவனுக்கு வைத்து விட்டு வேலாயி தண்ணீரைக் குடித்துப் பசியைத் தற்காலிகமாகப் போக்கிக் கொண்டாள்.

கைக்குழந்தைக்கு மட்டும் பால் கொடுக்க வேண்டும். பால் வைத்திருந்த பாத்திரத்தைப் பார்த்தாள். பாலும் குறைவாகத்தான் இருந்தது. கொஞ்சம் நீரை ஊற்றினால்தான் ஒரு பாட்டில் வரும். 

பாலில் சிறிது. நீரை ஊற்றிச் சுட வைத்தாள். நல்லவேளை. வீட்டில் கொஞ்சம் சர்க்கரை இருந்தது. சர்க்கரையைக் கொஞ்சம் கூடுதலாகப் போட்டால் நீர்த்த பால் கூட ருசிக்கும் குழந்தைக்கு!

குழந்தையை மடியில் படுக்க வைத்து, பாட்டிலில் இருந்த பாலைக் கொடுத்தாள். மிதமான சூட்டுடனும், மிகையான நீருடனும் இருந்த பாலைக் குழந்தை ரசித்து அருந்தியது. பாட்டில் காலியானதும்,குழந்தை திருப்தியாகக் கொஞ்சம் பாலை வாயிலிருந்து வழிய விட்டுத் தாயைப் பார்த்துச் சிரித்தது. 

அந்தச் சிரிப்பில் வேலாயி தன் அத்தனை வருத்தங்களையும் மறந்தாள்.

குறள் 12:
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

பொருள்:
உண்பவர்களுக்கு உணவுப் பொருட்களை விளைவித்துத் தருவதோடு, அவர்களுக்குத் தானே உணவாகவும் ஆகிறது மழை.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

13. அம்மாவின் மீது அக்கறை 

"என்ன அரிசி விலை இவ்வளவு ஏறிடுச்சு?" என்று அதிர்ச்சியுடன் கேட்டார் செல்வராஜ்.

"என்னங்க செய்யறது? நாட்டில எங்கியுமே சரியா மழை பெய்யல. அரிசி உற்பத்தி கொறைஞ்சு போச்சு. விலை ஏறாம என்ன செய்யும்?" என்று தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வரும் பொருளாதார நிபுணர் போல் விளக்கினார் கடைக்காரர். 

செல்வராஜ் முணுமுணுத்தபடியே அரிசியை வாங்கிச் சென்றார்.

ஆனால் செல்வராஜ் போன்ற சிலர் போல் எல்லோராலும் விலை கொடுத்து அரிசி வாங்க முடியவில்லை. 

உதாரணத்துக்கு, கோயம்பேடு காய்கறிச் சந்தையில் கூலித் தொழிலாளியாக வேலை செய்யும் சண்முகத்தை எடுத்துக் கொள்ளலாம்.

இப்போதெல்லாம் சண்முகம் வீட்டில் அரிசிச் சோறு என்பது மின்சாரம் போல் அவ்வப்போது வந்து போகும் சமாசாரம் ஆகி விட்டது.

அரிசி உற்பத்திக் குறைவு அரசாங்கத்தின் உணவுப் பொருள் கையிருப்பையும் பாதித்து விட்டது.

ரேஷன் கார்டுகளுக்கு வழக்கம் போல் அரிசி வழங்கப்படும் என்ற அரசாங்கத்தின் அறிவிப்பே பிரச்னை இருப்பதைச் சுட்டிக் காட்டியது.

சில மாதங்கள் ரேஷன் அரிசி வினியோகம் தாமதமாகவும், சில மாதங்களில் அடியோடு இல்லாமலும் இருந்தது.

ரேஷன் அரிசி வழங்கப்பட்டாலும் பெரும்பாலான ஏழைக் குடும்பங்களுக்கு அது மாதம் முழுவதற்கும் போதாது என்பதால் மாதத்தின் கடைசி வாரத்துக்கான அரிசியை வெளிச் சந்தையில்தான் வாங்க வேண்டி இருந்தது, 

கடும் விலை உயர்வினால் வெளிச் சந்தையில் அரிசி வாங்குவது சண்முகத்துக்குப் பெரும்பாலும் இயலாத ஒன்றாக ஆகி விட்டது.

அவன் மனைவி முத்தழகுதான் பாவம் தினமும் குழந்தைகளைச் சமாளிக்க வேண்டி இருந்தது.

அன்று மாலை பள்ளியிலிருந்து வந்ததும் அவள் மகன் முருகேஷும், மகள் திவ்யாவும் கேட்ட ஒரே கேள்வி, "இன்னைக்காவது, ராத்திரி சோறு உண்டா?" என்பதுதான்.

அவர்கள் கேள்விக்கு பதில் சொல்லாமல், முத்தழகு அவர்களிடம் கேட்டாள் "இன்னிக்கு ஸ்கூல்ல முட்டை போட்டாங்களா?"

"போட்டாங்க. ஆனா முட்டை அழுகலா இருந்ததால எனக்குச் சாப்பிடப் புடிக்கலே" என்றாள் திவ்யா. "அது சரி. ராத்திரி அரிசிச் சோறு உண்டா இல்லையா?" என்றாள் விடாமல்.

"இல்லடி கண்ணு. இன்னிக்கும் அரிசி கெடைக்கல. உங்கப்பா  நாளைக்குக் காலையில கோயம்பேடுலேர்ந்து வரப்ப அரிசி வாங்கிட்டு வரேன்னு சொல்லி இருக்காரு" என்றாள் முத்தழகு.

"அப்ப ராத்திரிக்கு என்ன?" என்றான் முருகேஷ்.

"ரொட்டி வாங்கித் தரேன்" என்றாள் முத்தழகு.

"அய்ய! அந்தக் காஞ்ச ரொட்டிய யாரு திம்பாங்க? பரவாயில்ல. நாளைக்கு மதியம்தான் ஸ்கூல்ல அரிசிச் சோறு போடுவாங்களே. அதுவரை பசி தாங்கிக்கிறோம்" என்றாள் திவ்யா.

"அது சரிம்மா. அப்பா வேலை செய்யற இடத்திலியே எதாவது சாப்பிட்டுக்குவாரு. எங்களுக்கு மதிய உணவு இருக்கு. நீ என்ன பண்ணுவ?" என்று கேட்டபடி தாயின் கையைப் பாசத்துடன் பற்றினான் முருகேஷ்.

சாப்பாடு இல்லை என்பதை இயல்பாக ஏற்றுக்கொள்ளும் மகள், தன் பசியைப் பற்றிக் கவலைப் படாமல் அம்மா பட்டினி கிடக்கிறாளே என்று ஏங்கும் மகன், இவர்களை நினைத்தபோது, முத்தழகுக்கு வயிறு நிறைந்து விட்டது போல் இருந்தது.

குறள் 13:
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.

பொருள்:
நீர் சூழ்ந்த உலகம் இது  என்றாலும், வானம் பொய்த்து விட்டால், உலகின் உள்ளிருந்து பசிக்கொடுமை (மக்களை) வாட்டும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

14. கடையில் வாங்கிய அரிசி 

கோவிந்தன் இப்போதெல்லாம் அதிகம் பார்ப்பது வானத்தைத்தான். 

வீட்டுக்கு வராத பிள்ளையை எதிர் நோக்கி ஒரு தாய் அடிக்கடி வாசலில் வந்து நின்று தெருக்கோடியைப் பார்ப்பது போல் அடிக்கடி வானத்தைப் பார்ப்பது கோவிந்தனுக்கு ஒரு தவிர்க்க முடியாத பழக்கமாகி விட்டது.

"இப்படியே மானத்தைப் பாத்துக்கிட்டிருந்தீங்கன்னா தலையே மேல திரும்பிடப் போவுது!" என்று அவன் மனைவி அன்னம் சில சமயம் சொன்னாலும் அவனது கவலையில் அவளுக்கும் பங்கு உண்டு. 

மழை பெய்யாதது அவளையும்தானே பாதித்திருக்கிறது?

"டி வியில மழை வரும்னு ஏதாவது சொன்னாங்களா?" என்றான்  கோவிந்தன், என்ன பதில் வரும் என்று தெரிந்தும்.

"சொன்னாங்க. பம்பாயில கொட்டு கொட்டுன்னு கொட்டுதாம். ஆனா நம்ம ஊருக்கு வர இருந்த புயல் ஆந்திராவுக்குப் போயிடுச்சாம்!" என்றாள் அன்னம் ஆற்றாமையுடன்.

மழை பொய்ப்பது இது தொடர்ந்து மூன்றாவது ஆண்டு. விவசாயத்தையே நம்பி இருக்கும் அவனைப் போன்றவர்களுக்கு வானம் பொய்த்து விட்டால் வாழ்க்கையே இல்லையே!

"சாப்பிட வாங்க" என்று மனைவி அழைத்தபோது கோவிந்தனுக்குச் சாப்பிடப் பிடிக்கவில்லை. 

தன் வயலில் தானே உழுது, பயிர் செய்து, அறுவடை செய்த நெல்லில் பெரும்பகுதியை விற்று விட்டு, தனக்கென்று வைத்துக் கொண்ட நெல்லைக் குதிரில் சேமித்து அவ்வப்போது அரிசி மில்லில் அரைத்து அந்த அரிசியில் உண்ட காலம் போய், டவுனுக்குப் போய் அரிசிக்கடையில் அரிசி வாங்கி, பேருந்தில் ஊருக்குக் கொண்டு வந்து அந்த அரிசியில் உணவு சமைத்துச் சாப்பிடும் கொடுமை!

அவன் வேண்டா வெறுப்பாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அன்னம் சொன்னாள்: 

"உங்களுக்கு ஏன் இவ்வளவு பிடிவாதம்? நெலத்தைத்தான் ரியல் எஸ்டேட்காரங்க நல்ல வெலைக்குக் கேக்கிறாங்களே? பேசாம நெலத்தை வித்துட்டுப் பணத்தை பாங்கில போட்டுட்டு வர வட்டியில நம்ம ரெண்டு பேரும் காலத்தை ஓட்ட முடியாதா? பையன் வேற கொஞ்சம் பணம் அனுப்பறான்."

"உழவன் நெலத்தை வித்துட்டு வட்டிப் பணத்துல சாப்பிடறதுன்னு ஆரம்பிச்சா உலகம் என்னத்துக்கு ஆகும்?"

"ஆமாம்! நீங்க ஒத்தர்தான் உழவரா? நம்ம ஊரிலேயே வெவசாயம் பண்ணறவங்க எவ்வளவோ பேரு நெலத்தை வித்துட்டு நிம்மதியா இருக்காங்க!"

கோவிந்தன் பேசாமல் சாப்பிட்டு முடித்தான். சாப்பாடு இறங்குவதே கஷ்டமாக இருந்தது.

சாப்பிட்டு விட்டுக் கை கழுவும்போது ஒரு எண்ணம் தோன்றியது. 

நிலத்தை வைத்துக் கொண்டு விவசாயம் செய்ய முடியாமல் இப்படிக் குற்ற உணர்ச்சியோடு அரிசி வாங்கிச் சாப்பிடுவதை விட, நிலத்தை விற்று விட்டால், அரிசி வாங்கிச் சாப்பிடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று ஆகி விடுமே!

கை கழுவியபின், கோவிந்தன் அன்னத்திடம் சொன்னான் 

"மறுபடி அந்த ரியல் எஸ்டேட்காரங்க வந்தா நிலத்தை விற்க சம்மதம்னு சொல்லிடப் போறேன்."

அன்னம் நம்ப முடியாமல் தன் கணவனைப் பார்த்தாள்.

குறள் 14:
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.

பொருள்:
உழவர்கள் வருவாய் ஈட்ட உதவும்  மழை வளம் குறைந்து விட்டால், உழவர்கள் தங்கள் உழவுத் தொழிலைக் கைவிட்டு விடுவார்கள்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

15. ஆவதும் மழையாலே!

அந்த ஓட்டு வீட்டுக்குள் ஆங்காங்கே ஒழுகிக் கொண்டிருந்த மழை நீரைப் பாத்திரங்களை வைத்துத் தரையில் வழியாமல் தடுக்க முயன்று கொண்டிருந்தாள் பார்வதி. 

அவள் முயற்சி படுதோல்வி அடைந்து விட்டதைக் கண்டு தரையில் ஓடிக் கொண்டிருந்த நீர் எள்ளி நகையாடியது.

தன் பக்கத்தில் மழை நீர் ஓடுவதைப் பொருட்படுத்தாமல் மண்தரையில் மல்லாந்து படுத்தபடியே உற்சாகமாகப் பாடிக் கொண்டிருந்தான் சிவக்கொழுந்து.

"ஏன்யா, நான் ஒருத்தி இங்க மழைத்தண்ணி ஒழுகுதேன்னு தவிச்சுக்கிட்டிருக்கேன். நீ பாட்டுக்கு மல்லாக்கப் படுத்துக்கிட்டு உல்லாசமாப் பாடிக்கிட்டிருக்கே?" என்றாள் பார்வதி எரிச்சலுடன்.

"ஒழுகினா ஒழுகிட்டுப் போவட்டும் புள்ள. இப்ப அதுக்கு என்ன பண்ண முடியும்? மழை நிக்கட்டும். நானே ஓடு மாத்தி ஒழுகலை நிறுத்திடறேன்" என்றான் சிவக்கொழுந்து சிறிதும் அசையாமல்.

"ரெண்டு வருசமா மழை இல்லையே, அப்ப ஓடு மாத்தி இருக்கலாம் இல்லே?"

"ரெண்டு வருஷமா ஒழுகலியே? அப்புறம் எதுக்கு ஓடு மாத்தணும்?"

பார்வதி தன்னால் வீட்டுக்குள் மழை நீர் ஒடுவதைத் தடுக்க முடியாது என்று உணர்ந்து, கணவனின் தலைமாட்டில் வந்து உட்கார்ந்து கொண்டு வெற்றிலைப் பையைப் பிரித்தாள்.

"சும்மா பாக்கு திங்காதே! சோகை புடிக்கும்" என்றான் சிவக்கொழுந்து.

"சோகை புடிச்சவங்களுக்குத்தான் அடிக்கடி பாக்கு போடத் தோணுமாம்."

"யார் சொன்னது உனக்கு?"

"டி.வியிலே சொன்னாங்க."

"டிவியிலே இதைத்தான் பாப்பியா?"

"வேறு எதைப் பாக்கணும்? ஒனக்கு வேணும்னா 'வயலும் வாழ்வும்' பாரு. அந்த நேரத்தில நான் டிவி பாக்காம இருக்கேன்!"

"ரெண்டு வருஷமா மழை இல்ல. ஆத்துல தண்ணி இல்ல. பம்ப் செட் போட்டுப் பயிர் செய்யறத்துக்கும் நமக்கு வசதி இல்ல. வெவசாயமே இல்லேங்கறப்ப 'வயலும் வாழ்வும்' பாத்து என்ன பிரயோசனம்?"

"அப்ப நான் மட்டும் வீட்டுல ஒக்காந்து என்ன செய்யறது? ஒடம்பைப் பத்தியும் வியாதிகளைப் பத்தியும் வர நிகழ்ச்சியைக்கூடப் பாக்கக் கூடாதா?"

"சரி சரி கோவிச்சுக்காதே. நான் மழை பெய்யுதேங்கற சந்தோஷத்தில இருக்கேன். வீடு  ஒழுகுதேன்னு இப்ப கவலைப்பட வேண்டாம். ரெண்டு நாள்ள மழை நின்னதும் அதெல்லாம் சரி பண்ணிடலாம். ரெண்டு வருஷமா மழை பெய்யாம எவ்வளவு கஷ்டப்பட்டோம்னு நெனச்சுப் பாரு."

"எனக்குத் தெரியாதா, மழை பெய்யாதப்ப எவ்வளவு கஷ்டப்பட்டோம்னு? நம்ம நெலத்துலேயும் பயிர் பண்ண முடியல. ஊர்ல நாலஞ்சு பேருதான் பம்ப்பு செட்டை ஓட்டி வெவசாயம் பண்ணினதால, மீதி எல்லோரும் கூலி வேலைக்கு வந்துட்டதால கூலி வேலையும் சில நாள்தான் கெடைக்கும்னு ஆயிப் போச்சு. 

"எப்பவுமே வராத அளவுக்கு சாப்பாட்டுக்கே கஷ்டம் வந்து, புள்ளைங்களும் நம்மளோடு சேந்து பட்டினி கெடக்க வேண்டாமேன்னுட்டு அதுங்களை எங்க ஆத்தா வீட்டுக்கு அனுப்பி.. புள்ளைங்க மொகத்தைப் பாத்தே மாசக்கணக்குல ஆச்சு. அதுங்களும் பாவம் நம்மளைப் பாக்காம ஏங்கிக் கிட்டு இருக்குங்க."

பார்வதியின் கண்களில் தண்ணீர் வந்து விட்டது.

"அழாதே பார்வதி. நம்ம கஷ்டம் எல்லாம்தான் தீரப் போகுதே. இன்னும் ரெண்டு நாள்ள மழை நின்னுடும்னு சொல்றாங்க. உடனேயே பெருந்தனக்காரங்கள்ளாம் அவங்க நெலத்தில உழவு வேலையை ஆரம்பிச்சுடுவாங்க. ஒரு பத்து நாளைக்குக் கூலி வேல கெடச்சாப் போதும். அப்புறம் நாமளும் நம்ம நெலத்துல வேலையை ஆரம்பிச்சுடலாம்."

"அது இருக்கட்டும். மொதல்ல ஊருக்குப் போயிப் புள்ளைங்களைக் கூட்டிக்கிட்டு வந்துடு. வேலைக்குப் போவ  ஆரம்பிச்சுட்டேன்னா அப்புறம் போவ முடியாது."

"சரி. நாளைக்கே போயி அழைச்சுட்டு வந்துடறேன்."

"மழை நிக்கறத்துக்குள்ளேயா?"

"மழை நிக்காட்டி என்ன? மழை நமக்கு நல்லதுதானே பண்ணிக்கிட்டிருக்கு! மழையில நனைஞ்சா எனக்கு ஒண்ணும் ஆயிடாது. புள்ளைங்களை அழைச்சுக்கிட்டுக் கெளம்பறபோது மழை நின்னிருக்கும்."

"என்ன மழையோ! ரெண்டு வருஷமா பெய்யாம நம்மளை வாட்டி எடுத்துச்சு. இப்ப நல்லாப் பேஞ்சு நம்ம வயத்தில பாலை வாத்திருக்கு!" என்று கையெடுத்துக் கும்பிட்டு மழையை வணங்கினாள் பார்வதி.

குறள் 15:
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.

பொருள்:
பெய்யாமல் உலக மக்களின் வாழ்க்கையைக் கெடுப்பதும் மழைதான். மழை பொய்த்ததால் வளம் குன்றித் தவிக்கும் மக்களுக்கு ஆதரவாகப் பெய்வதும் மழைதான்!

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

16. புல் கூட முளைக்காது!

"ஏம்ப்பா? இது மானம் பாத்த பூமி. இங்கே மழை பெய்யறதே அபூர்வம். முக்காவாசி பேரு இந்த ஊரை விட்டுப் போயிட்டாங்க. 

"ஏதோ ஊர்ல ரெண்டு மூணு பொதுக்கெணறு இருக்கு. அதுங்கள்ள எண்பது அடி ஆழத்துல தண்ணி இருக்கு. அஞ்சு மைல் தொலைவிலே கடல் இருக்கறதுனால தண்ணி ஊறிக்கிட்டு இருக்கு. அதுவும் ரொம்பக் கடுப்பாத்தான் இருக்கும். 

"இந்த ஊர்ல இருக்கறவங்க கொஞ்சம் பேரும் வேற போக்கிடம் இல்லாமதான் இங்க இருக்காங்க.  பக்கத்து டவுனுக்குப் போய் ஏதோ வேலை, வியாபாரம்னு செஞ்சுக்கிட்டு பொழைப்பை நடத்திக்கிட்டிருக்காங்க. இந்த ஊர்ல வந்து போர்வெல் போட்டுத் தண்ணி எடுத்துத் தோட்டம் போடப் போறேங்கறியே!"

ஊர்ப் பெரியவர் விலாவாரியாகப் பேசியதைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டான் சாமிநாதன்.

"நீங்களே சொல்றீங்க இல்ல, எண்பது அடில தண்ணி இருக்குன்னு? அப்ப போர் போட்டா தண்ணி வராதா? கடல் பக்கத்துல இருக்கறதுனால நிலத்துல தண்ணி ஊறிக்கிட்டே இருக்கும்னும் சொல்றீங்க! அப்படின்னா ஒரு தடவை போர் போட்டா தண்ணி எப்பவும் இருந்துக்கிட்டே இருக்கும் இல்லே? 

"இங்கே இருக்கறவங்க யாரும் பணம் செலவழிச்சு போர் போட முயற்சி பண்ணல. தங்களோட வீட்டுல கூடக் கெணறு வெட்டாம, பொதுக் கெணத்திலேயே ராட்டினம் போட்டு, அங்கியே குளிச்சு, துணி தோச்சு, வீட்டுத் தேவைக்கு ரெண்டு மூணு கொடம் தண்ணி எடுத்துக்கிட்டுப் போறாங்க. 

"யாருக்கும் பணம் செலவழிச்சு போர் போட வசதி இல்லையோ, மனசு இல்லையோ தெரியலே! நான் இந்த ஊர்க்காரன். நான் துபாய்க்குப் போய்ச் சம்பாதிக்க ஆரம்பிச்சதும், என் குடும்பத்துல எல்லோரும் வேற ஊருக்குப் போயிட்டாங்க. இப்ப நான் துபாயிலேருந்து திரும்பி வந்திருக்கேன். 

"நானும் வேற ஊர்ல செட்டில் ஆகியிருக்கலாம். இங்க எனக்குக் கொஞ்சம் நெலம் இருக்கறதுனால அதுல தோட்டம் போட்டு ஏதாவது பயிர் செய்யலாம்னு பாக்கறேன். அப்படிச் செஞ்சா, இந்த ஊரே மாறிடும். இன்னும் ஆறு மாசம் கழிச்சுப் பாருங்க இந்த ஊரு எப்படி இருக்கப் போவுதுன்னு!" என்று சொல்லி விடை பெற்றான் சாமிநாதன்.

'ம்ம். நீ துபாயில சம்பாதிச்சதையெல்லாம் தண்ணியில விடணும்னு விதி இருந்தா அதை யார் தடுக்க முடியும்?' என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டார் பெரியவர்.

அடுத்த சில நாட்களில் சாமிநாதன் சுறுசுறுப்பாக வேலைகளைத் தொடங்கினான். 

முதலில் ஒரு வாட்டர் டிவைனரைத் தருவித்துத் தன் நிலத்தில் எந்த இடத்தில் போர் போட்டால் சரியாக இருக்கும் என்று தேர்வு செய்தான். 

பிறகு போர் இயந்திரம் பொருத்தப்பட்ட லாரியும், ஆட்களும் வந்து சேர்ந்தனர். அத்துடன் அவர்கள் குடிக்கப் பல மினரல் வாட்டர் குடுவைகளும் வந்து இறங்கின!

போர் இயந்திரம் ஏக இரைச்சல் போட்டுக்கொண்டு மூன்று நாட்கள் துளையிட்டபின் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து தண்ணீர் பீய்ச்சிக்கொண்டு வெளி வந்தது. சாமிநாதன் அனைவருக்கும் இனிப்பு கொடுத்துக் கொண்டாடினான். 

நடப்பவற்றை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஊர்ப்பெரியவர் கூட 'ஏது, பய சொன்னதைச் செஞ்சுடுவான் போல இருக்கே!' என்று நினைத்தார்.

அடுத்த நாளே பம்ப்செட்டை நிறுவிக் குழாய்களை அமைத்துத் தற்காலிக மின்சார இணைப்பில் மோட்டாரை இயங்கச் செய்தான். 

குழாயிலிருந்து தண்ணிர் கொட்டியதும் எல்லோரும் கைகொட்டிக் கொண்டாடினர். தண்ணிரின் சுவை கூட அவ்வளவு மோசமாக இல்லை.

ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே தண்ணிர் நின்று விட்டது. மறுபடியும் மோட்டார் போட்டபோது தண்ணீர் வரவில்லை. 

மினரல் வாட்டர் குடுவைகளிலிருந்து தண்ணிர் ஊற்றி மறுபடி முயற்சி செய்தபோது மீண்டும் தண்ணிர் வந்தது. அடுத்த சில நிமிடங்களில் நின்று விட்டது.

சாமிநாதன் கவலையுடன் போர் போட்டவர்களைப் பார்த்தான். 

அவர்களின் தலைவன் தயக்கத்துடன், "சார். நெலத்தில தண்ணி கொஞ்சம்தான் இருக்கும் போல இருக்கு. மறுபடியும் தண்ணி ஊறினால்தான் வரும்" என்றான்.

"எப்ப ஊறும்?" என்றான் சாமிநாதன்.

"நாளைக்கு முயற்சி பண்ணிப் பாருங்க!" என்றான் போர் போட்டவன். 

"பாருங்க!" என்று அவன் சொன்னதிலிருந்து அவன் வேலை முடிந்து விட்டது என்பதும், அடுத்த நாள் அவன் வர மாட்டான் என்பதும் புரிந்தது.

சாமிநாதன் யோசனை செய்யத் துவங்கியபோது ஊர் மக்கள் சிலர் ஓட்டமாக அங்கே வந்தனர்.

 "யோவ், என்ன வேலை ஐயா பண்ணி இருக்கீங்க? எல்லாக் கெணத்திலேயும் தண்ணி கீழ எறங்கிடுச்சு. ராட்டினத்துல இழுத்தா கால் கொடம் கூட வரலே! மறுபடி தண்ணி ஊற எவ்வளவு நாள் ஆகுமோ தெரியல்லியே!" என்றனர் கோபத்துடன்.

நிலைமையைப் புரிந்து கொண்ட போர் ஆசாமி "சார், முதலாளி பாக்கி பணத்தை வாங்கிக்கிட்டு வரச் சொன்னாரு. நாங்க கெளம்பணும். செக் குடுத்தாலும் பரவாயில்லை" என்றான்.

"தம்பி, மழை பெஞ்சாத்தான் தண்ணி! மழை பெய்யாத ஊரில இது மாதிரி முயற்சி எல்லாம் வேணாம்னு நான் அப்பவே சொன்னேன். இப்ப கெணறுகள்ள இருந்த தண்ணியும் போயிடுச்சு. எங்களுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க?" என்றார் ஊர்ப் பெரியவர்.

குறள் 16:
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.

பொருள்:
விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலொழிய இந்த மண்ணில் ஒரு புல் கூட முளைக்காது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

17. கடல் நீர் வற்றும்?

"அப்பா, இன்னிக்குக் கிளாசுலே மழை எப்படிப் பெய்யுதுன்னு சொல்லிக் கொடுத்தாங்க" என்றான் ரிஷப்.

"எனக்குத் தெரியுமே! 'ஜோ'ன்னுதானே பெய்யும்?" என்றான் அவன் தந்தை முருகன்.

"குழந்தை, தான் ஸ்கூல்ல கத்துக்கிட்டதைச் சொல்ல வரான். அதைக் கேக்காம ஜோக் அடிக்கறீங்க! அவனுக்கு இன்ட்ரஸ்ட் இல்லாம போயிடாதா?" என்று கணவனைக் கடிந்து கொண்ட நிர்மலா, "நீ சொல்லுடா கண்ணா?" என்றாள் மகனிடம், ஆவலை வெளிக்காட்டி.

"வெய்யில் அடிக்குது இல்ல, அந்த சூட்டுல  கடல் தண்ணி எல்லாம் ஆவியாகி மேல போயி மேகமா மாறிடும். அந்த மேகம்தான் மழையாப் பெய்யுது" என்று விளக்கினான் ரிஷப்.

"வெரி குட்" என்று மகனை வாரி அணைத்துக் கொண்ட நிர்மலா, "உங்கப்பாவுக்கு இது தெரியாது. நீ சொன்னப்பறம்தான் தெரியும்!" என்றாள்.

ரிஷப் பொங்கி வரும் சிரிப்புடன் அப்பாவைப் பார்த்தான் 

"உனக்கு இதையெல்லாம் ஸ்கூல்ல சொல்லிக் கொடுக்கலியா அப்பா?"

"நான் ஸ்கூலுக்கே போகலை. டைரக்டா காலேஜுக்குப் போயிட்டேன். உங்கம்மாதான் ஒவ்வொரு கிளாசிலேயும் ரெண்டு வருஷம் இருந்துட்டு வந்தா. அதனால உங்கம்மாவுக்கு இதெல்லாம் நல்லாத் தெரியும்" என்று சொல்லி மனைவியைப் பழி தீர்த்துக் கொண்ட முருகன், மனைவி ஏதும் சொல்வதற்குள் மகனிடம் திரும்பி, "ஆமாம் நான் ஒரு கேள்வி கேக்கறேன், பதில் சொல்லுவியா?" என்றான்.

"கேளு" என்றான் ரிஷப் உற்சாகமாக.

"கடலிலே இருந்து நிறையத் தண்ணி ஆவியாப் போயிடுது இல்ல, ஆனா கடல்ல தண்ணி குறையறதே இல்லையே அது ஏன்?"

"ஏன்னா அந்தத் தண்ணி எல்லாம்தான் மழையா கடலுக்கே திரும்பி வந்துடுதே!" என்றான் ரிஷப்.

"வெரி குட்" என்றான் முருகன். நிர்மலாவின் முகத்தில் பெருமிதம் பொங்கி வழிந்து கொண்டிருந்தது.

"ஏம்ப்பா, எனக்கு ஒரு டவுட். ஒரு வேளை ஆவியாப் போன தண்ணியெல்லாம் மழையா மாறாம அப்படியே மேகமா ஆகாயத்துலேயே இருந்துட்டா என்ன ஆகும்?"

"புத்திசாலிடா நீ! அப்படி ஆவியாப் போன தண்ணியெல்லாம் மழையாத் திரும்பி வரலேன்னா கடல்ல தண்ணி குறைஞ்சு, கடைசில கடலே  வத்திப் போனாலும் போயிடும்" என்றான் முருகன்.

"அப்படி எல்லாம் நடக்காது இல்ல?" என்றான் ரிஷப், அப்படி நடந்தால் தங்களால் பீச்சுக்குப் போக முடியாதே என்ற கவலையுடன்!

"நடக்காது. கவலைப் படாதே. ஆனா நாம ஒண்ணு புரிஞ்சுக்கணும். நாம எவ்வளவோ பணம் செலவழிக்கறோம். மறுபடி நமக்குப் பணம் வரலேன்னா என்ன ஆகும்"

"அப்பறம் நம்மளால எதுவும் வாங்க முடியாது."

"கரெக்ட். உங்கம்மாவால ஷாப்பிங் போக முடியாது! உலகத்தில எல்லாமே  போயிட்டுப் போயிட்டுத் திரும்பி வரணும். அப்பதான் உலகம் இயங்கும். நமக்கு மத்தவங்க உதவி செஞ்சா, நாமும் மத்தவங்களுக்கு உதவி செய்யணும். மத்தவங்க செய்யற உதவியை மட்டும் நாம வாங்கி வச்சுக்கிட்டு, நாம யாருக்கும் உதவி செய்யாம இருந்தா, நமக்கு உதவி கெடைக்கறது நின்னு போயிடும்" என்றான் முருகன்.

"பெரிய தத்துவத்தைச் சொல்லிட்டீங்க போங்க!" என்றாள் நிர்மலா கேலியாக.

"கடல் வத்திப் போனாலும் போகும். ஆனா நீ மட்டும் என்னைப் பாராட்டவே மாட்டே!" என்று போலியாகச் சலித்துக் கொண்டான் முருகன்.

குறள் 17:
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.

பொருள்:
கடலிலிருந்து நீரை எடுத்துகொண்ட மேகம் அந்த நீரை மழையாகப் பெய்யாமல் போனால், பரந்த கடல் கூடத் தன் நீர் வளத்தை இழந்து விடும்

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

18.வேண்டாம் திருவிழா!

"இந்த வருஷம் நம்ம கோவில் திருவிழாவைப் போன வருஷத்தை விடச் சிறப்பாகக் கொண்டாடணும்" என்றார் தர்மகர்த்தா நாச்சிமுத்து

"அதுக்கென்ன ஜமாய்ச்சுப் புடலாம்" என்றார் அய்யாக்கண்ணு.

"ஜமாய்க்கறதாம்! இவரு ஒரு பைசா குடுக்கப் போறதில்ல"  என்று நினைத்துக் கொண்டார் மருதமுத்து.

வேறு யாரும் எதுவும் பேசாமல் மௌனமாகத் தலையாட்டினர்.

"சரி. அப்ப நானும் விழாக்குழு உறுப்பினர்களும் நாளையிலேருந்து வசூலுக்குக் கெளம்பறோம்" என்று தர்மகர்த்தா சொல்ல, கூட்டம் முடிந்தது.

ரண்டு வாரங்கள் கழித்து நாச்சிமுத்துவும் மற்றவர்களும் பொன்னம்பலத்தின் வீட்டுக்கு வந்தார்கள். பொன்னம்பலம் ஊரிலேயே பெரிய பணக்காரர். எந்த நல்ல காரியம் என்றாலும் தாரளமாக உதவி செய்பவர்.

வந்தவர்களை உட்கார வைத்து, காப்பி கொடுத்து உபசரித்து விட்டு, பொன்னம்பலம் கேட்டார். "ஆமாம், வசூல் எல்லாம் எந்த மட்டிலே இருக்கு?"

"என்னத்தைச் சொல்றது? போன வருஷம் வசூல் ஆனதில் கால் பங்கு கூட வசூலாகலை. எப்பவும் தாரளமாகக்  கொடுக்கறவங்க கூட இந்த வருஷம் குறைவாத்தான் குடுத்தாங்க. எல்லாத்தையும் விடக் கொடுமை என்னன்னா, சில பேரு 'இவ்வளவு பணம் செலவழிச்சுத் திருவிழா நடத்தணுமா?'ன்னு கேக்கறாங்க. சில பேரு பிடிவாதமா பத்து ரூபாய் கூடக் கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க. தெய்வ நம்பிக்கையே குறைஞ்சுக்கிட்டு வருது."

"வழக்கம் போல நீங்கதான்  பெரிய அளவில உதவி செஞ்சு திருவிழாவைச் சிறப்பா நடத்தி வைக்கணும்" என்றார்  நமசிவாயம் என்ற விழாக்குழு உறுப்பினர்.

பொன்னம்பலம் கொஞ்சம் யோசித்து விட்டு, "இந்த வருஷம் வசூல் ஏன் இவ்வளவு குறைவுன்னு உங்களுக்குத் தெரியாதா?" என்றார்.

"தெரியாமல் என்ன? மழை பெய்யாததால விவசாயம் நடக்கல. ஊர்ல மத்த தொழில் செய்யறவங்களுக்கும் வருமானம் குறைஞ்சு போச்சு. யார் கிட்டேயும் காசு இல்லே. காசு இருந்தாலும் நம்ம தேவைக்கே போதாதபோது கோவில் திருவிழாவுக்குக்  கொடுக்கணுமான்னு யோசிக்கிறாங்க!"

"எல்லோருக்கும் அதே நிலைமைதான். உங்களையும் என்னையும் சேர்த்துத்தான் சொல்றேன். ஊர்ல மழை பெய்யாமல் விவசாயம் குன்றிப் போனா, திருவிழாக்கள் நடத்தறதில மக்களுக்கு எப்படி உற்சாகம் இருக்கும்?"

"நீங்க என்ன சொல்ல வரீங்க?"

"இந்த வருஷம் திருவிழா வேண்டாம். வசூல் பண்ணின பணத்தைத் திருப்பிக் கொடுத்துடுங்க. அடுத்த வருஷம் நல்லபடியா விழாவை நடத்திடலாம்" என்றார் பொன்னம்பலம்.

"விழா நடத்தலேன்னா சாமிக்குத்தம் ஆகி விடாதா?'

"ஏங்க, மழை பெய்ய வைக்க வேண்டியது சாமிதானே? மழை பெய்யலேன்னா அது சாமியோட குத்தம் இல்லையா? நான் கடவுளுக்கு எதிராப் பேசலே. நீங்க சாமிக் குத்தம்னு சொன்னீங்களே அதுக்காகச் சொன்னேன். நாம வருஷா வருஷம் விழா நடத்திக்கிட்டுத்தானே இருக்கோம்? இந்த வருஷம் நாம விழா நடத்தலேன்னா அதுக்கு என்ன காரணம்னு சாமிக்குத் தெரியாதா? மழை பெய்து மக்கள் வளமாக இருந்தால்தானே சாமிக்கு விழா எல்லாம் எடுக்க முடியும்? குடும்பத்தை நடத்தறத்துக்கே கஷ்டப்படுகிற மனுஷன் சாமிக்கு விழா எடுக்கறதைப் பத்தி எப்படி யோசிக்க முடியும்?"

"அப்ப நாங்க வரோம்" என்று எழுந்தார் தர்மகர்த்தா.

குறள் 18:
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

பொருள்:
வானிலிருந்து பெய்ய வேண்டிய மழை பெய்யாவிட்டால் வான் உலகில் வாழும் தெய்வங்களுக்கு நடக்க வேண்டிய பூசைகள் கூட நடக்காது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

19. தானமும் கெட்டது, தவமும் கெட்டது!

சுந்தரலிங்கம் தன் பெற்றோர்களிடம் மிகுந்த ஈடுபாடு உடையவர். ஒவ்வொரு வருடமும் அவர்கள் நினைவு நாளன்று ஊர் முழுவதற்கும் அன்னதானம் செய்வது என்பதைக் கடந்த பல வருடங்களாகச் செய்து வந்தார்.

அந்த ஊரில் இருந்த வசதி படைத்தவர்கள் கூட அவர் செய்யும் அன்னதானத்தில் கலந்து கொள்வார்கள். ஏனெனில், தான் அன்னதானம் செய்யும் அன்று ஊரில் யார் வீட்டிலும் சமையல் செய்யக்கூடாது என்பது அவரது அன்புக் கட்டளை.

பிறர் வீட்டில் உண்ணுவதில்லை என்ற விரதத்தைக் கடைப் பிடித்து வந்த வீரராகவன் மட்டும் அதில் கலந்து கொள்ள மாட்டார். ஆனால் அவரது குடும்பத்தினர் கலந்து கொள்வார்கள். அதை வீரராகவன் தடுத்ததில்லை.

வீரராகவன் ஒரு தவ வாழ்க்கை வாழ்பவர். வருடத்தில் பாதி நாட்கள் ஏதோ ஒரு விரதம் என்று சொல்லிச் சாப்பிட மாட்டார். அவர் உடல் இளைத்து எலும்புகள் தெரியும். ஆனால் முகத்தில் ஒரு தெய்வீகக் களை இருக்கும். 

விரதம் இருக்கும் நாட்களில் அவர் முகத்தில் பசிக் களைப்பைப் பார்க்க முடியாது. ஒரு பரவச நிலைதான் அவர் முகத்தில் குடி கொண்டிருக்கும்.

"உங்களுக்கு விஷயம் தெரியுமா? இந்த வருஷம் சுந்தரலிங்கம் ஐயா அன்னதானம் செய்யப் போவதில்லையாம். அந்த வழக்கத்தையே நிறுத்தி விடப் போகிறாராம்" என்றாள்  வீரராகவனின் மனைவி பங்கஜம்,

"என்ன காரணம்?" என்றார் வீரராகவன்.

"இறந்து போனவர்களுக்கு இருபத்தைந்து வருடங்கள் சடங்குகள் செய்தால் போதும் என்று யாரோ சொன்னார்களாம். 'நான்தான் முப்பது வருடங்களாக அன்னதானம் செய்து வருகிறேனே! அதனால் இதோடு போதும் என்று முடிவு செய்து விட்டேன்' என்று சுந்தரலிங்கம் சொன்னாராம்!"

"அவர் அப்படிச் சொன்னதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. ஆனால் இது அவர் வெளியில் சொல்லிக் கொள்கிற காரணமே தவிர, உண்மையான காரணம் இல்லை."

"என்ன சொல்கிறீர்கள்?'

"நம் ஊரில் தொடர்ந்து மூன்று வருடங்களாக மழை இல்லை. விவசாயம் இல்லை. வியாபாரம் இல்லை. எல்லோரும் எப்படியோ வயிற்றையும் வாயையும் கட்டி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்."

"இது போன்ற சமயங்களில்தானே அன்னதானம் அவசியம்?"

"சரிதான். ஆனால் சுந்தரலிங்கம் ஒன்றும் குபேரர் இல்லை. நம்மைப்போல் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்தான். ஒரு சிறிய விவசாயி. அவருக்கும் குடும்பம் இருக்கிறது. 

"அவர் எப்போதும் செய்யும் அன்னதானமே அவர் வசதிக்கு மீறியதுதான். ஆனால் தன் பெற்றோர் மீது இருக்கும் மரியாதைக்காக அவர் இதை ஒரளவு கஷ்டப்பட்டுச் செய்து வந்திருக்கிறார். 

"மழை பொய்த்து வாழ்க்கையே சுமையாகிப் போன நிலையில், கடந்த இரண்டு வருடங்களாக அவர் இந்த அன்னதானத்தை நடத்தியதே பெரிய விஷயம். இந்த வருடம் நிச்சயமாக நடத்த முடியாது என்ற நிலையில்தான் ஏதோ ஒரு காரணத்தைத் தேடி இருக்கிறார்."

"அதற்கு ஏன் ஒரேயடியாக நிறுத்த வேண்டும்? இந்த வருடம் நிறுத்தி விட்டு அடுத்த வருடம் மழை பெய்ததும் மறுபடியும் தொடர்ந்திருக்கலாமே?" என்றாள் பங்கஜம்.

"இது போன்ற விஷயங்கள் ஒருமுறை தடைப்பட்டால் மீண்டும் அவற்றைத் தொடர்வது கஷ்டம். ஒருமுறை தடைப்பட்ட  உறுத்தல் ஆயுள் முழுவதும் இருந்து கொண்டே இருக்கும். அதை விட ஏதோ ஒரு காரணத்தைக் கற்பித்து ஒரேயடியாக நிறுத்தி விட்டால் நிம்மதியாக இருக்கும்" என்றார் வீரராகவன்.

"இதையெல்லாம் நீங்கள் ஒரு அனுமானத்தில்தானே சொல்கிறீர்கள்? அவர் மனதில் என்ன இருக்கிறது என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?"

"அனுமானத்தில் இல்லை பங்கஜம், அனுபவத்தில் சொல்கிறேன்" என்றார் வீரராகவன். "அவருக்காவது அன்னதானம் செய்யப் பொருள் தேவைப்பட்டது. ஒரு காசு செலவில்லாமல் நான் செய்து கொண்டு வந்த சில அனுஷ்டானங்களையே  நிறுத்தி விட்டேனே நான்!"

"நிறுத்தி விட்டீர்களா? நான் கவனிக்கவே இல்லையே?" என்றாள் பங்கஜம் வியப்புடன்.

"நான் நிறுத்தியது அதிகாலையில் செய்யும் அனுஷ்டானங்களை. நான் செய்ததையும் நீ பார்த்திருக்க மாட்டாய், நிறுத்தியதையும் பார்த்திருக்க மாட்டாய்!"

"ஏன் நிறுத்தினீர்கள்?"

"முன்பெல்லாம் அதிகாலையில் எழுந்து ஆற்றுக்குப் போய்க் குளித்து விட்டு அங்கேயே என் அனுஷ்டானங்களைச் செய்து விட்டு வருவேன். மழை பெய்யாததால் ஆற்றில் நீர் இல்லாமல் போனதும், நம் வீட்டுக் கிணற்றிலிருந்து தண்ணீர் இழுத்துக் குளித்து வீட்டு வீட்டிலேயே அனுஷ்டானங்களைச் செய்ய ஆரம்பித்தேன். பிறகு கிணற்று நீர் மிகவும் கீழே போனதும், தண்ணீர் இழுப்பதே கஷ்டமாக இருந்தது. சில சமயம் 'இன்று ஒருநாள் செய்யாவிட்டால் என்ன?' என்று தோன்றும். ஒரு நாள் ஒரு எண்ணம் தோன்றியது. 'இவ்வளவு வருடங்களாக இதையெல்லாம் தவறாமல் முறையாகச் செய்து வருகிறோமே, நமக்கும் வயதாகி விட்டது, இனிமேல் இதையெல்லாம் விட்டு விட்டால் என்ன?' என்று யோசித்தேன். இப்போது சில அனுஷ்டானங்களை விட்டு விட்டு நிம்மதியாக இருக்கிறேன். சுந்தரலிங்கமும் என் மனநிலையில்தான் இருந்திருப்பார் என்று நினைக்கிறேன்."

"உங்களால் தண்ணீர் இழுக்க முடியவில்லை என்றால் என்னை எழுப்பி இருந்தால் நான் தண்ணீர் இழுத்துக் கொடுத்திருப்பேனே!" என்றாள் பங்கஜம் ஆதங்கத்துடன்.

"நீ ஏற்கெனவே வீட்டு உபயோகத்துக்காக நாள் முழுவதும் தண்ணீர் இழுத்தும் வெளியிலிருந்து நீர் சுமந்து வந்தும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாய். நான் வேறு உனக்குக் கஷ்டம் கொடுக்க வேண்டுமா?"

"உங்கள் அனுஷ்டானங்களுக்கு உதவி செய்வது எனக்கு ஒரு கஷ்டமா?"

"அனுஷ்டானம் என்பது தன் உடலை வருத்திக் கொண்டு ஒருவர் செய்ய வேண்டிய செயல். மற்றவர்களைக் கஷ்டப்படுத்திச் செய்வதற்குப் பெயர் அனுஷ்டானம் இல்லை, அக்கிரமம்" என்ற வீரராகவன் தொடர்ந்து, "மழை பெய்யாதது எப்படிப்பட்ட பாதிப்புகளையெல்லாம் ஏற்படுத்துகிறது பார்த்தாயா? ஒரு புறம் மற்றவர் நலனுக்காகச்  செய்யப்படும் தானங்கள் நின்று போகின்றன. மறுபுறம் ஒரு மனிதன் தன்னுடைய உயர்வுக்காகச் செய்யும் தவம் போன்ற செயல்களும் நின்று போகின்றன. மழை பொய்ப்பது என்பது பெரிய கொடுமைதான்!" என்றார்.

குறள் 19:
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்

பொருள்:
மழை பெய்யாவிட்டால் இந்தப் பரந்த உலகத்தில் தானம், தவம் என்ற இரண்டுமே இல்லாமல் போய் விடும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

20. அரசனின் கவலை

மன்னன் சந்திரசூடன் மிகவும்  கோபமாகக் காணப்பட்டான். 

"அமைச்சரே! கடந்த சில மாதங்களாக நம் நாட்டில் வழிப்பறிக் கொள்ளை, வீடு புகுந்து கொள்ளை அடித்தல், அங்காடிகளில் சிறிதும் பெரிதுமாகத் திருட்டுக்கள் போன்ற சம்பவங்கள் அதிகரித்து விட்டனவே? இது உங்கள் கவனத்துக்கு வந்ததா?"

"வந்தது மன்னா! நானே இது பற்றித் தங்களிடம் எடுத்துக் கூற இருந்தேன். அதற்குள் தாங்களே கேட்டு விட்டீர்கள்" என்றார் அமைச்சர்.

"என்னிடம் எடுத்துக் கூற என்ன இருக்கிறது? காவல் தலைவரிடம் சொல்லிக் கடுமையான நடவடிக்கை எடுக்கச் சொல்ல வேண்டியதுதானே?"

"மன்னா! காவல் தலைவர் கடுமையான நடவடிக்கை எடுத்துத்தான் வருகிறார். பல திருடர்கள் பிடிபட்டு தண்டனை வழங்கப் பெற்றிருக்கின்றனர். ஆனால் இது மட்டும் போதாது என்று நான் நினைக்கிறேன்."

"தண்டனைகளைக் கடுமையாக்க வேண்டும் என்கிறீர்களா? அதற்குத்தான் உங்களுக்கு அதிகாரம் இருக்கிறதே?"

"மன்னிக்க வேண்டும் மன்னவா! இது போன்ற குற்றங்களைப் புரிபவர்களுக்குக்  கடுமையான தண்டனை கொடுப்பதே தவறு என்று நான் நினைக்கிறேன்?"

"குற்றம் செய்பவர்களுக்குக் கடுமையான தண்டனை கொடுக்கப்படாவிட்டால் குற்றங்கள் எப்படிக் குறையும்?"

"பொதுவாக நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் இப்போது நடைபெறும் இது போன்ற குற்றங்களை வேறு விதமாகப் பார்க்க வேண்டும் என்பது எனது பணிவான கருத்து."

"வேறு எப்படிப் பார்க்க வேண்டும் என்கிறீர்கள்?"

"மன்னா! கடந்த ஆண்டு நம் நாட்டில் மழை பெய்யவில்லை. பல பகுதிகளில் கடுமையான பஞ்சம் நிலவுகிறது. திருட்டுக்கள் சமீப காலமாக அதிகரித்திருப்பதற்கு இதுதான் காரணம்."

"'வயிற்றுக்கு இல்லாததால்தான்தான் திருடுகிறார்கள்' என்பது திருட்டை நியாயப்படுத்த எப்போதுமே பயன்படுத்தப்படும் வாதம்தானே!"

"திருட்டு என்பது ஒழுக்கம் தவறிய செயல் என்பது உண்மைதான். வயிற்றுக்கு இல்லாதவர்கள் எல்லோருமே திருடுவதில்லை. ஒழுக்கத்தை மதிப்பவர்கள் எந்த நிலையிலும் திருட்டு போன்ற ஒழுக்கக் கேடான செயல்களில் ஈடுபட மாட்டார்கள். 

"அதுபோல் திருடுபவர்கள் எல்லோருமே வயிற்றுக்கு இல்லாததால்தான் திருடுகிறார்கள் என்பதும் சரியல்ல. உழைக்காமல் வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள்தான்  திருடர்களில் கணிசமான பகுதியினர்.

"ஆனால். நாட்டில் மழை பெய்யாமல் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும்போது அதுவரை நேர்மையாக இருந்தவர்கள் பலரும் ஒழுக்கம் தவறி, திருட்டு  போன்ற செயல்களில் ஈடுபடத் தொடங்குவார்கள். 

"இப்போது திருட்டுக்கள் அதிகரித்திருப்பது அதனால்தான். வறுமையின் கொடுமையைத் தாங்க முடியாமல் திருடத் தலைப்பட்டவர்களை தண்டனை என்ற பெயரில் மேலும் துன்பத்துக்கு ஆளாக்குவது சரிதானா என்ற கேள்வி எனக்குள் எழுகிறது."

"வேடிக்கையாக இருக்கிறது அமைச்சரே! இவர்களுக்கெல்லாம் தண்டனை கொடுக்காமல் பரிசுகள் வழங்கி கௌரவிக்க வேண்டும் என்கிறீர்களா?" என்றான் அரசன் எகத்தாளத்துடன்.

"நான் அப்படிச் சொல்லவில்லை. நாட்டில் மழை பொய்த்தால் அது பல ஒழுக்கமானவர்களையும் தவறான செயல்களில் ஈடுபட வழி வகுக்கும் என்பதை உணர்ந்து, ஒரு நல்ல அரசர் மக்களின் துன்பத்தைக் குறைக்கும் செயல்களில் ஈடுபட வேண்டும்."

"உதாரணமாக?"

"அரசுப் பெட்டகத்தில் உள்ள பொக்கிஷத்தைப் பயன்படுத்தி, கோவில்களிலும் சத்திரங்களிலும் நடக்கும் அன்னதானத்தை அதிகப்படுத்தலாம். கிணறு, குளங்களை வெட்டுதல், ஆழப்படுத்துதல் போன்ற வேலைகளைத் துவங்கி, வேலை இல்லாமல் தவிப்பவர்களுக்குக் குறைந்த அளவு ஊதியமாவது கிடைக்க வகை செய்யலாம். இன்னும் எவ்வளவோ செய்யலாம். இவற்றைச் செய்வதால்  மழை பொய்த்ததால் விளைந்த வறுமையினால் உந்தப்பட்டு, நல்ல மனிதர்கள் சிலர் கூட, திருட்டு போன்ற ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க முடியும். நாட்டில் குற்றங்களும் குறையும்."

அமைச்சர் தயக்கத்துடன் மன்னனின் முகத்தைப் பார்த்தார்.

சந்திரசூடன் முகத்தில் இருந்த கோபச் சிவப்பு மாறி, சிந்தனை ரேகைகள் படர்ந்திருந்தன.

குறள் 20:
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.

பொருள்:
நீர் இன்றி இவ்வுலகில் யாரும் வாழ முடியாது. மழை பெய்யாவிடில், மக்களிடம் ஒழுக்கம் இருக்காது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

2 comments:

  1. Hi Sir,

    Currently, I am developing an Thirukural android app mainly to generate interest among children to read and understand thirukural. I would like to add your stories in the app, since it would be a useful way to understand and remember kural. May I have your permission to do that sir?

    ReplyDelete
    Replies
    1. Yes, you can, provided you give the link to this site. I am sorry for the delayed response. I had missed seeing your comment.

      Delete